Show all

சமூக வலைதளக் கணக்குகளுக்கும் ஆதார் கட்டாயமா!

என்ன தெரிவித்தது உச்ச அறங்கூற்றுமன்றம்! சமூக வலைத்தள கணக்குகளை ஆதார் உடன் இணைக்க வேண்டுமா? 

28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியா முழுவதும் அனைவருக்கும் ஒரே அடையாள அட்டை என்று அம்சத்துடன் ஆதார் அட்டையை, இந்தியாவை ஆளும் வாய்ப்பில் உள்ள பாஜக அரசு கொண்டு வந்தது. இதனுடன் வருமான வரி கணக்கிற்கான எண்ணையும் இணைக்க வேண்டும் என்ற அறிவுறுத்தப்பட்டது.

மேலும் செல்பேசிகளுக்கான செறிவட்டைகள், வங்கி கணக்கு தொடங்குதல், அரசின் சேவைகள் பெறுதல் போன்றவற்றிற்கு ஆதார் கட்டாயம் என்று கூறப்பட்டது. இருப்பினும் குறிப்பிட்ட சில விசயங்களுக்கு ஆதார் கட்டாயம் இல்லை என்று உச்ச அறங்கூற்று மன்றம் உத்தரவிட்டது.

இந்த சூழலில் சமூக வலைத்தளக் கணக்குகளையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று அஸ்வினி என்பவர் பொதுநல வழக்குத் தலைப்பில் மனு ஒன்றை உச்ச அறங்கூற்றுமன்றத்தில் பதிகை செய்திருந்தார்.

இதன் மீது நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது, அனைத்து வழக்குகளையும் நாங்கள் விசாரிக்க வேண்டும் என்று தேவை இல்லை. வேண்டுமெனில் சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் வழக்கை பதிகை செய்யுங்கள் என்று அறங்கூற்றுவர்கள் கூறினர்.

இதனை ஏற்றுக் கொண்டு மனுதாரர் வழக்கை திரும்பப் பெற்றார். இதையடுத்து சமூக வலைத்தளக் கணக்குகளோடு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்வதாக உச்ச அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. 

ஆக தற்போதைக்கு சமூக வலைதளக் கணக்குகளுக்கு ஆதார் கட்டாயம் இல்லை. இந்த மனுதாரர் சென்னையில் வழக்க தொடரலாம் தொடராமலும் போகலாம்; வேறு யாராவது வழக்கு புதியதாகத் தொடரலாம். அது வரை சமூகவலைதளக் கணக்குகளுக்கு ஆதார் கட்டாயம் இல்லை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,306.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.