Show all

எழுபத்தியேழாவது விடுதலைநாள்!

பிரித்தானியர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று 76 ஆண்டுகள் நிறைவடைகிற நிலையில் இந்தியாவிற்கு இன்று 77வது விடுதலைநாள் ஆகும்.

30,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5125. 
ஆங்கில ஆண்டு 1947ல் ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் நாள் இந்தியாவுக்கு பிரித்தானியர் விடுதலை வழங்கிச் சென்றனர். 1948 ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் நாளில் இரண்டாவது விடுதலை நாள் அமைந்தது.

அந்த வகையில் இன்று, விடுதலை பெற்று 76 ஆண்டுகள் நிறைவடைகிற நிலையில் இந்தியாவிற்கு இன்று 77வது விடுதலைநாள் ஆகும்.

இந்தியாவின் 77வது விடுதலைநாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட உள்ளது. இதை யொட்டி தலைநகர் டெல்லி செங்கோட்டையில் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியும் மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநிலங்களின் முதல்வர்களும் இந்தியக்கொடி ஏற்ற உள்ளனர்.

தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி இன்று காலை 7.30 மணி அளவில் டெல்லி செங்கோட்டையில் இந்தியக்கொடியை ஏற்றி உரையாற்ற உள்ளார், விழாவில் பல்வேறு துறைகளை சேர்ந்த 1,800 சிறப்பு விருந்தினர்களும் பங்கேற்கின்றனர், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைஅமைச்சர், மூத்தஅமைச்சர்கள், பேரறிமுகங்கள் பங்கேற்க இருப்பதால் செங்கோட்டையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 

கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாமல் இந்த ஆண்டு விடுதலைநாள் விழா நடைபெறுகிறது. இதன்காரணமாக பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். ஒன்றிய பாதுகாப்பு காவலர்கள் படை, சிறப்பு பாதுகாப்பு குழுவின் படை, ஒன்றிய பாதுகாப்பு படைகள், டெல்லி காவல்துறையினர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். செங்கோட்டையை சுற்றி 200 மீட்டர் தொலைவு வளாகத்தில் ஒட்டுமொத்தமாக 10,000 பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர், 

செங்கோட்டை வளாகத்தில் அதிநவீன கருவிகள் மூலம் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். முதன்மை இடங்களில் முகங்களை அடையாளம் காணும் 1,000 அதிநவீன படக்கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. உயரமான கட்டிடங்களில் குறிதவறாமல் சுடும் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர். உலங்கிகளை கண்டறியும் ரேடார் பொருத்தப்பட்டிருக்கிறது.

செங்கோட்டையில் விடுதலைநாள் விழா நடைபெறும்போது பட்டங்களை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி பட்டங்களை பறக்கவிட்டால் அவற்றை பிடிக்க 153 பேர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,706.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.