01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சூபால் மாவட்டத்தில் பைப்ரா வட்டாரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோஷி பிரதேசத்தில் உள்ள கிராமம் பாத்ரா உத்தார். இக்கிராமத்தைச் சேர்ந்த வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள அமினா கதூன் அக்கம்பக்கத்து கிராமங்களுக்குச் சென்று தனது வீட்டுக்கான கழிப்பறை கட்டுவதற்காக பிச்சை எடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை இக்கிராமத்தில் நடைபெற்ற விழாவில் தனிப்பட்ட இப்பெண்ணின் முயற்சியை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். தனது வீட்டுக்கு கழிவறை கட்டும் பணியில் ஈடுபட்ட ஒரு கொத்தனார் மற்றும் ஒரு சித்தாள் ஆகியோர் தங்கள் ஊதியத்தை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டதையும் விழாவில் அமினா பகிர்ந்துகொண்டார். கணவரை இழந்த 40 வயது அமினா பதின்பருவ சிறுவனின் தாய். இவர் ஜீவனத்துக்காக கூலிவேலை செய்துவருகிறார். வீட்டில் ஒரு கழிப்பறை கட்டிக்கொள்வதற்காக அதற்கான நிதிஉதவி கேட்டு வட்டார அதிகாரிகளை நாடியபோது அவர்கள் இவரைப் புறக்கணித்துள்ளனர். இதனால் சற்றே வேதனையுற்றாலும் அமினா மனம் தளரவில்லை. யாரிடமும் சென்று கடன் கேட்கும் நிலையில் அவர்களது வாழ்க்கை இல்லை. என்ன செய்வது என யோசித்த போதுதான் பிச்சை எடுத்தாவது கழிப்பறை கட்டி முடிக்கவேண்டும் என்ற முடிவுக்கு அவர் வந்தார். அதை சாதித்தும் காட்டினார். தூய்மை இந்தியா திட்டத்தை பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்படுவதோடு சரி. உதவி நாடிவரும் ஏழை எளிய மக்களுக்கு அரசும், அதிகாரிகளும் எவ்வளவு அக்கறையின்மையோடு நடந்துகொள்கிறார்கள் என்பதையே இந்நிகழ்வு வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,697
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.