Show all

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தில்லுமுல்லு! 26 ஆண்டுகளுக்குப் பிறகு அம்பலம்

29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ராஜீவ் காந்தி கொலை வழக்கு முறைகேடாக நடத்தப் பட்டிருப்பது 26 ஆண்டகளுக்குப் பின் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனின் வாக்குமூலத்தை தவறாகப் பதிவு செய்ததை ஓய்வு பெற்ற நடுவண் புலனாய்வுத் துறை அதிகாரி உச்ச அறங்கூற்றுமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நிகழ்த்தப் பட்ட கொடுமை 26 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

அதாவது, வழக்கை விசாரித்த நடுவண் புலனாய்வுத் துறை அதிகாரிகளுள் ஒருவரான தியாகராஜன் (ஓய்வு) உச்ச அறங்கூற்றுமன்றத்தில் பதிகை செய்திருக்கும் பிரமாணப் பத்திரத்தில், 19 அகவையில் இருந்த ஏ.ஜி. பேரறிவாளன் கொடுத்த வாக்குமூலத்தில் ஒரு பகுதியை தான் பதிவு செய்யவில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

அதாவது, அறிவு என்று அழைக்கப்படும் பேரறிவாளன், 9 வோல்டுகள் கொண்ட இரண்டு மின்கலன்களை வாங்கிக் கொடுத்தபோது, அவை எதற்காக என்று தனக்குத் தெரியாது என்று கூறியிருந்ததை, தான் வாக்குமூலத்தைப் பதிவு செய்யும் போது சேர்க்காமல் விட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், மின்கலன்கள் எதற்காக வாங்கப்படுகிறது என்பது பேரறிவாளனுக்கு தெரிந்திருக்கவில்லை. ஆனால், வாக்குமூலத்தைப் பதிவு செய்யும் போது அதனை நான் விட்டுவிட்டேன். ஏன் என்றால், அதை பதிவு செய்தால், அது குற்றமிழைக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்ளும் சாட்சியமாக மாறிவிடும். ஆனால் நான் பதிவு செய்வது குற்ற ஒப்புதல் வாக்குமூலம். எனவே ஒட்டுமொத்த வாக்குமூலமும் பயனற்றதாகப் போய்விடும் என்பதால் அந்த பகுதியை நீக்கிவிட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

இது ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறுதான்.

தமிழ்தொடர்ஆண்டு-5093ல் (1991) முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட போது பயன்படுத்திய வெடிகுண்டுகளை இயக்கப் பயன் படுத்தப்பட்ட இரண்டு மின்கலன்களை வாங்கிக் கொடுத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் கடந்த 26 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்த நிலையில், வழக்கு விசாரணை முடியும் வரை, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்குமாறு பேரறிவாளன் தரப்பில் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், பேரறிவாளன் மீதான தண்டனையை நிறுத்தி வைப்பது குறித்து நடுவண் அரசிடம், 2 வார காலத்துக்குள் பதில் கேட்டுள்ளது உச்ச அறங்கூற்றுமன்றம்.

இந்த வழக்கு பற்றி தனது கீச்சுப் பக்கத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருப்பதாவது, பேரறிவாளனின் வாக்குமூலத்தை தவறாக பதிவு செய்ததை நடுவண் புலனாய்வுத் துறை முன்னாள் அதிகாரி உச்சஅறங்கூற்றுமன்றத்தில் ஒப்புக்கொண்டார். பேரறிவாளன் விரைவில் விடுதலையாக வாய்ப்பு. சிறைக்கதவு நிரந்தரமாக திறக்கட்டும்! என்று பதிவிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனது மகன் பேரறிவாளன் பொங்கலுக்குள் விடுதலை ஆவார் என்ற நம்பிக்கை இருப்பதாக அவரது தாயார் அற்புதம்மாள் தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,607

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.