29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: எகிப்துக்கும், சூடானுக்கும் இடையில் ‘பிர் தாவில்’ என்ற பகுதி இருக்கிறது. மனிதர்கள் அற்ற இந்த பகுதிக்கு இதுவரை எந்த நாடும் உரிமை கோரியது இல்லை. தற்போது இந்தப் பகுதியை மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுயாஷ் தீட்சித் என்ற நபர் சொந்தம் கொண்டாடி இருக்கிறார். மேலும் தன்னை அந்த நாட்டின் அரசனாக அறிவித்து உள்ளார். அந்த நாட்டிற்கு, ‘தீட்சித் அரசாங்கம் பெயரிட்டு புதிய கொடி ஒன்றையும் வடிவமைத்து இருக்கிறார். இந்த நாடு பார்ப்பதற்கு பாலைவனம் போல இருந்தாலும் உழவு செய்தால் வளமாக மாறும் வல்லமை கொண்ட நாடு என கூறப்படுகிறது. உலகிலேயே இந்த ஒரு நாட்டிற்கு மட்டும்தான் விக்கிபீடியா ‘0 மக்கள் தொகை என்ற தகுதியைக் கொடுத்து இருக்கிறது. இனி அந்த நாட்டில் குடியேற போகும் நபரான தீட்சித் தான் அந்த நாட்டின் முதல் குடிமகனாக இருப்பார். மேலும் இந்த நாடு 2061 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. தீட்சித் தனது நாடு எப்படி இருக்கும் என விலாவரியாக கூறியிருக்கிறார். அவர் தனது முகநூல் பதிவில், என்னுடைய நாட்டில் வறுமையும் மோசமான சட்டமும் இருக்காது. மக்கள் பெரிய அளவில் சுதந்திரத்தோடு இருக்கலாம். குறிப்பாக என்னுடைய நாடுதான் உலகிலேயே அதிக அறிவு பொருந்திய நாடாக இருக்கும். என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பகுதிக்கு நீர் ஆதாரம் என்று பெரிய அளவில் எதுவும் இல்லை. இரவில் திடீர் என்று பாலைவன மழை போல சமயங்களில் பெய்யும். ஆனால் இங்கு செடி நடும் பட்சத்தில் அடிக்கடி மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இங்கிருந்து செங்கடல் சில கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. தீட்சித் செடி விதையை அங்கு நட்டு இருக்கிறார். அதன் வளர்ச்சியில் இருந்து இந்த பூமியின் வளம் தெரியும். இந்த நாட்டில் பெரிய பிரச்சனையாக இருக்க போவது தீவிரவாத தாக்குதல் மட்டுமே. யாரும் கவனிக்காமல் இருந்த நாடு இப்போது தீட்சித் மூலமாக தீயாகி இருக்கிறது. இந்த இடத்தில் இருந்து 90 கிமீ தூரத்தில் இருக்கும் சூடானில் தான் ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல்கள் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே இந்த புதிய நாடு உருவானால் பெரிய அளவில் பாதுகாப்பாக இருக்காது. இவர் தன்னை ஒரு நாட்டின் அரசராக அறிவித்த அடுத்த நொடியில் உலக அளவில் பிரபலமாகி விட்டார். உலகில் நிறைய பேர் இவரை பேட்டி எடுக்க வரிசை கட்டி கத்துக் கொண்டு இருக்கின்றனர். அந்த பகுதியை எப்படி கண்டுபிடித்தார் என மொத்த உலகமும் அவரிடம் கேட்டுக் கொண்டு இருக்கிறது. இன்னும் சில நாளில் அவர் அந்த நாட்டில் குடியேற இருப்பதாக உறுதி அளித்துள்ளார். இவர் தனது முகநூலில் இடுகை இட்டதில் இருந்து இணையத்தவர்கள் கருத்துக்களால் கதறடித்து வருகின்றனர். நிறைய பேர் இப்போதே எனக்கு ஒரு மனை ஒதுக்குங்க என்று கேட்டு உள்ளனர். சிலர் கடல்காட்சி மனை கேட்டு உள்ளனர். இன்னும் சிலர் நையாண்டியாக ‘ஒருவேளை இதுதான் புதிய இந்தியாவோ’ என்றும் கேட்டுள்ளனர். அரசியாகி அணிசெய்ய காதல் விண்ணப்பமும் அளித்துள்ளனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,607
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.