தேசிய சரக்கு மற்றும்
சேவை வரி மசோதா (ஜி.எஸ்.டி.மசோதா) வரவிருக்கும் பாராளுமன்றக்
கூட்டத்தொடரில் நிறைவேறும். அதே போன்று வங்கியில்
பணம் கட்ட முடியாமல் திவால் நோட்டீஸ் விடுவது குறித்த மசோதாவும் பாராளுமன்றத்தின் இந்த
கூட்டத்தொடரில் நிறைவேறும் என்று நடுவண் நிதியமைச்சர் அருண்ஜெட்லி நம்பிக்கை தெரிவித்தார். பட்ஜெட் கூட்டத்தொடரின்
2வது பகுதியான பாராளுமன்ற கூட்டத்தொடர் வருகிற ஏப்ரல் 20ம்தேதியன்று தெடங்குகிறது.
இந்தக் கூட்டத்தொடரில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா(ஜி.எஸ்.டி.) மற்றும் திவால் நோட்டீஸ்
அளிப்பவர்கள் குறித்த மசோதா நிறைவேற்ற அரசு முயற்சி மேற்கொண்டிருக்கிறது. இது குறித்து டெல்லியில்
நேற்று நடந்த ஆசியமுன்னேற்ற மாநாட்டில் நடுவண் அமைச்சர் அருண்ஜெட்லி கூறியதாவது, ஜி.எஸ்.டி.மசோதா
ஏற்கனவே லோக்சபாவில் நிறைவேறியுள்ளது. இந்த மசோதா தற்போது ராஜ்யசபாவில் நிலுவையில்
உள்ளது. அங்கு ஆளும் என்.டி.ஏ.கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை. ராஜ்யசபாவில் இந்த
மசோதாக்கள் நிறைவேறிய பின்னர் 29மாநிலங்களில் பாதி மாநிலங்கள் அந்த மசோதா சட்டமாக ஒப்புதல்
அளிக்க வேண்டும். எனவே ஜி.எஸ்.டி. மசோதா சட்டமாகி செயல்பாட்டுக்கு வருவதற்கு அக்டோபர்
மாதம் 1ம் தேதி ஆகிவிடும். நடப்பு பாராளுமன்றம் ஏற்கனவே வரலாற்று சிறப்பு மிக்க மசோதாவை
கடந்த 2ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவேற்றியது. இதே போன்று மேலும்
2 மசோதாக்கள் பாராளுமன்றத்தில் நிறைவேறும் என நம்புகிறேன். திவால் நோட்டீஸ் மற்றும்
ஜி.எஸ்.டி.மசோதா ஆகியவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது பகுதியில்நிறைவேறும் என அரசு எதிர்பார்க்கிறது.
பாராளுமன்றம் கடந்த வாரம் ஆதார் மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதா மூலம், இந்திய குடிமகன்
ஒவ்வொருவருக்கும் பிரத்யேக அடையாள எண் தரப்பட்டிருக்கும். இந்த எண் மூலம் அரசு மானியம்
மற்றும் இதர சலுகைககள் உரிய பயனாளிகளுக்கு அளிக்கப்படும். ரியல் எஸ்டேட் மசோதாவும்
ராஜ்யசபாவில் நிறைவேறியுள்ளது. ஜி.எஸ்.டி.மசோதாவும்
திவால் நோட்டீஸ் மசோதாவும் நிறைவேறிய பின்னர் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் பல
சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உலகப்பொருளாதாரம்
மந்தமாக இருந்தாலும் இந்திய பொருளாதாரம் வலிமை மிக்கதாக வளர்ச்சியை நோக்கி செல்வதாக
இருக்கும். இந்தியாவில் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் உலகநாடுகளில்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகச்சிறப்பானதாக இருக்கும். சட்டமாற்றங்கள் மற்றும்
ஆதார வளங்கள் வலிமைப்படுத்த வேண்டும் என நாங்கள் சிறப்பு முயற்சிகள் மேற் கொண்டிருக்கிறோம். இன்னும் சில மாதங்களில்,
ஒரு கட்டமைப்பு மாற்றம் வரும். அந்த மாற்றங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாகும்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமெடுப்பதற்கு பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.
நமது வளர்ச்சி என்பது வறுமையை ஒழிக்க வேண்டும் என்கிற இலக்கை மையமாக கொண்டே இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.