Show all

நீட் தேர்வே தேவையில்லாத அடாவடி! அதிலும் குளறுபடியா? தமிழகத் தேர்வு மையங்கள் தெலுங்கானாவில்

28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசு இடைநிலைக் கல்வி வாரியம் நீட் தேர்வை எந்த லட்சணத்தில் நடத்தகிறது என்பதை வெட்டவெளிச்சமாக்குகிறது அதன் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தேர்வு மையங்களின் பட்டியல். தமிழகத்தில் 10 தேர்வு மையங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக 2 இடங்கள் இருக்கிறதே என்று தேடிப்பார்த்தால் அவை இரண்டும் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த இடங்கள்.

பொது மருத்துவப் படிப்பு, மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு 23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120 அன்று (06.05.2018) நடைபெறும் என்று நடுவண் அரசு இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது. நேற்று முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கிய நிலையில்,

சென்னையிலேயே அதிக அளவில் மாணவர்கள் தேர்வு எழுதுவதை குறைக்கும் வகையில் காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட இடங்கள் கூடுதலாக தேர்வு மையங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 8 மையங்களில் மட்டுமே தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு அது 10 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழக தேர்வு மையங்களின் பட்டியலைப் பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியான விசயம் நம்ம தமிழ்நாடு வரைபடத்திலேயே இல்லாத கம்மம், ரெங்கா ரெட்டி என்ற இரண்டு இடங்கள் புதிதாக இதில் இடம்பெற்றுள்ளன. என்னடா இது புதுக்கதையாக இருக்கும் இப்படியான இடங்கள் எங்கே இருக்கிறது என்று தேடிப்பார்த்த போது தான் நடுவண் அரசு இடைநிலைக் கல்வி வாரியம் எந்த லட்சணத்தில் தேர்வு மையங்கள் பற்றிய விவரங்களை மாணவர்களுக்கு அளித்துள்ளது என்பது அம்பலமாகியுள்ளது.

தமிழ்நாடு தேர்வு மையங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள கம்மம் மற்றும் ரெங்கா ரெட்டி இரண்டு இடங்களும் தெலங்கானா மாநிலத்தில் இருக்கிறது. இது எதேச்சையாக நடந்த குளறுபடியா அல்லது திட்டமிட்டே தவறுதலாக இந்த மையங்கள் மாணவர்கள் தேர்வு செய்துவிட்டு கடைசியில் தேர்வுமையம் எங்கே என்று தெரியாமல் தேர்வு எழுத வரமாட்டார்கள் என்ற தந்திரமா என்பது நடுவண் அரசு இடைநிலைக் கல்வி வாரியத்திற்;கே வெளிச்சம்.

நீட் தேர்வுக்கு ஒரே மாதிரியான வினாத் தாள் இல்லை தமிழ் மொழியில் கேட்கப்பட்ட கேள்விக்கும், குஜராத் மாநிலத்தில் நடந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு வேறுபாடுகள் இருந்ததாக கடந்த ஆண்டே புகார் எழுந்தது. ஆனால் இந்த ஆண்டு தேர்வு மைய விசயத்திலேயே குழப்புகிறது நடுவண் அரசு இடைநிலைக் கல்வி வாரியம்.

ஏற்கனவே நடுவண் அரசு இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தில் பயிலாத மாணவர்கள் நீட்டை எண்ணி பயந்து வரும் நிலையில், தவறான தகவல்கள் மூலம் மாணவர்களை மேலும் குழப்பலாமா?

அதே சமயம் மாணவர்களின் மருத்துவ படிப்பை தீர்மானிக்கும் நீட் தேர்வுக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பில் மாணவர்கள் மீது நடுவண் அரசு இடைநிலைக் கல்வி வாரியம்இருக்கும் அக்கறை இவ்வளவு தானா என்பதையும் இந்த குளறுபடி வெட்டவெளிச்சம் போட்டு காட்டுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,694

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.