இலவச எரிவாயு இணைப்பு பெற்ற கிராம மக்கள் பலர், அதை பயன்படுத்துவதற்கு பதில் மீண்டும் விறகு அடுப்பு மற்றும் வறட்டி பயன்பாட்டுக்கு மாறியுள்ளனர். எரிவாயு விலை உயர்வே இதற்கு முதன்மைக் காரணம் என கூறப்படுகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,130.
09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கிராமங்களில் உள்ள ஏழை பெண்கள் அடுப்பு எரிக்க விறகு பயன்படுத்துகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசடைவதோடு, நுரையீரல், சுவாச கோளாறுகளும் ஏற்படுகின்றன. இதில் இருந்து பெண்களை மீட்கிறோம் என்று காரணம் சொல்லி- உங்கள் மானியத்தை விட்டுக் கொடுங்கள் என்று நடுத்தட்டு மக்களிடம் கேட்டு-
அரசுக்கு ஏற்படும் மாதாமாத மானியச் செலவைக் குறைத்துக் கொண்டது நடுவண் மோடி அரசு. இது அரசுக்கான நிரந்தர மாத வருமானம்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் கடந்த மாதம் வரை இந்த திட்டத்தின் கீழ் 7.19 கோடி பேருக்கு மட்டுமே ஒருமுறை இலவச எரிவாயு மற்றும் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
தங்களது எரிவாயு மானியத்தை விட்டுத்தர வேண்டும் என நடுவண் அரசு விடுத்த அழைப்பால், 1.04 கோடி பேர் மானியத்தை விட்டுக்கொடுத்தனர். தமிழகத்தில் மட்டும் 6.6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர்.
இதனால், கரி, விறகு அடுப்பு பயன்படுத்தும் பழக்கம் மலையேறிவிடும் என்று சொல்லப்பட்டது. ஆனால், எதிர்பார்த்ததற்கு நேர் மாறாக கிராம மக்கள் பலர் எரிவாயு அடுப்பு பயன்படுத்துவதையே மறந்து விட்டனர். ஒரு புறம் மானியத்தை விட்டுத்தர வேண்டுகோள் விடுத்து இலாபம் ஈட்டி வரும் அரசு, எரிவாயு விலையை மாதம் சராசரியாக 2 ரூபாய் வீதம் உயர்த்தி பயனடைந்து வந்துள்ளது.
சந்தை விலையில்தான் எரிவாயு வாங்க வேண்டும். மானிய விலை போக எஞ்சிய தொகை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். அன்றாடங்காய்ச்சியான அவர்கள் சந்தை விலையை கொடுத்து எரிவாயு உருளை வாங்க முடியாமல் அல்லல்படுகின்றனர்.
இதுதொடர்பாக பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் கிராமங்களில் மேலாய்வு எடுக்கப்பட்டது. இதில் 98 விழுக்காடு ஏழை குடும்பங்கள் எரிவாயு அடுப்பை விட்டு விட்டு, இவர்கள் விறகு அடுப்பு, வறட்டி, சுள்ளிகள் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
பல கிராமங்களில் முதலில் ஓரிரு எரிவாயு உருளை பயன்படுத்தி விட்டு எரிவாயு அடுப்பை ஓரங்கட்டி வைத்து விட்டனர். பரம ஏழைகளாக வாழும் கிராம மக்களுக்கு எரிவாயு இணைப்பு கட்டுப்படி ஆகவில்லை.
வங்கிக்கணக்கில் நேரடி மானியம் வருகிறது என்பதை பலர் அறிந்திருக்கவில்லை. அப்படியே தெரிந்தாலும், வங்கி பரிவர்த்தனைகள் செய்து பழக்கம் இல்லாததால் அந்த பணம் வங்கியிலேயே முடங்கிக் கிடக்கிறது.
மொத்தமாக பணம் கொடுத்து எரிவாயு உருளை வாங்குவது மலைப்பாக உள்ளதாலும், எரிவாயு உருளை விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் இந்த திட்டம் நடைமுறை சாத்தியமின்றி போய்விட்டது என ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. ஏழைகளுக்கு ஏற்ற வகையில் இந்தத் திட்ட நடைமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஆய்வு நடத்தியவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.