Show all

ஸ்டாலினின் தலைவலி! திமுகவுடன் கூட்டணிக்கு பாமக தயார்! விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணியில் இருக்குமா? விலகுமா

 

 

 

03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தேர்தலுக்கு மட்டும் கூட்டணி வைப்பதும், தேர்தலுக்கு பிறகு தனித்து நிற்பதும் ஒரு காலத்தில் பொதுவுடைமை கட்சிகளின் இயல்பாக இருந்து வந்தது.

ஆனால் அண்மைக் காலமாக பாமக அந்த வகையான நிலைபாட்டில் இருந்து வருகிறது. தேர்தலுக்கு மட்டுமான கூட்டு என்பதால் அதிகமான வெற்றி வாய்ப்பு என்பது ஒன்றே இலக்காக இருக்கும். அதனால் பாமகவிற்கு இந்தக் கட்சியுடன் மட்டும் சேர்ந்து விடவே கூடாது என்கிற எந்தக் கட்சியின் மீதான வெறுப்பும் கிடையாது.

இந்த நிலையில் கடந்த கிழமை அதிமுகவோடு பாமகவின் ஒப்பந்தம் முடிந்துவிட்டது என்று ரகசியத் தகவல் கிடைத்த நிலையில், இன்னொரு பக்கம் திமுகவுக்கும் கூட்டணிக் கதவைத் திறந்தே வைத்திருந்தது பாமக.

தேர்தல் கூட்டணி தொடர்பாக தமிழகத்தில் அதிரடி வேலைகளுக்காக பாஜக தமிழகப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் நியமிக்கப் பட்டுள்ளார். அதன் பொருட்டு காதலர் நாளில் பியூஷ் கோயல் தமிழகம் நேற்று வந்துள்ளார். பியூஷ் கோயல் தமிழகம் வருவதற்கு முன்பாகவே, பாமகவின் இளைஞரணித் தலைவர் அன்புமணியோடு பேசுவதற்காகத் தொடர்ந்து முயன்றபோதும் கோயலின் இணைப்புக்கு அன்புமணி கிடைக்கவில்லை. தொடர்ந்து முயன்றபோதும் அன்புமணியின் தொடர்பு கிடைக்காததால், அன்புமணிக்கு நெருக்கமான தொழிலதிபர் மூலம் அவரைத் தொடர்புகொண்டார்.

இந்த நிலையில்தான் அன்புமணி திமுக தலைவர் ஸ்டாலின் மருமகனான சபரீசன் சந்திப்பு பற்றிய தகவல்கள்; நடுவண் அரசுக்குத் தெரியவந்தது. இதை தொடர்ந்து அன்புமணியை அவருக்கு நெருக்கமான மேலும் சில நண்பர்கள் மூலம் தொடர்புகொண்ட பாஜக மேலிடம், 'அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள்' என்று சொல்லி தொகுதிகளுக்கு அப்பாற்பட்ட சில விசயங்களை பாஜகவே செய்து தரும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

அதேநேரம் திமுக தரப்பில் 'பாமக-தேமுதிக ஆகிய இரு கட்சிகளும் அதிமுக அணியில் இடம்பெற்றால் அதுதான் பெரும்பான்மைமக்கள் ஆதரவு கூட்டணி போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும். எனவே இரண்டில் ஒரு கட்சியை திமுக அணிக்குள் கொண்டுவர வேண்டும்' என்றும் ஸ்டாலினிடம் சொல்லப்பட்டது. இதற்கு ஸ்டாலின் பச்சைக் கொடி காட்டிய நிலையில்தான் கடைசி கட்டத்தில் திமுக அணிக்குள் பாமகவை இடம் பெறச் செய்வதற்கான தீவிர நகர்த்தல்கள் நடைபெற்று வருகின்றன.

பாமக திமுகவை நோக்கித் திரும்பினால் திமுக அணியில் நீண்டகாலமாக இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் என்னாகும் என்ற கேள்வியும் பெரிய அளவில் எழுந்து நிற்கிறது.

பாமக இருக்கும் அணியில் இடம்பெற மாட்டோம் என்பதைக் கொள்கை முடிவாகவே வைத்திருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன். சில மாதங்களுக்கு முன் திமுக பொருளாளர் துரைமுருகன் தொலைக்காட்சிப் பேட்டியில், 'திமுக கூட்டணியில் காங்கிரஸ், முஸ்லிம் லீக் தவிர வேறு யாரும் இல்லை. கடைசி நேரத்தில் வருபவர்களும் உண்டு. எங்களுடனே இருப்பவர்கள் விலகிக் கொள்வதும் உண்டு' என்று பேட்டியளித்திருந்தார்.

அப்போது திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இருக்கிறதா என்பதை திமுகதான் தெரிவிக்க வேண்டும் என்று திருமாவளவன் பேட்டியளித்தார். அதன்பின் ஸ்டாலினை சந்தித்தபோது கூட, 'பாமகவைக் கூட்டணியில் சேர்த்துக்கொள்வது என்பது உங்கள் விருப்பம். உங்கள் முடிவு அதுவாக இருந்தால் நாங்கள் அதற்குத் தடையாக இருக்க மாட்டோம். அதேநேரம் பாமக-பாஜக இருக்கும் அணியில் எங்களால் இடம்பெற முடியாது' என்று நேரடியாகவே சொல்லியிருக்கிறார். அப்போது ஸ்டாலின் திருமாவளவனிடம், 'அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. நீங்க நம்ம கூட்டணியிலதான் இருக்கீங்க' என்று பதில் தெரிவித்திருக்கிறார். அதன் அடிப்படையில்தான் தொடர்ந்து திமுகவுடன் தோழமை பாராட்டி வந்தார் திருமாவளவன்.

இப்போது திமுக கூட்டணிக்கு பாமக வரும் என்ற செய்திகள் வரும் நிலையில் திருமாவளவனும் தன் கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால், ஸ்டாலின் நெருங்கிய வட்டாரத்திலோ, 'பாமக, சிறுத்தைகள் இரண்டுமே திமுக அணியில் இடம்பெற்றாலும் நல்லது என்று நினைக்கிறார் ஸ்டாலின். கடந்த முறை செயலலிதாவிற்கு கிடைத்த வாய்ப்பு போல, தற்போது திமுக அணிக்கு நாற்பதுக்கு நாற்பது வெல்ல நல்ல வாய்ப்பிருக்கும் நிலையில் அனைவரையும் ஒருங்கிணைத்து தேர்தலைச் சந்தித்தாலும் நல்லது என்றே நினைக்கிறார் ஸ்டாலின். ஆனால், திமுக அணிக்குள் பாமக வரும் பட்சத்தில், திருமாவளவனை தக்கவைத்துக் கொள்வது என்பது திமுகவுக்கு இமாலய முயற்சிதான்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,064.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.