பொடிப் பொடியாக வெட்டப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டிருந்ததால் பண்ருட்டியில் பரபரப்பு நிலவியது. இது சென்னை தொடர்வண்டியில் கொள்ளையடிக்கப்பட்ட பணமா என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் குச்சிப்பாளையம் கிராமத்திற்கு காரில் வந்த மர்ம நபர்கள் சாக்கு மூட்டையை கொண்டு வந்து சாலையோரத்தில் கொட்டிச் சென்றனர். இதனால் சந்தேகமடைந்த மக்கள் அருகில் சென்று பார்த்த போது 100, 500, 1000 ரூபாய் நோட்டுக்களைப் பொடிப்பொடியாக வெட்டி எடுத்து வந்து கொட்டப்பட்டிருந்ததால் அதிர்ச்சியடைந்தனர். ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தமுடியாத அளவிற்கு துண்டுதுண்டாக வெட்டப்பட்டிருந்தன. இந்த ரூபாய் நோட்டுகளை கிராம மக்கள் வீடுகளுக்கு எடுத்து சென்றுள்ளனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் மக்கள் எடுத்து சென்ற ரூபாய் நோட்டுக்களையும், சாலையோரத்தில் கிடந்த ரூபாய் நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர். சாலையில் வீசப்பட்ட ரூபாய் நோட்டுகள் சென்னை தொடர்வண்டியின் மேற்கூரையில் துளையிட்டு கொள்ளையடிக்கப்பட்ட பணமா அல்லது கள்ள நோட்டுகளா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி சேலத்திலிருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு தொடர்வண்டிப் பெட்டியில் கொண்டு வரப்பட்ட கிழிந்த மற்றும் பழைய ரூபாய் நோட்டுகள் சுமார் ஐந்தரை கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இதுவரை துப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.