Show all

நாளை முதல் தொடங்குகிறது இயங்கலை வகுப்புகள்! பாதிக்கப்பட்ட கணியாமூர் பள்ளி மாணவர்களுக்கு

கணியாமூர் பள்ளி மாணவர்களுக்கு, கல்வி கற்பித்தலில் இடைவெளி தொடரக் கூடாது. அதன்பொருட்டு அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களைக் கொண்டு முதற்கட்டமாக இயங்கலை வகுப்புகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

10,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: கணியாமூர் தனியார் மேநிலைப் பள்ளியில் வன்முறை நடைபெற்று இயங்க முடியாத சூழலில், அந்தப் பள்ளி மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடாக இயங்கலை மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னச்சேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் ஐயத்திற்கு இடமான வகையில் உயிரிழந்த நிலையில், அவரது உயிரிழப்புக்கு நியாயம் கேட்டு பத்து நாட்களுக்கு முன்பு பள்ளியில் பெரும் வன்முறை நிகழ்ந்தது. 

இந்த வன்முறையின்போது, பள்ளியின் மாணவர் இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டும், ஊர் மக்களால் தூக்கியும் செல்லப்பட்டது. மேலும், பள்ளியில் உடமைகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டு, பள்ளி இயங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் அப்பள்ளியில் பயின்ற 3194 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது.

இந்த நிலையில், அப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு குறித்து பள்ளிக் கல்வித் துறையின் ஆலோசனையின் பேரில் மாவட்ட நிர்வாகம் ஆலோசனை நடத்தி வந்தது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சிக்கு வந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று செய்தியாளர்களிடம் கூறியது, 'பள்ளியில் நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வு வருத்தமளிக்கிறது. இருப்பினும் அப்பள்ளியில் பயின்ற 2694 பதின்ம மற்றும் 500 ஒன்றியப் பாடத்திட்ட மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு குறித்து முதல்வரும் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

அதன்படி அவர்களுக்கு கல்வி கற்பித்தலில் இடைவெளி தொடரக் கூடாது. அதன்பொருட்டு அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களைக் கொண்டு முதற்கட்டமாக இயங்கலை வகுப்புகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வகுப்புகள் நாளை முதல் தொடங்கும்.

இதையடுத்து, 9 முதல் 12 வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு பள்ளி அருகாமையில் உள்ள சில தனியார் பள்ளிகளுடன் ஆலோசனை நடத்தியதில், அவர்களும் ஒப்புக்கொண்டதன் பேரில், 15 வகுப்புகள் தயார் நிலையில் உள்ளது. அதில் வகுப்புகள் தற்காலிகமாக நடைபெறும். இந்த வகுப்புகளும் இதே பள்ளி ஆசிரியர்களைக் கொண்டே நடத்தப்படும். 50 பேருந்துகளை வழங்க தனியார் பள்ளி கூட்டமைப்பு முன்வந்துள்ளது.

இதனிடையே, நாளை பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தப்பட்டு, பெற்றோர்களின் கருத்தையும் அறிந்து, அவர்களது விருப்பத்தின் பேரிலே மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த முடிவுசெய்துள்ளோம்' என்று தெரிவித்துள்ளார்.

பேட்டியின்போது மாவட்ட ஆட்சியர் சர்வன்குமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பகலவன், ரிசிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்கேயன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.

மாணவர்கள் உளவியல் பாடாகப் பாதிக்கப்படுவதைத் தடுக்க நடமாடும் இயல்அறிவு ஆலோசனை மையம் செயல்படாதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில், 'அத்திட்டத்தில் பணிபுரிந்த பணியாளர்கள் பலர் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், தற்போது அதில் 7 பேர் மட்டுமே உள்ளனர்.

மாணவர்களின் மன அழுத்ததைப் போக்கும் வகையில், முதல்வரின் வழிகாட்டுதலில் ஒரு ஒன்றியத்துக்கு 2 மருத்துவர்கள் வீதம், 413 கல்வி ஒன்றியங்களுக்கு 800 மருத்துவர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் பயிற்சி வழங்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் அந்த ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் கிழமைகளில் ஒருநாள் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவர். இத்திட்டத்தை நாளை மறுநாள் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

அதேபோன்று சோக நிகழ்வு நடைபெற்ற நிலையில் மாணவர்கள் தங்களின் ஆற்றாமையை நண்பர்களிடமோ, ஆசிரியர்களிடமோ, பெற்றோர்களிடமோ பகிர்ந்து கொள்ள முடியாதவர்களின் வசதிக்காக 'மாணவர் மனசு எனும் பெட்டி' பள்ளி வளாகத்தில் வைக்கப்படும். இதில் மாணவர்கள் தங்களது மனதில் உள்ளதை எழுதி போடும் பட்சத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்டி திறந்து, மாணவரின் மனதில் உள்ளவற்றை அறிந்து அவருக்கு ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதில் தெரிவிக்க விருப்பமில்லை எனில் இதற்காக உருவாக்கப்பட்டுள்ள தனிப்பட்ட இணைய தளத்திலும் பதிவுச் செய்யலாம். அவற்றையும் கணக்கில் கொண்டு மாணவர்களுக்கு ஆலசோனை வழங்கப்படும் என்றார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,321.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.