பெரியார் சிலையின் கீழ் உள்ள கடவுள் இல்லை என்ற வாசகத்தை நீக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பெரியாரின் சிலைகளுக்கு கீழ் கடவுள் இல்லை, கடவுளை வணங்குகிறபவன் காட்டுமிராண்டி என்ற வாசகம் இடம்பெற்று இருக்கும். தமிழகம் முழுக்க பல இடங்களில் பெரியார் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னையை சேர்ந்த தெய்வநாயகம் என்பவர் உயர் அறங்கூற்றுமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுத்தார். அவர் தொடர்ந்திருந்த பொதுநல வழக்கில் தந்தை பெரியாரின் சிலைகளுக்கு கீழ் கடவுள் இல்லை, கடவுளை வணங்குகிறபவன் காட்டுமிராண்டி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியார் எந்த காலத்திலும் அவ்வாறு சொல்லவில்லை. எனவே அந்த வாசகங்களை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கை கடந்த முறை விசாரித்த சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில், இந்த வழக்கின் தொடர்பாக திக தலைவர் வீரமணி சார்பில் பதில் மனு ஒன்று பதிகை செய்யப்பட்டது. பெரியார் உயிருடன் இருக்கும்போதே தனக்கு சிலை வைத்து இதுபோல வாசகங்கள் பொறிக்கப்பட்டது. இதற்கான ஆதாரங்கள் உள்ளது என்றும் தெரிவித்திருந்தார். பல கல்வெட்டுகளையும் பெரியார் திறந்து வைத்துள்ளதாகவும், அதற்கான ஆதாரங்களையும் பதிகை செய்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த அறங்கூற்றுவர்கள் பெரியார் கூறியதற்கான ஆதாரங்கள் உள்ளது, அதனால் அந்த வாசகங்களை நீக்க வேண்டிய தேவை இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். பெரியார் சொன்ன கடவுள் இல்லை, கடவுளை வணங்குகிறபவன் காட்டுமிராண்டி என்பது சரி என்றுதான் சொல்கிறது தமிழ்மெய்யியல்! தமிழன் தனக்கு அப்பாற்பட்ட ஆற்றல்களை வணங்குகிறவன் அல்லன்; போற்றிக் கொள்கிறவன். தமிழர்கள்: நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்று தனக்கு அப்பாற்பட்ட, தனக்கு ஆதரவான, ஐந்திர ஆற்றல்களை போற்றிக் கொண்டவர்கள்; நடுகல் நாட்டி, கோயில் கட்டி விழா கொண்டாடியவர்கள். தமிழர்கள்: விசும்பு என்கிற ஆற்றல் ‘வெளி’ என்கிற நிலையில், தான்தோன்றியான ஆற்றல் இல்லாததாக, மற்ற நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கு தான்தோன்றி ஆற்றல்களுக்கு கடந்தும் உள்ளும் இருக்கிற ‘வெளி’.
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்த்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
வங்கண் உலகுஅளித்த லான்.
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம்திரி தலான்.
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்
மேநின்று தாஞ்சுரத்த லான்.
பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்
வீங்குநீர் வேலி உலகிற்கு அவன்குலத்தொடு
ஓங்கிப் பரந்துஒழுக லான்.
என்றுதாம் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் பாடுகிறார்.
அந்த நான்கு தான்தோன்றி ஆற்றல்களால் இயக்கம் பெற்று, நியுட்டன் கண்டறிந்ததாக உலகம் போற்றிக் கொள்ளும் மூன்றாம் இயக்க விதிக்கு காரணமாக அந்த நான்கு ஆற்றல்களால் இயக்கம் பெற்று ‘விண்வெளி’ ஆகி நான்கு ஆற்றல்களுக்கும் எதிர் ஆற்றலைத் தரும் விசும்பு ஆகிறது. ஆக தமிழ்மெய்யியல் கடவுள் (வெளி) இயக்கம் இல்லாமல் இருக்கிறது (கடவுள் இல்லை). விசும்பு! நிலம், நீர், தீ, காற்று ஆகிய தான் தோன்றி இயக்கங்களால் இயக்கம் பெற்று அவற்றை இயக்குகிறது (விசும்பாக கடவுள் இருக்கிறது). என்கிறது தமிழ்மெய்யியல்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,266.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.