06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எழுத்துப்பிழை என்பது இயல்பாக நடப்பதுதான். ஆனால் அந்த எழுத்து பிழை எங்கு நடக்கக்கூடாது என்பதுதான் செய்தியே. அதிலும் ஆளும் வர்க்க தரப்பில் எது நடந்தாலும் அது தீதான்! அன்று செய்திஜெ ஒளிபரப்பு தொடக்க நாளன்று துணை முதல்வர் பேசுவதை ஒளிபரப்பும்போது, நாட்டை ஆளும் மன்னனின் 'வால்' முனையைவிட பேனா முனை கூர்மையானது என்று பதிவிடப்பட்டது. ஒரு புது ஒளிபரப்பு தொடங்கப் படுகிறது என்பதைவிட இந்த எழுத்துப்பிழைதான் பரபரப்பாக பேசப்பட்டது. இப்படி தான் நேற்று ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதிமுக நேற்று தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையின் முன் பக்கத்தில் பிழையுடன் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அமைதி, வளம், வளர்ச்சி என்பதற்கு பதிலாக, பட்டாணிக் கடலை, வளம், வளர்ச்சி எனத் தவறாக ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் பி-இ-எ-எஸ்-இ என்று எழுதினால் பட்டாணிக்கடலை என்று பொருள். அதே பி-இ-எ-சி-இ என்று எழுதினால் அமைதி என்று பொருள். அதிமுக தேர்தல் அறிக்கையில் அமைதிக்கு பதிலாக பட்டாணிக்கடலை கையாளப் பட்டுள்ளது மக்கள் நடுவே கிண்டாலகப் பார்க்கப் படுகிறது. ஆட்சிப் பொறுப்பில் இருக்கிற கட்சியின் அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கையில் பட்டாணிக்கடலையா? என்று பார்த்தவர்கள் குழம்பி விட்டனர். இது நம் இணைய ஆர்வலர்களின் கண்ணில் பட்டுவிட்டது. கேட்கணுமா என்ன... பட்டாணிக்கடலையைப் போட்டு வறுத்தெடுத்து வருகிறார்கள்! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,097.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.