Show all

தமிழ்நாடு அரசின் அறநிலையத் துறை அதிகாரிகள் கூட்டணியில், இயங்கலை முன்பதிவில் ரூ.500 கோடி வரை முறைகேடு

21,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் முதன்மையான கோவில்கள் பட்டியலில் சுமார் 4 ஆயிரம் கோவில்கள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கோவில்களை தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது. கடந்த திமுக. ஆட்சியில், ஒவ்வொரு கோவிலுக்கும் தனித்தனியாக இயங்கலை மூலம் பூசை, அன்னதானம் உள்ளிட்டவைகளுக்கு பணம் கட்டி முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப் பட்டது.

அதாவது, மின்-பூசை, மின்-அன்னதானம், மின்-அறை என்று பல்வேறு வசதிகள் கொண்டுவரப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. சுமார் 10 நிறுவனங்கள் இந்தப் பணிகளை ஒப்பந்தம் மூலம் எடுத்து நடத்தின. இயங்கலை மூலம் வசூலாகும் பணத்தையும் குறிப்பிட்ட காலத்திற்குள் தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறைக்கு செலுத்தி வந்தன.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் குறைந்ததாக தெரிகிறது. அதாவது, வசூலாகும் பணத்தை அரசுக்கு முறையாக செலுத்தவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த நான்கைந்து மாதங்களாக முறையாக கணக்குகளையும் பதிகை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசின் அறநிலையத் துறை ஆணையர் செயா விசாரணை மேற்கொண்டார். இதற்கிடையே, தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தமும் கடந்த மாதம் முடிவடைந்தது. இதனால், விசாரணையும் துரிதப்படுத்தப்பட்டது. இந்த விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதாவது, பழனி கோவிலில் இயங்கலை மூலம் பணம் வசூல் செய்யும் 'ஸ்கை' என்ற தனியார் நிறுவனம் ரூ.25 கோடி வரை அறநிலையத் துறைக்கு பணம் செலுத்தவில்லை என்பது தெரியவந்தது. இதேபோல், திருத்தணி உள்ளிட்ட பல்வேறு முதன்மைக் கோவில்களில் இருந்தும் கடந்த 4 ஆண்டுகளாக கோடிக்கணக்கான பணம் அரசுக்கு வழங்கப்படாமல் இருப்பது தெரியவந்தது.

இந்த முறைகேடுகளில் அறநிலையத்துறை ஊழியர்களும் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, தனியார் நிறுவன அதிகாரிகளிடமும், அறநிலையத் துறை ஊழியர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. சுமார் ரூ.500 கோடி வரை முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வரும் என்று தெரிகிறது. இதனால், அறநிலையத்துறை அதிகாரிகள் பலர் அச்சத்தில் உள்ளனர்.

பணிச்சுமை இல்லா வேலை, நல்ல சம்பளம். அப்புறம் ஏன் அசிங்கம் பிடித்தவர்களாய் இருக்கின்றனர் அரசு அதிகாரிகள், அறநிலையத் துறையில் கூட.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,871.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.