Show all

150 ஆண்டுகால செவிலியர் குட்டைப் பாவடைகளுக்கு முழுக்கு! அரசு மருத்துவ மனைகளில் ஆடைஅமைப்பு மாற்றம்

23,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் 25 ஆயிரத்துக்கு அதிகமான செவிலியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.  

ஆங்கிலேயர் சட்டம், சில நடை உடைகளை இன்னும் மாற்றாமல் தொடர்ந்து பயன் படுத்தி வருகிறோம். அந்த வகையில், வழக்கறிஞர்கள், அறங்கூற்றுவர்கள், செவிலியர்கள் ஆகியோர் உடைகள் சுமார் 150 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. 

செவிலியர்கள் குட்டைப் பாவாடையுடன் வெள்ளை நிற சீருடை அணிந்து பணியாற்றி வந்தனர். கால மாற்றத்திற்கு ஏற்றாற்போல் இந்த சீருடை அணிந்து பணியாற்றுவது மிகவும் சிரமமாக இருப்பதாக செவிலியர்கள் தெரிவித்து வந்தனர். குறிப்பாக நோயாளிகளுக்கு குனிந்து, தரையில் அமர்ந்து சிகிச்சை அளிக்க முடியாத அளவு அசவுகரியங்கள் ஏற்படுவதாக அரசிடம் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.  இந்த சிரமங்களில் இருந்து விடுபடும் வகையில் தமிழக அரசு செவிலியர்கள் சீருடையில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த மாற்றம் அடுத்த மாதத்தில் இருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து  அரசு  மருத்துவமனைகளிலும் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வளர்மதி கூறியதாவது: செவிலியர்கள் 150 ஆண்டுகாலமாக அசவுகரியங்களுடன் பழைய வகையான சீருடைகளை அணிந்து சிரமத்துடன் பணியாற்றி வருகின்றனர். தற்போது இருக்கும் சூழ்நிலையில் செவிலியர்களின் பணிக்கு ஏற்றவாறு சீருடை மாற்றம் செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பலக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தினோம். இந்நிலையில் தற்போது தமிழக அரசு சீருடையில் மாற்றத்திற்கான அரசாணை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. 

இந்த ஆணையின்படி செவிலியர்கள் பணியின் முதல் பத்தாண்டுகள் வெள்ளை நிற முழுக்கால் ஆடையும், இதன் பிறகு வெள்ளை நிற சுடிதார், கோட்டும் அணிந்து பணியாற்றுவர். மேலும் 25 ஆண்டுகளுக்கு பிறகு பிங்க் நிற புடவை மற்றும் கோட் அணிந்தும், 30 ஆண்டுகளுக்கு பிறகு  பச்சை நிற புடவை மற்றும் கோட் அணிந்தும் பணியாற்றுவார்கள். மேலும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவில் பணியாற்றும் செவிலியர்கள் பிங்க் பேன்ட், சட்டை அணிந்து பணிபுரிவர். இதேபோல் ஆண் செவிலியர்களுக்கும் சீருடையில் நிறமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,996.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.