Show all

ஒரு காசுக்கும் உதவாத மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள்! வெளுத்து வாங்கிய சிவசேனா

06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியின் வெளிநாட்டுப் பயணத்தால் நாட்டுக்கு என்ன கிடைத்தது. வெளிநாடு பயணம் செல்வதில் இதற்கு முன் இருந்த அனைத்து தலைமைஅமைச்சர்களின் சாதனையையும் மோடி முறியடித்துவிட்டார் என்று மோடியை சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் எழுதியுள்ள தலையங்கத்தில் மோடியின் வெளிநாட்டுப் பயணம், வெளியுறவுக் கொள்கை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளது.அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

பல்வேறு நாடுகளுடன் இந்தியாவுக்கு நல்லுறவு இருந்தது இல்லை. ஒருவேளை மோடியின் வெளிநாட்டுப்பயணத்தின் மூலம் அந்த உறவுகள் முன்னேற்றம் அடைந்திருந்தால் மகிழலாம். ஆனால் அப்படி எதுவும் நடந்து விடாத இந்தப் பயணங்களுக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டதில், மோடி நன்றாக அனுபவித்ததுதான் மிச்சம்.

பிரான்ஸ் சென்ற மோடி, அந்நாட்டுடன் ரபேல் போர்விமானக் கொள்முதல் ஒப்பந்தம் செய்தார், அதுவும் சிக்கலில் இருக்கிறது. உருசியாவுடன் எஸ்-400ரக ஏவுகணை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது ஆனால், அதற்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவிக்கிறது. அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்தபடி, எப்-16 ரக போர்விமானங்களை வாங்க அமெரிக்கா வற்புறுத்துகிறது. உருசியாவுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கிறது அமெரிக்கா.

பாகிஸ்தானுக்கு ஏற்கனவே அமெரிக்கா எப்-16 ரக போர்விமானங்களை விற்பனை செய்துவிட்டது. பாகிஸ்தானுக்கு அந்த விமானங்கள் குறித்த அனைத்து ரகசியங்களும் தெரிந்துவிட்டது, இப்போது அதே போர்விமானத்தை இந்தியாவிடம் விற்க டிரம்ப் நிர்வாகம் முயல்கிறது.

இந்தியா பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படுவது பல்வேறு நாடுகளுக்கு அந்த பிடிக்கவில்லை. இரு நாடுகளும் பதற்றத்துடன், போர்தளவாடங்களை வாங்கினால்தான் தங்களுக்கு பணம் வரும் என்ற நோக்கில் செயல்படுகின்றன. ஈராக், ஈரான், சிரியா, லிபியா, எகிப்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா ஆகியநாடுகளில் எப்போதும் நிலைத்தன்மை வந்துவிடக்கூடாது என்று சில நாடுகள் நினைக்கின்றன.

இந்தியாவின் அண்டை நாடுகளும் உள்ளத்தில் இருந்து நட்புக்கரங்களை நீட்டவில்லை. நேபாளம்கூட ஹிந்து நாடாக இருந்தாலும், சீனா, பாகிஸ்தான் சொல்படிதான் நடக்கிறது. ஆதலால் நாங்கள் கேட்கும் கேள்வி என்னவென்றால், மோடியின் வெளிநாட்டுப் பயணத்துக்கு கோடிக்கணக்கில் நடுவண் அரசு செலவிடுவதால் என்ன பயன் கிடைத்திருக்கிறது? இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,949.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.