Show all

பாஜக அமைச்சரின் மகன் கைது- அவரின் விடுதியும் இடிப்பு! உத்தரகாண்ட் மாநிலத்தில், இளம்பெண் கொலையில்

பத்தொன்பது அகவை இளம் பெண்ணை கொலை செய்தது தொடர்பாக பாஜக அமைச்சரின் மகன் புல்கித் ஆர்யா, அவரது விடுதி ஊழியர்கள் இரண்டு பேர் உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

07,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: தனது ஓய்வு விடுதியில் வரவேற்பாளராக வேலைபார்த்து வந்த 19 அகவை இளம் பெண்ணை கொலை செய்தது தொடர்பாக, உத்தரகாண்ட் பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ஆரியா உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

உத்தரகாண்ட் மாநிலத்தின் மூத்த பாஜக தலைவரான வினோத் ஆர்யா. இவரது மகன் புல்கித் ஆர்யா பவுரி மாவட்டத்தில் ரிசிகேஷ் அருகே வனாந்த்ரா என்ற ஓய்வு விடுதி ஒன்றை நடத்தி வந்தார். இந்த உணவு விடுதியில் அன்கிதா பண்டாரி என்ற 19 அகவை பெண் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த திங்கள் கிழமை அன்கிதா காணாமல் போனதாக புல்கித் ஆர்யாவும் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் கால்வாய் ஒன்றில் இருந்து அன்கிதா பண்டாரியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பான செய்தி சமூகவலைதளங்களில் நேற்று தீயானதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையை விரைவு படுத்தினர். விசாரணையில் அன்கிதாவின் கொலையில் அவர் வேலை பார்த்த விடுதியின் முதலாளியான புல்கித் ஆர்யாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக புல்கித் ஆர்யா, அவரது விடுதி ஊழியர்கள் இரண்டு பேர் உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

இதுதொடர்பாக மாநில காவல்துறைத் தலைவர் அசோக் குமார் கூறுகையில், 'வனாந்த்ரா ஓய்வு விடுதி அமைந்திருக்கும் பகுதி வழக்கமான காவல் எல்லைகளின் கட்டுப்பாட்டில் வருவதில்லை. இந்தப் பகுதி முதன்மை நகரமான ரிசிகேசில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது. இது போன்ற பகுதிகளில் நடக்கும் குற்றங்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய நிலவருவாய் அதிகாரி அமைப்பு உள்ளது. அவர் காணாமல் போனவர் பற்றி வழக்கு பதிவு செய்தார். கொலையான பெண் காணாமல் போனதாக, ஓய்வு விடுதியின் முதலாளியான குற்றம் சாட்டப்பட்டவரே புகார் அளித்துள்ளார்.

மாவட்ட அறங்கூற்றுவர் இந்த வழக்கை வியாழக்கிழமை தான் எங்களிடம் மாற்றி உத்தரவிட்டார். இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளோம். குற்றவாளியான ஓய்வு விடுதி உரிமையாளரோடு மேலும் இரண்டு ஆட்களைக் கைது செய்துள்ளோம். இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து புல்கித் ஆர்யாவிற்கு சொந்தமான வனாந்த்ரா ஓய்வு விடுதியை இடிக்க மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டார். மேலும் மாநிலத்தில் உள்ள மற்ற ஓய்வு விடுதிகளிலும் விசாரணை நடத்த மாவட்ட அறங்டகூற்றுவர்களை முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், இதுமிகவும் எதிர்பாராத சோக நிகழ்வும் கொடுமையான குற்றமும் ஆகும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்று தெரிவித்தார்.

கொலை குற்றத்தில் கைதாகியுள்ள புல்கித் ஆர்யாவின் தந்தை வினோத் ஆர்யா தற்போது மாநிலத்தில் துறையில்லாத அமைச்சராக இருக்கிறார். முன்னதாக மாநில அமைச்சராக இருந்த அவர் மண்பாண்ட வளர்ச்சிக்காக அமைக்கப்பட்ட வாரியத்தின் தலைவராக இருந்தார். புல்கித் ஆர்யாவின் தம்பி அன்கித் ஆர்யாவும் பாஜக பேரறிமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,381.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.