Show all

இருபத்திநான்கு மொழிகளில் தமிழ்ப் பாடநூல்கள் வெளியீடு!

வெளிநாடுகள் வெளி மாநிலங்களில் தமிழைக் கற்பிக்கும் அமைப்புகளுக்கு மற்றும் வெளி நிதியுதவி வழங்குதல், தமிழைத் திறம்பட கற்பிக்க ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்குதல் முதலான நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழ்ப் பரப்புரைக் கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் முதல் நடவடிக்கையாக இருபத்திநான்கு மொழிகளில் தமிழ்ப் பாடநூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

08,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் தமிழ் கற்கும் வகையில் தமிழ் பரப்புரை கழகத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதன்மூலம் 24 மொழிகளில் தமிழ் பாடநூல் வெளியிடப்பட்டுள்ளதை முதல்வர் பெருமிதத்தோடு தெரியப்படுத்தினார்.

உலகில் ஏறத்தாழ 90 நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கும் இளந்தலைமுறையினருக்கும் தமிழ்மொழியைக் கற்பிக்கவும், பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டு செல்லவும் பல முயற்சிகளைத் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. 

இதன் ஒருபகுதியாக தமிழை எளிமையாகக் கற்பதற்கான தமிழ்ப் பாடநூல்கள், வெளிநாடுகள் வெளி மாநிலங்களில் தமிழைக் கற்பிக்கும் அமைப்புகளுக்கு மற்றும் வெளி நிதியுதவி வழங்குதல், தமிழைத் திறம்பட கற்பிக்க ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்குதல் முதலான நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழ்ப் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும் என அரசு ஆணை வெளியிட்டது. அதற்கு முதற்கட்டமாக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று தமிழ் பரப்புரை கழகத் தொடக்க விழா நடந்தது. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று தமிழ் பரப்புரை கழகத்தை தொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திமுக என்றால் தமிழ், தமிழ் என்றால் திமுக என வளர்க்கப்பட்டது தான் திமுக. தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டியவர் அண்ணா. அவரது பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ் பரப்புரை கழகம் தொடங்குவது மிகவும் பொருத்தமானது. அனைத்து மக்களுக்குமான வளர்ச்சி, அனைத்து மாவட்டத்துக்கான வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்பதை உள்ளடக்கமாக கொண்ட இந்தியாவில் தமிழ்நாடு தனித்துவமானது என்கிற தனிச்சிறப்பு ஆட்சியை நடத்தி வருகிறோம். 

தமிழ்நாட்டில் தகவல் தொழில் நுட்பத்துக்கு அடித்தளம் அமைத்தது திமுக அரசு தான். இதற்கு சாட்சியாக கம்பீரமாக இன்றும் இருப்பது தான் டைடல் பூங்கா. 27 ஆண்டுகளுக்கு முன்னம் முதல்வராக இருந்த கருணாநிதி தகவல் தொழில் நுட்ப புரட்சியை செய்தார். 27 ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்ப புரட்சி பேரளவான வளர்ச்சி பெற காரணமாக இருந்தவர் கருணாநிதி. உலகம் முழுவதும் தமிழ்நாட்டு இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள் என்றால் அதற்கு அடித்தளம் போட்டவர் கருணாநிதி. 

அடுத்தக்கட்டமாக 'தமிழ் இணையம் 99' என்ற தமிழ் இணையவழி மாநாடு மூலம் இணைய தமிழ் தொடர்பான முன்னெடுப்பு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து தமிழ் இணைய கல்விகழகம் தோற்றுவிக்கப்பட்டது. தமிழின் சொத்துக்களைத்; தொகுத்து தொழில்நுட்ப அடிப்படையில் வைத்துள்ளோம். அந்த வழியில் தான் தற்போது தமிழ் பரப்புரை கழகம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 24 மொழிகளில் தமிழ் பாடநூல் வெளியிடப்பட்டுள்ளன என்றார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,382.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.