Show all

நடப்புகேட்பு மந்திரம்!

தீதும் நன்றும் பிறர்தர வாரா என்கிற அடிப்படையில்- நமது தலையெழுத்தை நாம்தாம் எழுதிக் கொள்கிறோம் என்கிற வகைக்கு, உருவாக்கப் பட்ட 'காப்பு' என்ற பொருள் பொதிந்த தமிழ்ச்சொல்லையும், 'காப்புக்கட்டு' என்கிற நடைமுறையையும் தொடர்ந்து கொண்டாடி, அநத அடிப்படையில் கேட்பு மந்திரத்தையும் ஓதி உய்ய, தமிழினத்திற்கு உணர்த்த வேண்டிய கடமையின் பாற்பட்டது இந்தக் கட்டுரை.

24,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5126.

நிறைய தமிழ்ச் சொற்களை, அதன் பொருள் பொதிந்த வரையறைகளை, பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், மார்க்சியம், திராவிடம், வேறுவேறு மதங்கள் என்று பல்வேறு அயல்சார்புகளில், மலைப்புகளில்- தொலைத்து விட்டு, நாம் நீர்த்துப் போன வடிவங்களாக அச்சொற்களைப் புழங்கி வருகிறோம்.

அவ்வகையாக நாம் தொலைத்துள்ள பல நூறு சொற்களின் பொருள் பொதிந்த வரையறைகளை தெரிவிக்கும் நோக்கத்தில் முதலாவதாக 'காப்பு' என்ற சொல்லின் வரையறையை இந்தக் கட்டுரையில் முன்னெடுத்துள்ளேன். 

காப்பு என்கிற பொருள் பொதிந்த தமிழ்ச்சொல்லுக்கு நெடிய வரலாறு இருக்கிறது. மக்களுக்கான முன்னேற்றக் கலையை முன்னெடுக்க தமிழ் முன்னோர்கள் தொடர்ந்து பெரும்பாடாற்றி வந்துள்ளனர். 

தமிழ் முன்னோர் முன்னெடுத்த முதல் முன்னேற்றக் கலையில் முதலாவதாக நமக்குக் கிடைத்தது வானியல் ஆகும். அதில் ஞாயிறு அடிப்படையான ஓராண்டுக்கான காலம் 365 நாட்கள், 15நாழிகை, 31விநாழிகை, 15தற்பரை என்கிற காலக்கணக்கும் தொடர் ஆண்டு, தொடர்நாள், ஆறு பருவ காலங்கள் என்றெல்லாம் வியக்கத் தக்க தகவல்கள் எல்லாம் கிடைத்தன. 

அடுத்து கிடைத்தது கணியம் என்கிற எண்ணியல் ஆகும். கணியத்தின் மூலம் நாம் விரும்பும் இயல்புக்கான வகைக்கு நமது பிள்ளைகளின் பெயர்கள், நமது நிறுவனங்களின் பெயர்கள் ஆகியவற்றை அமைத்துக் கொண்டு நமக்கான கடவுள் இடத்தில் நமது இயல்பை ஆழப்படுத்தி வெற்றிகளை மட்டுமே குவித்திடும் வகைமைக்கானது கணியம்.

மூன்றாவதாகக் கிடைத்தது மந்திரம் ஆகும். இந்த மந்திரத்தில் முதன்மையாகச் சொல்லப்படுவது தீதும் நன்றும் பிறர்தர வாரா என்கிற வகையான நமது தலையெழுத்தை நாம்தாம் எழுதிக் கொள்கிறோம் என்கிற தகவல் ஆகும்.

இந்த அடிப்படையில்தான் முதலாவது மந்திரமாக காப்பு என்கிற சொல் தமிழுக்கு உருவானது. தமிழர்கள் தங்கள் பொங்கல் திருவிழாவில், பொங்கலிடுவதற்கு முதல்நாள் 'காப்புக்கட்டுதல்' என்ற பெயரில் வீட்டின் வாயிலில் மருத்துவ குணமுள்ள மூலிகைகளான- வேப்பிலை, பீளைப்பூ, ஆவாரம்பூ கொத்துகளைச் சொருகி, நமது வீட்டிற்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் காப்பு செய்துள்ளோம் என்கிற அறிவிப்பை ஐந்திரங்களில் ஒன்றான விசும்பு ஆற்றலில் தங்களுக்கு தாங்களே எழுதிக் கொண்ட விதியாக பதிவு செய்கின்றோம்.

பேறுகாலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வளைகாப்பு செய்வதை கட்டிச்சோறு கட்டி பெரு விழாவாகவே கொண்டாடி வருகிறோம். பேறு காலத்தில் பெண்கள் மெதுவாக இயங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களின் கைநிறைய எளிதாக உடையும் வகையான வளையல்களை அணிவித்து எச்சரிக்கை செய்கிறோம். அந்தப் பெண்களுக்கு வளைகாப்பு கட்டியதை கட்டிசோறு கட்டி கொண்டாடுகிறோம். 

பிறந்த குழந்தைகளுக்கு- காப்பு வகைக்காக வசம்பை சிறு துண்டுகளாக நறுக்கி கோர்த்து காப்பாக, குழந்தைகளின் கையில் அணிவிக்கிறோம். மேலும் ஐந்து மாழைகளால் செய்யப்பட்ட காப்புகள் அணிவிக்கிறோம். குழந்தைகள் ஆட்டி மகிழ்ந்து தங்கள் இயக்கத்தைப் புரிந்து இயங்குவதற்;காக காலில் சலங்கைத் தண்டைகளை காப்பாக அணிவிக்கிறோம். 

திருமணத்தில் மணமக்களுக்கு காப்பு அளிப்பதற்காக பாலைக்கால் நட்டு மணவிழாவைத் தொடங்குகிறோம். வீடு கட்டும் போதும் பாலைக்கால் நட்டு தொடங்கி காப்பு செய்கிறோம்.

தமிழரின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம்- காப்பியம் என்றே அழைக்கப்படுகிறது. இலக்கணம் என்பதற்கு காப்பியம் என்பதே மிகப்பழைய வடிவம் என்பதற்கு தொல்காப்பியமே சான்று ஆகும்.

தீதும் நன்றும் பிறர்தர வாரா என்கிற அடிப்படையில்- நமது தலையெழுத்தை நாம்தாம் எழுதிக் கொள்கிறோம் என்கிற வகைக்கு, உருவாக்கப் பட்ட 'காப்பு' என்ற பொருள் பொதிந்த தமிழ்ச்சொல்லையும், 'காப்புக்கட்டு' என்கிற நடைமுறையையும் தொடர்ந்து கொண்டாடுவது தமிழர் கடமையாகும்.

காப்பு என்கிற எண்ணத்திற்காக, கப்புக்கட்டு என்கிற செயலையும், கேட்புமந்திரம் என்கிற தமிழ்மூலமான (மொழி) மந்திரக்கட்டை அன்றாடமோ ஒவ்வொரு புதிய முன்னெடுப்பின் தொடக்கத்திலோ தமிழ்முன்னோர் ஓதிவந்த காரணம் பற்றியே ஒட்டு மொத்த உலகத்தையும் தமிழினத்தால் அன்று ஆள முடிந்தது. 

இந்தக் கட்டுரையின் முடிவுரையாக, நடப்பில் இந்த வேனிற்காலத்தின் வெப்பக் கடுமையைத் தணிக்க நாம் ஒரு மந்திரக்கட்டை ஓதிப் பயன்பெறுவது எவ்வாறு என்று தெளிவோம்.

உங்கள் தேவை எதுவானாலும் அதற்கு நீங்கள்தான் மந்திரம் கட்ட வேண்டும், என்கிறது தமிழ்முன்னோர் முன்னெடுத்த மூன்றாவது முன்னேற்றக்கலை மந்திரம்.
கடவுளே!
விசும்புத் தெய்வமே!
எனக்கு வெப்பத் தாக்கத்தை குறைத்து ஆவன செய்ய வேண்டுகிறேன் என்று வேனிற்காலம் முழுவதும் அன்றாடம் இரண்டு முறையாவது ஓதியிருங்கள்.
இந்த வேனிற்காலம் உறுதியாக உங்களுக்குத் துன்பமாக இருக்காது. 
மழை பெய்யலாம், உங்களுக்கு குளிர்ஊட்டும் கருவி வாங்கும் வாய்ப்பு வரலாம். உங்கள் பிள்ளை உங்கள் வீட்டின் குளிரைக் குறைக்க ஏதாவது கருவி கண்டுபிடிக்கலாம். இப்படி ஏதாவதொரு வழியாகவோ சிலபல வழியாகவோ கடவுள் உறுதியாக உங்கள் கேட்பை நிறைவு செய்யும்.

மந்திரம் என்பது மாயமல்ல மனஆற்றல்!

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.