Show all

இந்த அவமரியாதை திரிபுரா பதவி ஏற்பில்! கையெடுத்து கும்பிட்டார் அத்வானி; கண்டு கொள்ளவில்லை மோடி

25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திரிபுராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி கட்சி வெற்றி பெற்றது. இன்று திரிபுராவில் புதிய ஆட்சி பதவி ஏற்றது. முதல்வராக பிப்லாப் தேப் பதவிஏற்றார்.

இந்த விழாவுக்கு பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்டோர் வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் விழா மேடையில் இருந்தனர்.

அப்போது, மோடி மேடைக்கு வந்தபோது, முரளி மனோகர் ஜோஷி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் என ஒவ்வொரு தலைவராக எழுந்து கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர். மோடியும் பதிலுக்கு வணக்கம் செலுத்திச் சென்றார்.

ஆனால், மோடி நடந்து வரும்போது, மூத்த தலைவர் அத்வானி வணக்கம் செலுத்திய போது, அவரை கண்டுகொள்ளாத மோடி, அவருக்கு பதில் வணக்கமும் செலுத்தாமல், அவரை பார்க்கக்கூட மனமில்லாதவாறு கடந்து சென்றார். இதை சற்றும் எதிர்பாராத அத்வானியின் முகம் சுருங்கி, அவமானத்துக்கு உள்ளானார்.

இந்தக் காட்சி செய்தி நிறுவனங்களில் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. கீச்சுவிலும் பகிரப்பட்டது. ஏராளமானோர், மோடியின் அசட்டை செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

பாஜகவில் மூத்த தலைவர்களுக்கு இதுதான் மரியாதை என்றும், மோடி அத்வானியை பார்த்து வணக்கம் செலுத்தி இருக்கலாம், திமிராக செல்லக்கூடாது என்றும் தெரிவித்தனர்.

இன்னும் ஒரு சிலர் அத்வானி குஜராத் மாநிலத்தில் பிரசாரம் செய்யவந்தபோது, அவருக்கு ஒலிவாங்கி பிடித்தவர்தானே இப்போது தலைமை அமைச்சர் மோடி என்று கடுமையாகக் கூறி அதற்குரிய படத்தையும் பதிவிட்டனர். இந்த காணொளி சமூக ஊடங்களில் தீயாகப் பரவி வருகிறது.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,721.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.