Show all

குக்கர் கிடைத்தது தினகரனுக்கு! இரட்டை இலையும் கிடைக்கும் என்கிறார் நம்பிக்கையோடு

25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சென்னை இராகிநகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தினகரன், குக்கர் சின்னத்தை தனது அணி தொடர்ந்து பயன்படுத்த அனுமதி கோரி டெல்லி உயர்அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை செய்திருந்தார். 

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வகையில் தனது அணி அதிமுக அம்மா என்ற பெயரையும், குக்கர் சின்னத்தையும் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். 

இந்த வழக்கு விசாரணை டெல்லி உயர்அறங்கூற்றுமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட முடியாது என தெரிவித்தது. 

உள்ளாட்சி தேர்தல் மாநில தேர்தல் ஆணையமே நடத்துவதால் சின்னம் குறித்து மாநில தேர்தல் ஆணையமே முடிவு செய்யும். எனவே, தினகரன் கோரிக்கையை தள்ளுபடி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் டெல்லி உயர்அறங்கூற்றுமன்றத்தி;ல் பதில் மனு பதிகை செய்திருந்தது. 

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் டெல்லி உயர்அறங்கூற்று மன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் கட்சிக்கு தினகரன் ஒதுக்கக்கோரிய பெயர்களில் ஒன்றை ஒதுக்குமாறும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. 1.எம்ஜிஆர் அம்மா திமுக, 2.அம்மா திமுக 3.அனைத்திந்திய அண்ணா அம்மா திமுக ஆகிய மூன்று பெயர்களில் ஒன்றை ஒதுக்குமாறு தினகரன் கோரியிருந்தார்.

இவற்றில் ஒரு பெயரை ஒதுக்குமாறும் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்தத் தீர்ப்பு தினகரனின் அடுத்த நகர்த்தலுக்கு உதவும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,721.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.