13,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மத்திய பிரதேசத்தில் ரூபாய் தாள்கள் அச்சடிக்கும் மையத்திலிருந்து அன்றாடம் பணத்தை திருடிக்கொண்டிருந்த அதிகாரியை துணை ராணுவத்தினர் கையும் களவுமாக கைது செய்தனர் மத்திய பிரதேசத்தின் திவாஸ் மாவட்டத்தில் 185 ஏக்கர் பரப்பளவில் புதிய ரூபாய் தாள்கள் அச்சடிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. பலத்த பாதுகாப்பின் கீழ் செயல்பட்டு வரும் இந்த மையத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் தனது ஷூவில் வைத்து 20 ஆயிரம் ரூபாயை திருட முயன்றார். அப்போது அவரை நடுவண் தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையில் அவர் ரூபாய் தாள்களை சரி பார்க்கும் பிரிவில் துணை கட்டுப்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்து வரும் மனோகர் வர்மா என்பதும், இவர் கடந்த பல ஆண்;டுகளாக இதே போல அன்றாடம் பணத்தை திருடிச் சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருக்கும் கண்;காணிப்பு படக்கருவியில் வர்மா திருடிய காட்சிகள் பதிவாகியுள்ளதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். அவரது அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 26,09,000 ரூபாயும், வீட்டில் 64,50,000 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை அவர் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை இவ்வாறு திருடி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்துள்ள காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரைப் போல மற்ற அதிகாரிகளும் இவ்வாறு பணத்தை திருடுகிறார்களா என்றும் காவல்துறையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,679
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.