மருத்துவ பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்ய மறுத்துள்ள உச்சநீதிமன்றம்,
மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வை மாநில அளவில் நடத்திக்
கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று, பல்வேறு மாநிலங்கள் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க
நடுவண் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் நாளை மறுநாள் (5ம் தேதி)
ஒத்திவைத்துள்ளது. பொது நுழைவுத்தேர்வுக்கு தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும், தேசிய
அளவிலான பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும், நுழைவுத் தேர்வை இந்த ஆண்டே நடத்த வேண்டும் என்றும், உச்சநீதிமன்றம்
சமீபத்தில் உத்தரவிட்டது. அதன்படி, மே1 மற்றும் ஜூலை24 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக
தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, முதல்கட்ட நுழைவுத் தேர்வு சமீபத்தில்
நடத்தப்பட்டது. கடந்த மாதம் 28ம் தேதி இந்த வழக்கின் விசாரணையின் போது, நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, தமிழகம் உள்ளிட்ட
மாநிலங்கள் வலியுறுத்தின. ஆனால், அதை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இந்நிலையில்,
ஏற்கனவே திட்டமிட்டபடி, மாநில அளவிலான நுழைவுத் தேர்வை நடத்துவதற்கு
அனுமதிக்க வேண்டும் என, ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள், நேற்று மனு தாக்கல் செய்தன.
இந்த மனுக்கள் மீது, இன்று விசாரணை நடக்க உள்ளது. மருத்துவ நுழைவுத் தேர்வு பிரச்னை, லோக்சபாவிலும் நேற்று எதிரொலித்தது.
நுழைவுத் தேர்வை எதிர்க்கவில்லை; அதே நேரத்தில் இவ்வளவு அவசரமாக
நடத்தப்பட வேண்டியது ஏன்? அடுத்த ஆண்டு முதல் பொது நுழைவுத் தேர்வை நடத்தியிருக்கலாம்
என, பல்வேறு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசினர். நுழைவுத் தேர்வு விவகாரத்தில், இந்திய மருத்துவக் கவுன்சிலின்
செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, நிபுணர் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.
ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா, பிரபல மருத்துவர் டாக்டர்
ஷிவ் சரீன், முன்னாள் மத்திய கணக்கு தணிக்கை தலைமை அதிகாரி வினோத் ராய் ஆகியோர் இந்தக்
குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.