Show all

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் அலுவலகம் மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டது

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் அலுவலகம் மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அங்கிருந்த தலையாய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதால் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

     டெல்லி பத்பர்கஞ்ச் தொகுதியில் உள்ள வினோத் நகரில் உள்ளது துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் அலுவலகம். இந்த அலுவலகத்திற்கு நேற்று இரவு மர்ம கும்பல் ஒன்று புகுந்து அலுவலகத்தை அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளது. மேலும், அவர்கள் வந்து போன தடயம் தெரியாமல் இருப்பதற்காக கண்காணிப்பு படக்கருவியைத் திருப்பி வைத்துவிட்டு கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். அத்துடன், அலுவலகத்தில் இருந்த தலையாய ஆவணங்களும் திருடப்பட்டுள்ளன.

     இந்தக் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது தெரியாமல் இன்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்த ஊழியர் ஒருவர், அலுவலகம் சூறையாடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், காவல்துறையினருக்கு அவர் புகார் அளித்துள்ளார்.

     இதனையடுத்து, மோப்பநாயுடன் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மர்ம கும்பல் குறித்தும் கொள்ளை குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைரேகை நிபுணர்களும் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

     துணை முதல்வர் சிசோடியா அலுவலகத்தில் இருந்த கணினி, தலையாய ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர் என்று ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

     கண்காணிப்பு படக்கருவியைத் திருப்பி வைத்துவிட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால் கொள்ளையர்களைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.