Show all

விடுதலைநாள் உரைகள்! மோடி, பினராயி விஜயன், சந்திரசேகர் ராவ், அரவிந்த் கெஜ்ரிவால், பகவத் சிங் மான், மற்றும் மு.க.ஸ்டாலின்

நேற்று முன்னெடுக்கப்பட்ட இந்திய விடுதலைநாள் கொண்டாட்டத்தில் ஒன்றிய ஆட்சியில் அமர்ந்திருக்கும் தலைமைஅமைச்சர் மோடியின் பேச்சு, தங்களின் அதிகாரக் குவிப்பை நியாயப்படுத்துவதாகவும், மாநில நலன்களுக்கான வெவ்வேறு மாநிலமுதல்வர்களின் பேச்சுக்கள், அதிகாரப் பகிர்வு வேண்டலாகவும் அமைந்திருந்தன.

31,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: இந்திய ஒன்றியத்தின் 76வது விடுதலை நாளையொட்டி டெல்லி செங்கோட்டையில் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி இந்தியக் கொடியேற்றி ஆற்றிய உரையில், வரும் 100 வது விடுதலை நாளில், இந்தியா அனைத்தும் பெற்ற நாடாக மாற வேண்டும். அதற்குள் விடுதலை வீரர்களின் கனவை நிறைவேற்றுவோம். அடுத்த 25 ஆண்டுகளில் அடிமைத்தனத்தை உடைத்தெறிவோம். வரும் 25 ஆண்டுகளில் நாம் ஒரு நொடியை வீணாக்க முடியாது. ஒற்றுமை , ஒருமைப்பாட்டுடன் இணைந்து நிற்போம். நாட்டை முன்னேற்றுவோம். என்று தங்கள் கட்சிக்கு இன்னும் இருபத்தைந்து ஆண்டு ஆட்சித் தேவையை, வலியுறுத்துவது போல பேசினார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன், 'கூட்டாட்சி என்பது இந்திய அரசியலமைப்பின் அடித்தளம் மற்றும் நாட்டின் இருப்புக்கான அடிப்படையாகும். குறிப்பாக நிதி விடையங்களில் இதை மனதில் கொள்ள வேண்டும். மாநிலங்களின் வளர்ச்சிக்கு தேவையான நிதியை வழங்கினால் மட்டுமே, அதன் பலனை மக்கள் அனுபவிக்க முடியும். சமூகத்தின் பெரும் பகுதியினரின் முதன்மைச் சிக்கல்;கள் ஆன வறுமை மற்றும் சொந்த வீடின்மைக்கு முடிவு கட்ட வேண்டும்.' என்று ஒன்றிய அரசின் நிதி பங்களிப்பை மறைமுகமாக சாடினார்.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஒன்;றிய அரசுடன் அண்மைக் காலமாக தீவிர மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் இவர், அதனை தனது உரையிலும் வெளிப்படுத்தினார். தனது உரையில், 'ஒன்றிய அரசு, கூட்டாட்சி மதிப்புகளை சீர்குலைக்கிறது. மாநிலங்களை நிதி அடிப்படையில் பலவீனப்படுத்துகிறது மற்றும் அதிகாரங்களை மையப்படுத்துகிறது. ஒன்றிய அரசும் மாநிலங்களும் ஒன்றிணைந்து முன்னேற்றப் பயணத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றே அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் கூட்டாட்சி அமைப்பை உருவாக்கியுள்ளனர். 

ஆனால் தற்போது டெல்லியில் உள்ள ஒன்றிய அரசு, கூட்டாட்சி மதிப்பை சீர்குலைக்கிறது. மத்திய அரசு, தான் அமர்ந்திருக்கும் கிளையை வெட்டுவது போல், மாநிலங்களை நிதி அடிப்படையாக நலிவடையச் செய்யும் சதிகளில் ஈடுபட்டு வருகிறது.

ஒன்றிய அரசு தண்டும் வருவாயில் 41விழுக்காடு மாநிலங்கள் பெற வேண்டியிருந்தாலும், பாஜக தலைமையிலான அரசு மாநிலங்களின் பங்கைக் குறைக்க வரிகளுக்குப் பதிலாக செஸ் விதித்து மறைமுகமாக வருமானம் ஈட்டுகிறது. 

நடப்பு ஆண்டு மாநிலங்களின் வருமானப் பங்கை 11.4விழுக்காடு குறைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. ஒன்றிய அரசு 41விழுக்காடு வழங்க வேண்டிய இடத்தில் 29.6 விழுக்காடு மட்டுமே வழங்கி மாநிலங்களுக்கு அநீதி இழைக்கிறது. 

ஒன்றிய அரசு பொருளாதாரத்தில் மாநிலங்களின் தன்னாட்சியைப் பாதிக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. கூட்டுறவுக் கூட்டாட்சியின் இலட்சியங்களைப் பற்றிப் பேசும் ஒன்றிய அரசு உண்மையில் அதிகாரங்களை தன்னிடம் மட்டுமே குவித்துக்கொள்கிறது. மக்கள் நலனே அரசுகளின் முதன்மைப் பொறுப்பு. அந்த பொறுப்பை சரியாக நிறைவேற்றாமல் ஒன்றிய அரசு, நலத்திட்டங்களை இலவசங்கள் என்று சொல்லி அசிங்கப்படுத்துவது கண்டிக்கத்தக்கது' என்று ஒன்றிய அரசை வெளிப்படையாகவே சாடிப் பேசினார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்: 'கல்வி மற்றும் மருத்துவமும் இலவசம் அல்ல, இவை இரண்டையும் அணுகினால் நாட்டின் வறுமையை ஒரே தலைமுறையில் ஒழிக்க முடியும். அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, டென்மார்க் போன்றவை எப்படி பணக்கார நாடுகள் ஆயின? அவர்கள் தங்கள் குடிமக்களுக்கு நல்ல கல்வி மற்றும் நலங்கு ஏற்பாடுகளை கட்டிக் கொடுத்துள்ளனர். இதேபோன்று இந்தியாவையும் முதன்மை நாடாக மாற்றுவோம். ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் நல்ல மருத்துவம் மற்றும் கல்வி கிடைக்கும் போதுதான் மூவண்ணக் கொடி உயரப் பறக்கும்.' என்று கெஜ்ரிவால் பேசினார்.

கடந்த மாதம், நரேந்திர மோடி, ஆம் ஆத்மி அரசை குறிப்பிடும் வகையில் வாக்குகளைப் பெறுவதற்காக இலவசங்களை வழங்கும் 'ரெவ்டி கலாச்சாரம்' என்று பேசியதற்கு பதிலடியாக அமைந்தது, விடுதலைநாள் உரையில், கெஜ்ரிவால் பேச்சு.

பஞ்சாப் முதல்வர் பகவத் சிங் மான், 'விடுதலைப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்கவும், மாநிலத்தை மீண்டும் துடிப்பானதாக உருவாக்கவும் வேலையின்மை, ஊழல் மற்றும் வகுப்புவாதம் போன்ற சமூக நோய்களுக்கு எதிராக பஞ்சாப் மக்கள் போரை நடத்த வேண்டும். தியாகிகளின் சான்றிதழ்களை கேள்வி கேட்பது மன்னிக்க முடியாத குற்றம். விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும், பகத்சிங், பி.ஆர்.அம்பேத்கர் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களின் கனவுகள் இன்னும் நிறைவேறாமல் உள்ளன.

விடுதலைக்குப் பிறகு மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்தடுத்த அரசாங்கங்கள் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருந்தனர், ஆனால் பெரும்பாலானவர்கள் இந்த நம்பிக்கையைத் தகர்த்தனர்.' என்று தனது உரையில் பேசினார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், 'இந்தியக் கொடியின் நிறம், மூன்றாக இருந்தாலும் அது ஒரே அளவோடு ஒன்றிணைந்து காணப்படுகிறது. அது போல, பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும் ஒன்றிணைந்து வாழ்வதே இந்தியாவைக் காக்கும். வெளிப்புற சக்திகளின் தாக்குதலை வெல்ல வேண்டுமானால், உட்புற ஒற்றுமை என்பது மிகமிக கட்டாயம். இதுதான் உயிரைக் கொடுத்து இந்திய விடுதலைக்காக பாடுபட்ட உத்தமர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான இரங்கலாக இருக்க முடியும்.

75 ஆண்டு கால விடுதலை இந்தியாவின் வரலாற்றை, மேல் நோக்கி நகர்த்துவதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஒற்றுமை உணர்வோடு வாழ்வோம். அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெற்ற மாநிலங்களின் மூலமாக ஒன்றிய இந்தியாவை வளப்படுத்துவோம்.' என்று மு.க.ஸ்டாலினின் பேசினார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,342.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.