Show all

ஹிந்திக்குத் தாய்ப்பால் மற்ற மொழிகளுக்குக் கள்ளிப்பால்! அமித்சா அறிக்கைக்கு தமிழ்நாடு முதல்வர் எதிர்வினை

ஒன்றிய அரசு வெளியிட்ட அலுவல் மொழி விதிகள், 1976ன் படி, மாநிலங்களை அ ஆ இ எனப் பிரித்து ஹிந்தியை அறிமுகப்படுத்துவது என்பது தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது என்பதை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறார். அந்த அடிப்படையில் அமித்சா அறிக்கை தமிழ்நாட்டை தொடமுடியாது. என்பதை அறங்கூற்றுமன்றத்தில் தமிழ்நாடு அரசு நிறுவ வேண்டும் என்பது நமது வேண்டுகோள்.

25,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: அமித்சா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு தனது அறிக்கையைக் குடியரசுத் தலைவருக்கு அளித்துள்ளது.

அந்த அறிக்கையில், இந்தியாவில் ஹிந்தியின் பயன்பாட்டைப் பொறுத்து இந்திய மாநிலங்கள் அ, ஆ, இ எனப் பிரிக்கப்பட்டு, அதில் அ பிரிவு மாநிலங்களில் ஹிந்தி முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது.

உத்தர பிரதேசம், பிகார், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், உத்தராகண்ட், ஜார்க்கண்ட், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, அந்தமான் நிகோபார் ஆகிய ஹிந்தியைப் பேரளவினராக பேசும் மாநிலங்கள் இந்த அ பிரிவின் கீழ் வருகின்றன. 

குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், சண்டீகர், டாமன், டையூ, தாத்ரா, நாகர் ஹவேலி ஆகியவை ஆ பிரிவின் கீழ் வருகின்றன. பிற மாநிலங்கள் அனைத்தும் இ பிரிவின் கீழ் வருகின்றன.

அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒரு முறை தனது பரிந்துரை அறிக்கையை ஒப்படைக்கும் இது 11வது அறிக்கையாகும்.

1963ஆம் ஆண்டில் அலுவல் மொழிச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, 1976ல் இந்தக் குழு உருவாக்கப்பட்டது. இந்தக் குழுவில் மக்களவையில் இருந்து இருபது பேரும் மாநிலங்களவையில் இருந்து 10 பேரும் இடம்பெறுவார்கள். இந்தியாவின் அலுவல் பணிகளுக்கு ஹிந்தியைப் பயன்படுத்துவதில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை இந்தக் குழு ஆராய்ந்து குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அளிக்கும்.

ஆனால் இந்த வகைக்கான அலுவல் மொழிகள் சட்டத்தில்- பதினைந்து ஆண்டுகளில் ஹிந்தியை ஆங்கிலத்திற்கு மாற்றக நிறுவிட வேண்டும் என்பதாக- ஒன்றிய அரசில் இருப்பவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைப்பணி (டாஸக்) போலத்தான்- சட்டமியற்றப்பட்டுள்ளது. அதை அந்தக் காலக்கெடுவான 1965ல் அந்த வேலைப்பணி (டாஸ்க்) ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியால் முடிக்கப்படமுடியாத நிலையில் இந்தச் சட்டமே காலவதிஆக்கப்பட்டு அட்டவணை எட்டு செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதை, வட இந்திய ஹிந்தி ஆதிக்கவாத தலைவர்களைக் கொண்ட காங்கிரசும் செய்யவில்லை. பாஜகவும் செய்ய மறுத்து காலாவதியான சட்டத்திற்குத் தொடர்ந்து இந்த மாதிரி அறிக்கைகள் வழங்குவதைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  

இந்தக் குழு தற்போது அளித்திருக்கும் அறிக்கையில், 100க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக, அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் ஆங்கிலப் பாடம் கட்டாயம் என்பதை நீக்க வேண்டுமென்றும் ஹிந்தி பேசும் மாநிலங்களில் உயர் அறங்கூற்றுமன்ற தீர்ப்புகளின் ஹிந்தி மொழிபெயர்ப்பை வழங்க போதுமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.

ஹிந்தி பேசும் மாநிலங்களில் பணியாற்றும் அதிகாரிகள் வேண்டுமென்றே ஹிந்தியில் பணியாற்றவில்லையென்றால் முதலில் எச்சரிக்க வேண்டுமென்றும் அந்த எச்சரிக்கையை மீறி நடந்தால், அவர்களது ஆண்டாண்டு பணிக்குறிப்பேட்டில் இது பற்றிக் குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒன்றிய அரசின் அலுவலகங்கள், அமைச்சகங்கள், துறைகளில் ஹிந்தியிலோ அல்லது உள்ளூர் மொழியிலோதான் பேச வேண்டும். ஒன்றிய அரசு ஒருங்கிணைக்கும் எல்லா நிகழ்வுகளிலும் ஹிந்தியிலோ அல்லது உள்ளூர் மொழியிலோதான் அழைப்பிதழ்கள், பேச்சுகள், நிகழ்ச்சித் தொகுப்பு ஆகியவை இருக்க வேண்டுமென்றும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

உள்துறை அமைச்சர் தலைமையிலான இந்தக் குழு அளித்த அறிக்கை அதிகாரப்பாடக இதுவரை வெளியாகவில்லை. இருந்தபோதும் ஊடகங்களில் இந்த அறிக்கையின் சில பகுதிகள் வெளியாகியிருக்கின்றன. இந்தத் தகவல்களின் அடிப்படையில்தான் தற்போது இந்தப் பரிந்துரைகளுக்குக் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.

இந்தச் செய்தி வெளியானவுடன், 'இது இந்திய மொழிகளின் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அப்பட்டமான தாக்குதல். இந்தியாவை ஹிந்துஸ்தான் ஆக்கும் முயற்சி' எனக் குற்றம்சாட்டி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார் மதுரைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்.

இதற்குப் பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தப் பரிந்துரைக்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 'இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் சம உரிமையைக் கொண்ட மொழிகள். இந்நிலையில், ஹிந்தி மொழியை மட்டும் பொது மொழியாக்க அமித்சா தலைமையிலான குழு பரிந்துரைக்க வேண்டிய அவசரமோ, கட்டாயமோ எங்கிருந்து வந்தது? ஒன்றிய அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளிலும் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு, ஹிந்தியை முதன்மைப்படுத்தும் பரிந்துரையும் முன்வைக்கப்பட்டிருப்பது ஏன்?

ஹிந்தி படித்தால் மட்டுமே வேலை, ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ள மாநிலங்களிலும் ஹிந்தியைக் கட்டாயமாக்குவது, அதிகாரிகளோ அலுவலர்களோ ஹிந்தி மொழியைப் பயன்படுத்தாவிட்டால் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து நடவடிக்கை எடுப்பது என்பன உள்ளிட்ட மேலும் சில பரிந்துரைகளும் நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. ஹிந்திக்குத் தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்குக் கள்ளிப் பாலும் புகட்ட நினைப்பது, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்குப் பேராபத்தை விளைவிக்கக் கூடியது.

இந்திய ஒன்றியத்தில் ஹிந்தி பேசுகிற மக்களின் எண்ணிக்கையைவிட, மற்ற மொழிகளைப் பேசுகிற மக்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை அதிகம். ஒவ்வொரு மொழிக்கும் அதற்குரிய சிறப்பு இருக்கிறது. தனித்துவம் இருக்கிறது. மொழிவழிப் பண்பாடு இருக்கிறது. அந்தத் தனித்துவமான பண்பாட்டுச் சிறப்பைப் பாதுகாக்கவும், ஹிந்தி ஆதிக்கத்திலிருந்து இந்திய மொழிகளைக் காப்பதற்குமான வேலியாகத்தான் ஆங்கிலம் என்ற இணைப்பு மொழி, ஒன்றிய அரசின் முதன்மை அலுவல் மொழியாக நீடிக்கிறது.

ஹிந்தியைத் திணிக்க (பதினைந்து ஆண்டுகளில் ஹிந்தியை ஆங்கிலத்திற்கு மாற்றக நிறுவிட வேண்டும் என்பதாக- ஒன்றிய அரசில் இருப்பவர்களுக்கு இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கை முடிக்க)  முற்பட்டபோது அதனை எதிர்த்து 1965-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் கிளர்ந்தெழுந்த மொழிப்போரில் தாய்மொழியாம் தமிழைக் காக்கத் தீக்குளித்தும், துப்பாக்கிக் குண்டுகளை நெஞ்சில் ஏந்தியும் உயிர்த் தியாகம் செய்த தீரமிகு இளைஞர்களின் வரலாற்றை மறந்து விடவேண்டாம். கடந்த செப்டம்பர் 16ஆம் நாள் 'ஹிந்திநாள்' கடைப்பிடிக்கப்பட்டபோது உள்துறை அமைச்சர் அமித்சா, ஹிந்திதான் அலுவல் மொழி என்றார். இப்போது அவர் தலைமையிலான குழு ஹிந்தியைப் பொதுமொழி என்றும் கல்வி நிலையங்களில் பயிற்று மொழி என்றும் கட்டாயமாகத் திணிப்பதற்கான பரிந்துரையை முன்வைத்துள்ளது.

நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்றைக் கட்டாயமாக்க முயல்வது, ஹிந்திக்காரர்கள் மட்டுமே இந்தியக் குடிமக்கள் என்பது போலவும், இந்தியாவின் மற்ற மொழிகளைப் பேசுவோர் இரண்டாந்தர குடிமக்கள் என்பது போலவும் பிரித்தாளுகின்ற தன்மையைக் கொண்டது. ஹிந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம்.' என்று கூறினார்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் இது தொடர்பாக இந்தியத் தலைமைஅமைச்சருக்குக் மடல்; ஒன்றை எழுதியிருக்கிறார். 'இளம் தலைமுறையினர் தங்கள் தாய் மொழியைத் தவிர வேறொரு மொழியைக் கற்றுக்கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றாலும், ஏதாவது ஒரு மொழியைத் திணிப்பது போன்ற உணர்வு லேசாக ஏற்பட்டாலும்கூட பொதுமக்களிடமும் வேலை வாய்ப்புத் தேடுவோரிடமும் ஐயங்களை எழுப்பும். தேவையான சரிசெய்யும் நடவடிக்கைகளை எடுக்க தலைமைஅமைச்சர் உடனடியாகத் தலையிட வேண்டும்

இந்தியாவில் பல மொழிகள் இருக்கின்றன. எந்த ஒரு மொழியையும் இதுதான் நாட்டின் மொழி என்று கூற முடியாது.

அரசுத் துறையில் நம்முடைய இளைஞர்களுககு மிகக் குறைவான வேலைவாய்ப்புகளே இருக்கின்றன. அதிலும் ஒரு பிரிவினரை மொழி காரணமாக தள்ளிவைப்பது இந்த சமூகத்திற்கு நன்மை பயக்காது' என்று கூறியிருக்கிறார் பினராயி விஜயன்.

எதிர்பார்த்ததைப் போலவே தமிழ்நாட்டின் பிற அரசியல் கட்சிகளும் இந்த அமித்சா அறிக்கையின் மீது கடும் எதிர்ப்புகளைப் பதிவுசெய்து வருகின்றன.

ஒன்றிய அரசு வெளியிட்ட அலுவல் மொழி விதிகள், 1976ன் படி, மாநிலங்களை அ ஆ இ எனப் பிரித்து ஹிந்தியை அறிமுகப்படுத்துவது என்பது தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது என்பதையும் பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறார். 1976ஆம் ஆண்டின் அலுவல் மொழிகள் விதிகளின்படி, அந்த விதிகளின் தொடக்கத்திலேயே, தமிழ்நாடு தவிர்த்த இந்தியாவின் பிற பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும் எனக் கூறப்பட்டிருப்பதை அவர் தெளிவுபடுத்துகிறார். ஆனால் இதை பாஜக அரசு கண்டுகொள்ளாமலே செயல்பட்டு வருகிறது.

இது நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை என்பதால், நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கே முன்வைக்காமல், இந்த அறிக்கைகை ஒன்றிய பாஜக அரசு நேரடியாக நடைமுறைப்;படுத்தும் அபாயம் இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சுட்டிக்காட்டுகிறார்.

இந்தப்பாடு குறித்து ஒன்றிய அரசு இதுவரை வெளிப்படையாக எதையும் பேசவில்லை.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,399.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.