Show all

தலைமை அறங்கூற்றுவருக்குப் பரிந்துரை! கர்நாடக ஹிஜாப் வழக்கில், இரண்டு அறங்கூற்றுவர்களின் மாறுபட்ட தீர்ப்பின் காரணமாய்

உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மூன்று கிழமைகளுக்கு முன்பு அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், அறங்கூற்றுவர்கள் தீர்ப்பை நாள் குறிப்பிடாமல் கர்நாடக ஹிஜாப் வழக்கை ஒத்திவைத்தனர். இந்நிலையில், இன்று அறங்கூற்றுவர்கள் ஹேமந்த் குப்தா, சுதன்சு துலியா அமர்வு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கினர்.

26,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: கர்நாடக உயர் அறங்கூற்றுமன்ற ஹிஜாப் தடை உத்தரவுக்கு எதிரான வழக்கில், உச்ச அறங்கூற்;றுமன்ற இரு அறங்கூற்றுவர்கள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில், சரியான வழிகாட்டுதலுக்காக வழக்கு தலைமை அறங்கூற்றுவருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக உயர் அறங்கூற்றுமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுகளை அறங்கூற்றுவர் ஹேமந்த் குப்தா தள்ளுபடி செய்து கர்நாடக உயர் அறங்கூற்றுமன்ற தீர்ப்பை ஆதரித்துள்ளார். அதேவேளையில் அறங்கூற்றுவர் சுதன்சு துலியா, இதில் மாறுப்பட்ட பார்வை இருப்பதாக கூறி, கர்நாடக அரசின் ஹிஜாப் தடை அரசாணையை களைவு செய்வதாக கூறினார்.

இதையடுத்து, வழக்கு சரியான வழிகாட்டுதலுக்காக உச்ச அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் யு.யு.லலித்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் ஏழு மாதங்களுக்கு முன்பு அரசு கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து அடுத்தடுத்த கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநில முழுவதும் இரு தரப்பு மாணவர்களிடையே போராட்டம் வெடித்தது.

கர்நாடக அரசு கல்வி நிலையங்களில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வர தடை விதித்து அரசாணை வெளியிட்டது. இதையடுத்து, உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய மாணவிகள் அம்மாநில உயர் அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை செய்தனர்.

மாணவிகளின் மனுவை விசாரித்த அறங்கூற்றுமன்றம், இஸ்லாமியத்தில் ஹிஜாப் அணிவது கட்டாயம் இல்லை என்றும் கர்நாடக அரசின் ஹிஜாப் தடை உத்தரவு செல்லும் எனவும் தீர்ப்பளித்தது. இதையடுத்து கர்நாடக உயர் அறங்கூற்றுமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மேல் முறையீட்டு மனு பதிகை செய்தனர். 

உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மூன்று கிழமைகளுக்கு முன்பு அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், அறங்கூற்றுவர்கள் தீர்ப்பை நாள் குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில், இன்று அறங்கூற்றுவர்கள் ஹேமந்த் குப்தா, சுதன்சு துலியா அமர்வு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கினர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,400.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.