Show all

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வினா! சனாதன தர்மம் குறித்து விளக்கம் வேண்டி தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.இரவிக்கு

சனாதன தர்மம், ஹிந்து மதம், உள்ளிட்ட விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விடையளிக்கக் கோரி தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு நியமித்துள்ள ஆளுநர் ஆர்.என்.இரவிக்கு சென்னையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி என்பவர் மனு அனுப்பியுள்ளார்.

20,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு நியமித்துள்ள ஆளுநர் ஆர்.என்.இரவி பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில் சனதன தர்மம் சிறப்பானது என்று கொண்டாடி கெத்து காட்டி வருகிறார். இந்நிலையில் சனாதன தர்மம், ஹிந்து மதம், உள்ளிட்ட விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விடையளிக்கக் கோரி தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு நியமித்துள்ள ஆளுநர் ஆர்.என்.இரவிக்கு சென்னையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி என்பவர் 03,ஆவணி (ஆகஸ்டு19) அன்று மனு அனுப்பியுள்ளார்.

அதில் சனாதன தர்மம் குறித்து அதிகம் பேசும் ஆளாக தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு நியமித்துள்ள ஆளுநர் ஆர்.என்.இரவி இருப்பதால் அது குறித்த வினாக்களுக்கு விளக்கம் அளிக்க பொருத்தமான ஆள் எனக் குறிப்பிட்டு 19 வினாக்களை மனுவில் முன்வைத்துள்ளார்.

1. சனாதன தர்மத்தின் கொள்கைகள் என்ன?
2. சனாதன தர்மக் கொள்கைகளுக்கான உரைகள் ஏதேனும் உள்ளனவா அல்லது செவிவழித் தகவல் மட்டும்தானா?
3. சனாதன தர்மத்தை உருவாக்கியவர் அல்லது எழுதியவர் யார்?
4. தமிழ் இலக்கியங்கள் அல்லது தென்னிந்தியக் கலாச்சாரத்தில் சனாதன தர்மம் குறித்து எழுதப்பட்டுள்ளதா அல்லது பேசப்பட்டுள்ளதா?
5. சனாதன தர்மத்தை பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலோ அல்லது உலகின் வேறு எந்த நாட்டிலோ பின்பற்றுகிறார்களா?
6. சனாதன தர்மத்தை கிறித்துவர்களோ இஸ்லாமியர்களோ பின்பற்றுகின்றார்களா?
7. ஹிந்து என்பது யார்? ஏதேனும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் ஹிந்து என்ற சொல் இடம் பெற்றுள்ளதா?
8. 1964-ல் லக்னோவில் வெளியிடப்பட்ட பெர்சிய மொழி அகராதியில் ஹிந்து என்றால் திருடன், அடிமை, வழிபறியாளர் என்று விளங்கிக் கொள்ளும்படி குறிப்பிடப்பட்டுள்ளதால் அதன் பொருள் என்ன?
9. ஆங்கிலேயர்கள் ஹிந்து சட்டம் கொண்டு வரும்வரை தென்னாட்டவர்களுக்கு ஹிந்துத்துவா பற்றி எதுவும தெரியாது என்பது உண்மையா?
10. ஹிந்து என்கிற சொல்லை உருவாக்கியது யார்? அந்த சொல்லுக்கான பொருள் ஏதேனும் இந்திய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதா?
11. சனாதன தர்மத்தில் குறிப்பிடப்;பட்டுள்ள தெய்வங்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றார்களா? அல்லது அகவை முதிர்வின் காரணமாக இறந்து விட்டார்களா?
12. உயிருடன் இருக்கின்றார்கள் என்றால் எங்கு வசிக்கின்றார்கள்? அவர்களுடைய அன்றாடப் பணிகள் என்ன? அவர்களுக்கு யார் உடைகளை தைத்துக் கொடுப்பது? அவர்கள் உடைகள் மற்றும் நகைகளை எங்கே வாங்குகிறார்கள்?
13. ஆர்.எஸ்.எஸ். எனப்படும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் நீங்கள் உறுப்பினரா?
14. மிகப்பெரிய கருத்தியல் அறிஞரும், திராவிட இயக்கத்தின் நிறுவருமான தந்தை பெரியார் ஈ.வே,ராமசாமியின் கொள்கைகளை ஏற்றுக் கொள்கின்றீர்களா? ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் ஏன்?
15. நான்கு வர்ணங்கள் உள்ளதாக கூறும் ஹிந்து மதத்தில் சதுர்வர்ண தர்மத்தை உருவாக்கியது யார்?
16. நீங்கள் சதுர்வர்ண தர்மத்தைப் பின்பற்றி அதைக் கடைபிடிக்கின்றீர்களா?
17. மற்ற மதங்களால் சதுர்வர்ண தர்மம் ஏன் பின்பற்றப்படவில்டலை?
18. தமிழ்நாடு அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல், பொது நிகழ்ச்சிகளில் சனாதன தர்மம் குறித்துப் பேச இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்த விதி உங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது?
19. தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் இந்திய அரசியலமைப்பு சட்டம் விலக்கு அளிக்காமல் உள்ள நிலையில், தன்னிச்சையாக நீங்கள் பேசுவது அரசியலமைப்புச் சட்ட மீறல் இல்லையா?
என்பதான வினாக்களை வழக்கறிஞர் எஸ்.துரைசாமி எழுப்பியுள்ளார். இந்த வினாக்களுக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விடையளிக்கும் படி கோரிக்கை வைத்துள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,362.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.