Show all

நேற்று தொடங்கியதல்ல! ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டம்

11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்தும்,  அதை முழுதுமாக மூடக் கோரியும், மக்கள் தன்னெழுச்சியாக தூத்துக்குடியில் நேற்று கூடியது ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

நேற்றைய கூட்டத்தை ஒருங்கிணைத்தவர்களும், தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்களைக் கட்டமைத்து வருபவர்களுமான  பாத்திமாபாபு, முருகன், மகேஸ், வேல்ராஜ், விமல், ராஜேஸ், துரைப்பாண்டியன் ஆல்பர்ட், சுர்ஜித், பிரபு, கிட்டு ஆகியோர் தெரிவித்ததாவது:

'தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமைந்திருக்கிறது வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை. தாமிரத்தை உருக்குவதே இந்த ஆலையின் பணி.

இந்த ஆலையால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும், காற்றும் நிலத்தடி நீரும் மாசுபடும் என்று எதிர்த்தோம். ஆனால் அப்போது வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு என்று கூறி சில பகுதி மக்களை தங்களுக்கு ஆதரவாக மாற்றியது ஸ்டெர்லைட் ஆலை.

ஆனால் காலப்போக்கில் இந்த ஆலையின விச வாயுவால், கண்பார்வை குறைபாடு உட்பட பலவித பாதிப்புகள் ஏற்பட்டன. தங்கள் கண்ணுக்கு நேராகவே நிலம், நீர், காற்று மூன்றும் மாசுபடுவதை உணர்ந்தார்கள்.

ஆகவே தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் அனைவரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று போராட்டத்தில் குதிக்க ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம், 5ம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம்,  ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்புகளை விரிவாக எடுத்துரைத்து ஆலையை மூடக்கோரி மக்கள் மனு அளித்தனர்.

தொடர்ந்து பிப்ரவரி 12ம் தேதி   வீராங்கனை அமைப்பின் பாத்திமாபாபு உள்ளிட்டோரின் ஆலோசனையின் பேரில் பொதுமக்கள் தூத்துக்குடி  வி.வி.டி. சிக்னல் பகுதியில் உண்ணாவிரதம் இருந்தனர்.

உயர் அதிகாரிகள் வந்து பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு இருந்தது. ஆனால் யாரும் வரவில்லை. இதையடுத்து (வாங்கிய அனுமதியன்படி) மாலை 5 மணிக்கு கூட்டம் கலையவில்லை.  அருகில் இருந்த எம்.ஜி.ஆர். பூங்கா பகுதியில் மக்கள் திரண்டனர்.

நள்ளிரவில் துணை ஆட்சியர் உட்பட அதிகாரிகள் வந்தனர். ஆனால் ஆலை மூடப்படுவது குறித்து எந்தவித உத்தரவாதமும் தரப்படவில்லை. ஆகவே தொடர்ந்து மக்கள் அங்கேயே திரண்டிருந்தனர்.

மறுநாள் 13ம் தேதி பகலில் வி.வி.டி. சிக்னல் பகுதியில் அன்று காவிரி விவகாரத்தை முன்னிட்டு  அனைத்துக்கட்சி போராட்டம் நடந்தது.

இதனால் பூங்கா அருகில் திரண்டிருந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பார்களை திருமண மண்டபத்தில் அடைத்தார்கள். பிறகு மாலை காவல் நிலையத்துக்கு  அவர்களை அழைத்த காவல்துறையினர், நள்ளிரவு போராட்டக்காரர்களை கைது செய்தனர். (ஆனால் முன்னதாக மாலையிலேயே கைது செய்யப்பட்டதாக காவல்துறை குறிப்பேட்டில் பதிவு செய்துகொண்டது.)

நெல்லை  பாளையங்கோட்டை சிறையில் ஆண்களும்,  கொக்கரக்குளம் சிறையில் பெண்களும் அடைக்கப்பட்டனர்.

மறுநாள் 14ம் தேதிதான் இந்த கைது விசயம் தூத்துக்குடியில் பரவியது. வர்த்தகர்கள் சங்கத்தினர் 15ம் தேதி கூடிப்பேசுவது என்று தீர்மானித்தார்கள். அன்று வணிகர் சங்க தலைவர் விநாயகமூர்த்தி செயலாளர் பாஸ்கர்.. ஆகியோர் ஒருங்கிணைப்பில் கூடிய வர்த்தக சங்கத்தினர் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து பல தீர்மானங்கள் இயற்றினர்.  அதில் கைது நடவடிக்கையும் கண்டித்திருந்தனர்.

ஒரு நாள் கடையடைப்பு செய்வதென்று வர்த்தகர்கள் தீர்மானித்தனர். கூடங்குளம் எதிர்ப்பு போராட்டக்குழு ஒங்கிணைப்பாளர்கள் அன்று பேரணியும் கூட்டமும் வைத்துக்கொள்ளலாம் என்றனர்.

இதையடுத்து வணிகர்சங்கம் சார்பாக, ஸ்டெரிலைட் போராட்ட விசயங்களில் ஈடுபட தெர்மல் சோ.ராஜா பொறுப்பேற்றார்.

வர்த்தகர் சங்கம்  ஏற்பாடு செய்த இந்த கடையடைப்புக்கு போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் ஆதரவு திரட்டினர்.    கார், ஆட்டோ ஓட்டுநர் அமைப்பு, மினிபஸ் உரிமையாளர் அமைப்பு, உப்பு உற்பத்தியாளர்கள், மீனவர்கள், உட்பட அனைத்துத்தரப்பினரையும் சந்தித்து பேசினர்.

இதையடுத்து மார்ச் 9ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.  காவல்துறை அனுமதி கேட்டனர். காவல்துறை அனுமதி தரவில்லை.

ஆகவே நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். 17ம் தேதி போராட்டம் நடத்த அனுமதி வேண்டும் என்று கோரினார்கள்.

நீதிமன்றம், இது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு 21ம் தேதி வரை அவகாசம் அளித்தது.

இறுதியில் பொதுக்கூட்டத்தக்கு மட்டும் 18 நிபந்தனைகளை விதித்து அனுமதி அளித்தது காவல்துறை. பேரணிக்கு அனுமதி அளிக்கவில்லை. அதாவது 24ம் தேதி மாலை 6.30 முதல் 19.30 வரை வி.வி.டி. சிக்னல் அருகே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி.

உடனே வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பொதுக்கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இப்படி சமூகவலைதளங்கள் மூலமாக பொதுக்கூட்டம் பற்றிய அறிவிப்பு மக்களிடம் சேர்ந்தது.

பொதுக்கூட்டம் நடக்கும் தினமான நேற்று, மதியம் முதலே தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார மக்கள் பொதுக்கூட்ட திடலை நோக்கி வரத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் மக்கள் பல்வேறு திசைகளில் இருந்து பொதுக்கூட்ட திடலை நோக்கி அணியணியாய் வர, எந்தவொரு ஏற்பாடும் செய்யப்படாமலேயே தன்னெழுச்சியாயாய் பல பேரணிகள் போல ஆகிவிட்டது.

இதுதான் எந்தவொரு கட்சியும் அழைப்பு விடுக்காமல், பங்கெடுக்காமல் மக்கள் தென்னெழுச்சியாய் பேரணி(கள்) நடத்திய நிகழ்வுகள்.

6.30க்கு தொடங்கிய கூட்டம் தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன்,  தூக்குடி மாவட்ட வணிகர் சங்க தலைவர் விநாயக மூர்த்தி, மீனவர் அமைப்பின் தலைவர் ராபர்ட், வீராங்கணை மக்கள் அமைப்பின் தலைவர் பாத்திமாபாபு உள்ளிட்டோர் பேசினர்.

இரவு 9.30 மணி வரை கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்தும், 9 மணிக்கே கூட்டம் முடிக்கப்பட்டது. மீதி அரைமணி நேரத்தில் அந்தப்பகுதியில் மக்கள் கூடியதால் பரந்து கிடந்த குப்பைகளை சுத்தப்படுத்தினார்கள் தன்னார்வலர்கள்.

இந்த நிலையில் இன்று மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்கள் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள். இதில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க இருக்கிறார்கள்.

இது ஸ்டெர்லைட்டுக்கு எதிரான இன்றைய போராட்டம். தொடக்க நிலைப் போராட்டத்தை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதோ அந்த வரலாறு: 

ஆலைகள் நாட்டு மக்களுக்கு தேவைதான். ஆனால், சுற்றுச்சூழலையும் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் ஆலையால், சுற்றிலும் வசிக்கும் மக்களின் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது என்றால் எப்படி இருக்கும்? அத்தகைய பதற்றத்தில் இருக்கிறார்கள், தூத்துக்குடி மக்கள். அவர்களின் நிம்மதியை கெடுத்த ஆலை. ஸ்டெர்லைட்! உண்மையிலேயே மக்களின் அச்சம் நியாயமானது தானா? மக்களின் எதிர்ப்புக்கு காரணம் இருக்கிறதா? அரசியல்வாதிகளின் நிலைப்பாடு என்ன? என்பது போன்ற பல விசயங்களை அலசுவோம்.

ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை தூத்துக்குடிக்கு வந்ததே தனிக்கதை. இந்த ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வால். லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும், வேதாந்தா ரிசோர்ஸஸ் என்ற நிறுவனத்தின் தலைவர். இந்த நிறுவனத்துக்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல இடங்களில் தாமிரத்தாதுவை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் இருக்கின்றன.

இந்தியாவில் வேதாந்தா- ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை தொடங்க திட்டமிட்ட அனில் அகர்வால், அதற்கான இடத்தை குஜராத்தில் தேடினார். ஆனால், அந்த மாநில அரசு அனுமதி தர மறுத்து விட்டது. அடுத்து அவரது பார்வை கோவா மாநிலத்தின் பக்கம் திரும்பியது. ஆனால் அங்கும் அவரது முயற்சி பலிக்கவில்லை. அடுத்து 1994ல் மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் 700 கோடி மதிப்பில் ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க திட்டமிட்டார். மாநில அரசின் அனுமதியுடன் தொடங்கிய திட்டம் முழுமை பெறுவதற்குள் சோதனையை சந்தித்தது. அதாவது, 200 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் முடிவடைந்த நிலையில் மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் பயந்து போன அப்போதைய மகாராஷ்டிர முதல்வரான சரத்பவார், 'இந்த ஆலை பற்றி மாநில சுற்றுச்சூழல் வல்லுனர்கள் குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்' என சமாளிக்க பார்த்தார். ஆனால் தங்கள் கொள்கையில் இருந்து பின் வாங்க மறுத்த அந்த மாநில மக்கள், 'ஆலையை அகற்ற வேண்டும்' என்கிற ஒற்றை கோரிக்கையிலேயே விடாப்பிடியாக இருந்தனர். தொடர்ந்து நடந்த போராட்டங்களால் நிலை குலைந்த மகாராஷ்டிர அரசு, ஆலை பணிகளை நிறுத்த உத்தரவிட்டது.

இதனால் அங்கிருந்து கிளம்பிய ஸ்டெர்லைட் நிறுவனம் கர்நாடகா, கேரளாவில் இடம் தேடி அலைந்தது. அந்த மாநில அரசுகள் ஆலைக்கு அனுமதி கொடுக்க திட்டவட்டமாக மறுத்து விட்டன. போபால் விஷ வாயு கசிவு சம்பவத்துக்கு பிறகு பல மாநிலங்களிலும்ஆபத்து மிகுந்த ஆலைகளை அமைக்க எதிர்ப்பு வலுத்ததால், மாநில அரசுகள் பின்வாங்கின.  இதனால் சோர்ந்து போயிருந்த அனில் அகர்வாலுக்கு பச்சை கம்பள வரவேற்பு கொடுத்தது, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க அரசாங்கம்.

துறைமுக நகரான தூத்துக்குடியில் ஆலையை அமைக்க அனுமதி தர முதல்வர் ஜெயலலிதா சம்மதித்தார். அகர்வாலுக்கு அடித்த இந்த அதிர்ஷ்டத்தை என்ன சொல்வது? காரணம், தூத்துக்குடியில் ஆலையை அமைத்தால் ஆஸ்திரேலியாவில் வேதாந்தா நிறுவனம் வெட்டி எடுக்கும் தாமிர தாதுக்களை அப்படியே கப்பல் மூலம் கொண்டு வந்துவிட முடியும். இந்த ஆலையில் தாமிரத்தை உருக்கி தகடுகளாக மாற்றும் போது 'பை ப்ராடக்ட்' என்கிற முறையில் உடன் கிடைக்க கூடிய, தங்கம், சல்ப்யூரிக் அமிலம், பாஸ்ஃபோரிக் அமிலம் ஆகியவற்றையும் நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியும். அனில் அகர்வால் கணக்கு இப்படி இருக்கையில், தூத்துக்குடியில் ஆலைக்கு எதிர்ப்பு கிளம்பும் என்பதை அவர் நினைத்து கூட பார்க்கவில்லை. பொது மக்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகளும் களம் இறங்கி போராட்டத்தில் குதித்தன. 'மராட்டிய மண்ணில் இருந்து அடித்து விரட்டப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர நச்சுத் தொழிற்சாலை எங்களுக்கு தேவை இல்லை. இதை இந்த மண்ணில் காலூன்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்' என்று அரசியல் கட்சியினர் வேகம் காட்டினார்கள்.

இந்த கட்சிகளை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது அனில் அகர்வாலுக்கு தெரிந்து இருந்தது. வீர வசனம் பேசிய தலைவர்கள் அவரை சந்தித்த பிறகு மவுனம் காக்க தொடங்கினார்கள். ஆலைக்கு எதிராக தினமும் புதிய பெயர்களில் அமைப்புகள் முளைத்தன. உண்ணாவிரதம்,. ஆர்ப்பாட்டம் என ஸ்டெர்லைட்டை மிரட்டியவர்களை அழைத்து பேசியது, ஆலை நிர்வாகம். இதில் 'கவரப்பட்ட' சில கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் போராட்ட பந்தலை பிரித்துக் கொண்டு வீடுகளில் போய் முடங்கினார்கள். 

சில அமைப்புகளும் கட்சிகளும் மட்டுமே மக்களுக்காக கடைசி வரை போராட்ட களத்தில் நின்றன. சுமார் இரண்டு வருடமாக சாதி, மதம், தொழில் வேறுபாடுகளை மறந்து எழுச்சியுடன் போராடிய மக்கள், 1996 சட்டமன்ற தேர்தலை துருப்பு சீட்டாக பயன்படுத்த திட்டமிட்டனர். மகளிர் அமைப்புகளும் உத்வேகத்துடன் இதில் ஈடுபட்டனர். மக்களின் இந்த முடிவு அரசியல் கட்சிகளை அதிர வைத்தது.

ஸ்டெர்லைட்டை முன்வைத்து தேர்தலை சந்திப்பது ஆபத்தானது என்பதை அரசியல் கட்சியினர் புரிந்து வைத்து இருந்தனர். ஆலை நிர்வாகமும் அரசியல் சூழலில் அப்படி ஒரு நிலைமை ஏற்படுவதை விரும்பவில்லை. இந்த நிலையில், யாருமே எதிர்பாராத வகையில் தென் மாவட்டத்தில் சாதிக்கலவரம் மூண்டது. எங்கு பார்த்தாலும் வெட்டு குத்து என வெடித்த கலவரம் குக்கிராமங்களை கூட விட்டு வைக்கவில்லை. அப்பாவி மக்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன.

விவசாய நிலங்களில் விளைந்து கிடந்த பயிர்கள் தீ வைத்து கொளுத்தபப்ட்டன. மக்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டதில் உயிர் பலிகள் ஏற்பட்டன. எங்கும் பதற்றம் நிலவியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சினார்கள். இந்த மோதல் ஸ்டெர்லைட் போராட்டத்தை திசை திருப்பியது. அதுவரையிலும் போராட்ட களத்தில் அண்ணன் தம்பியாக நின்றவர்கள், சாதி மோதலுக்கு பின்னர் முகம் பார்த்து பேசிக் கொள்ளவே தயங்கினார்கள்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்களுக்கு மக்கள் கூட்டம் குறைவாகவே வந்தது. அதே சமயம் சாதிக்கூட்டங்கள் பலத்த ஆரவாரத்துடன் நடந்தன. ஸ்டெர்லைட் போராட்டம் நடந்த மைதானங்களில் சாதிக் கூட்டங்கள் ஆரவாரமாக நடந்தன. மக்களும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செல்ல தொடங்கினார்கள். இதனால் ஸ்டெர்லைட் எதிர்ப்பு முனை மழுங்கி போய் கிடந்தது.

இந்த சமயத்தில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்ட தமிழ் மாந்தன் தலைமையிலான 'ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம்' சட்ட ரீதியிலான போராட்டத்தையும் கையில் எடுத்தது. இந்த இயக்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அத்துடன் ம.தி.மு.க.வும் ஸ்டெர்லைட் எதிர்ப்பை தொடர்ந்து கடைப்பிடித்தது.

இந்த சமயத்தில், பள்ளிகள், கல்லூரிகள், சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி மற்றும் நகராட்சி மன்ற தலைவர்கள், மத போதகர்கள், அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டம் என்கிற பெயரில் லட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டது. கத்தோலிக்க மையங்கள், கல்வி நிறுவனங்கள், முதியோர் இல்லங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மையங்கள் என பல்வேறு அமைப்புகளுக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் பண உதவி செய்தது. மீனவ மக்களுக்கு மீனவ வாழ்வாதார திட்டம் என்கிற பெயரில் பணம் தண்ணீராக செலவு செய்யப்பட்டது.

தொடர்ந்து ஸ்டெர்லைட் கடந்து வந்த பாதை என-

1.ஸ்டெர்லைட் வரமா... சாபமா?  

2.ஸ்டெர்லைட் நிறுவனம் மன்னார் வளைகுடா பகுதியில் ஆலையை அமைத்தது சரிதானா..? 

3.தொடர்ந்து நடந்த போராட்டங்கள் என்ன..?அவை எப்படி எல்லாம் ஒடுக்கப்பட்டது? 

4.போராட்டம் நடக்கும்போதே செயல்பாட்டை தொடங்கிய ஸ்டெர்லைட்  

5.விதிமுறை மீறல்களுக்காக ஸ்டெர்லைட் நிர்வாகம் குட்டுப்பட்ட விவரங்கள்  

6.குழு அறிக்கையை ஏற்றுக்கொண்டு ஆலையை மூட உத்தரவிட்ட உயர் அறங்கூற்றுமன்றம்  

7.நோயாளிகளின் நகரமாக தூத்துக்குடி மாறிய துயரம்..!  

8.உயர் அறங்கூற்றுமன்றம் ஆலையை மூட உத்தரவிட்டது குறித்த தகவல்கள்  

9.ஆலையில் நடந்த விபத்துக்கு விடுதலைப்புலிகள் மீது பழி போட்ட ஸ்டெர்லைட் நிர்வாகம்  

10.ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து...ஆலையை உடனடியாக மூட வேண்டும் என உத்தரவு... 

11.அதிரடியில் இறங்கி ஆலையை மூடியது தமிழக அரசு.. 

12.ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான உத்தரவை பிறப்பிக்க செய்தார் ஜெயலலிதா.

13.ஆலையை மூடும்படி உயர் அறங்கூற்றுமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த உச்ச அறங்கூற்றுமன்றம்  

14.பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்க இருந்த நிலையில், நீதிபதி வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு 

15.உச்ச நீதிமன்றத்துக்கு சட்ட ரீதிய

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.