Show all

புரிந்து கொண்டதான புதியபாதையைப் பாராளுமன்றத்திற்கு அமைக்கும் முயற்சியில் பாமக! பாஜக தமிழ்நாட்டிற்குத் தேவையில்லாத மதவாதச்சதை

செயலலிதா மறைவுக்குப் பிந்தையதான பாமக சார்ந்த அரசியல் கூட்டணியில் பாஜக- கூட்டணிக்கும், தமிழ்நாட்டிற்கும் தேவையில்லாத மதவாதச்சதை என்பதை புரிந்து கொண்டு இரண்டு ஆண்டுகளில் வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு பாஜக இல்லாத புதிய கூட்டணியில், புதிய பாதையை அமைக்க திட்டமிட்டு வருகிறது பாமக.

10,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5124: பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருந்தாலும் இப்போதே அதற்கான பணிகளை கட்சிகள் தொடங்கி விட்டன. பாராளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் ஒன்றியத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் களம் இறங்கும் பா.ஜனதாவும், காங்கிரசும் தமிழ்நாட்டில் திமுக அல்லது அதிமுக கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

செயலலிதா உயிருடன் இருந்தவரை கூட்டணிப்பாட்டில் டெல்லி பா.ஜனதா தலைவர்கள் அதிமுக தலைமை எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலேயே இருந்தார்கள்.

 

ஏனெனில் தான் விரும்பிய உடன்பாட்டுக்கு சம்மதிக்காவிட்டால் தனித்து தேர்தல் களத்தை சந்திக்கும் ஆற்றல் அவரிடம் இருந்தது. அதற்கு எடுத்துக்காட்டு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு  நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்.

மோடியோடு கூட்டணி உடன்பாடு ஏற்படாததால் செயலலிதா தனித்து தேர்தலை சந்தித்தார். 'மோடியா? இந்த லேடியா?' என்று நேருக்கு நேர் அறைகூவல் விடுத்து சாதித்தார். அதாவது 37 தொகுதிகளில் வெற்றி பெற்றார்.

ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக தலைமையால் உறுதியான முடிவுகளை எடுக்க முடியவில்லை. கூட்டணி விடயத்தில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நிலைக்கும், சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டார்கள்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு படுதோல்வியைத்தான் சந்தித்தார்கள். ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. பா.ஜனதா ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.

அதை தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையவில்லை. அதிமுக 66 இடங்களை பெற்று எதிர்க்கட்சியாக மாறியது.

அதிமுக- பா.ஜனதா கூட்டணி தொடர்ந்தாலும் இணக்கமான மனநிலையில் இல்லை என்பதே உண்மை. தலைவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப ஒத்துப்போனாலும் கீழ் மட்டத்தில் இருக்கும் தொண்டர்கள் பா.ஜனதா கூட்டணியில் இருப்பதால் தான் வெற்றி பெற முடியவில்லை என்று மிகத் தெளிவோடும் வெளிப்படையாகவும் பேசுகிறார்கள். பாஜக அதிமுக கூட்டணிக்கு தேவையில்லாத மதவாதஒட்டுச்சதை என்று அவர்கள் அங்கலாய்க்கின்றனர்.

செயலலிதா, கருணாநிதி ஆகிய இரு பெரும் தலைவர்களும் இல்லாத நிலையில் தமிழ்நாட்டில் தங்கள் கட்சியை வலுப்படுத்துவதோடு பாராளுமன்ற தேர்தலில் கணிசமான பாராளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற பகல்கனவில் திளைத்து வருகிறது பாஜக.

இந்த நிலையில் அதிமுக- பா.ஜனதா இடையே உரசல் ஏற்பட்டுள்ளது. இரு கட்சியினரும் பேரளவாக கருத்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தச்; சூழ்நிலையைப் பயன்படுத்தி பா.ஜனதா இல்லாத வலுவான கூட்டணியை உருவாக்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முயன்று வருகிறார்.

இதுவரை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளோடும் கூட்டணி அமைத்தும், தனித்தும் போட்டியிட்டு எதிர்பார்த்த அளவுக்கு பாமகவால் சாதிக்க முடியாமல் போனது.

இப்போது கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள அன்புமணி தனது தலைமையில் கட்சியை வலுவான நிலைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறார். அதற்கு வருகிற பாராளுமன்ற தேர்தல் களத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.

ஏற்கனவே திமுக அணியில் பாமகவை சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகி விட்டது. எனவே பாஜக இல்லாத ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும். அதன் மூலம் பாஜக எதிர்நிலை வாக்குகள், திமுக எதிர்நிலை வாக்குகள் இரண்டையும் தங்கள் பக்கம் திருப்ப முடியும் என்று அன்புமணி ராமதாஸ் கருதுகிறார்.

அண்மையில் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வாழ்த்து பெற்ற போதே இருவரும் இந்த விடையங்களை பேசியதாகவும் கூறப்படுகிறது.

கம்யூனிஸ்டு கட்சியினரும் பாஜக அல்லாத அதிமுக கூட்டணியில் இடம்பெற விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

இதனால் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் அன்புமணி ராமதாஸ் குதுகலத்துடன் ஈடுபட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,414.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.