நடுவணரசு மனித வள மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி
இரானியும், காங்கிரஸ் பிரமுகர் பிரியங்கா சதுர்வேதியும் சமூக வலைதளத்தில்
காரசாரமான கருத்துகளுடன் மோதிக் கொண்டனர். காங்கிரஸ் பிரமுகர்
பிரியங்கா சதுர்வேதி சமூக வலைதளமான சுட்டுரையில்
வேறொருவருடன் திங்கள்கிழமை உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர், ‘ஸ்மிருதி இரானியின் உயிருக்கு
அச்சுறுத்தல் இருப்பதால் அவர் இசட் பிரிவு பாதுகாப்பைப் பெற்றுள்ளார். ஆனால் இங்கு
பாலியல் துன்புறுத்தல் மற்றும் கொலை மிரட்டல் விவகாரங்களுக்கு விசாரணையை ஏற்படுத்த
நான் போராடிக் கொண்டிருக்கிறேன்’ என்று குறிப்பிட்டார். இதற்கு ஸ்மிருதி
இரானி அளித்த பதிலில், ‘எனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு
கிடையாது’ என்றார்.
அதற்கு பிரியங்கா, ‘உள்துறை அமைச்சகத்தின்
உள்செயல்பாடுகளைப் பற்றி எனக்குத் தெரியாது. செய்தித் தாள்களில் வரும் செய்திகளை அடிப்படையாகக்
கொண்டே நான் கூறினேன்’ என்று தெரிவித்தார். பின்னர் இரானி,
‘என்னுடைய பாதுகாப்பு குறித்து நீங்கள் ஏன் அவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்கள்? ஏதேனும்
திட்டம் தீட்டியுள்ளீர்களா?’ என்று கேள்வி எழுப்பினார். அப்போது பிரியங்கா,
‘உங்களுக்காக திட்டங்களைத் தீட்டி என் பொன்னான நேரத்தை வீணடிக்க மாட்டேன். அதனால் நீங்கள்
கவலை கொள்ள வேண்டாம். வேறொரு பல்கலைக்கழகத்தில் பிரச்னைகளை உருவாக்குவதில் உங்கள் கவனத்தைச்
செலுத்துங்கள்’ என்றார். ‘அஸ்ஸாம் தேர்தலில்
தோற்றதே ராகுல் காந்தியின் திறமையாகும்’
என்று
இரானி தெரிவித்தார். அதற்கு கிண்டலாக பிரியங்கா கருத்து வெளியிடுகையில், ‘தேர்தல்களில் தொடர்ந்து
தோல்வியடைந்தும் நடுவண் அமைச்சரானதே உங்களது திறமை’ என்று குறிப்பிட்டார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.