Show all

மக்களவையில் தேர்தல் கருத்துப் பரப்புதல் பயிற்சி மேற்கொண்டார் மோடி

26,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்து மோடி நேற்று மக்;களவையிலும், மாநிலங்களவையிலும் பேசியபோது, அவரின் பேச்சு முழுக்க முழுக்க காங்கிரசை இழிவு செய்யும் கோணத்தில் இருந்தது. இது அவருக்கு வந்;;;து விட்ட தேர்தல் அச்சத்தை வெளிப் படுத்துவதாக தெரிந்தது. மோடியின் வசைபாடலுக்கு நேரு முதல் ஜெய்ராம் ரமேஷ் வரை தப்பிக்கவில்லை.

இந்தியாவின் முதல் தலைமை அமைச்சராக சர்தார் வல்லபாய் பட்டேல் பதவியேற்றிருந்தால் காஷ்மீர் முழுக்க இந்தியாவுடன் இருந்திருக்கும் என்ற அவர், சுல்தான் நடைமுறை மாறிவிட்டாலும் சுல்தான்கள் இன்னும் உலவுகிறார்கள் என கார்ப்பரேட்டுகளின் பினாமி ஆட்சி நடத்தும் மோடியின் பேச்சு வேடிக்கையாக இருந்தது. ஆந்திர மாநிலத்திற்கு தனி தகுதி கேட்டு மோடியின் பேச்சுக்கு நடுவே தெலுங்கு தேசம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்ட நிலையில், ஆந்திர மண்ணின் மக்களை அவமதித்தது காங்கிரஸ் என்றும், மாநில உருவாக்கங்களின் போதெல்லாம் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்தது காங்கிரஸ் என்றும் கூறி, அந்த பக்கமாக பிரச்சினையை தள்ளிவிட்டார் மோடி. இதுதவிர தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் அரசு திட்டங்கள் வேகம் பிடித்துள்ளன என்று கூறி சில புள்ளி விவரங்களை எடுத்துக் கூறினார். ஆனால் அதெல்லாம் வெறும் வடிவேல் பகடிதான். பேச்சின் 80 விழுக்காடு நேரத்தை காங்கிரஸ் எதிர்ப்புதான் ஆக்கிரமித்திருந்தது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதைத்தான் குறிப்பிட்டு, மோடி நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தவில்லை, தேர்தல் உரை நிகழ்த்தியுள்ளார் என தெரிவித்தார்.; மோடியின் ஆவேசத்திற்கு சில காரணங்கள் உள்ளன. ராஜஸ்தானில் இடைத்தேர்தல் நடைபெற்ற 2 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 1 சட்டமன்றத் தொகுதியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இம்மாநிலத்திற்கு இவ்வாண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது.

4 ஆண்டுகால மோடி ஆட்சிக்கு பிறகு, இயல்பாகவே காங்கிரஸ் பக்கம் கணிசமான மக்களின் ஆதரவு போகத் தொடங்கியுள்ளது. குஜராத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற முன்னேற்றமும், ராஜஸ்தான் வெற்றியும் கவனிக்கத்தக்கதாக உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, காங்கிரஸ் மீதான கோபத்தை மீண்டும் மக்களிடம் எழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என மோடி நினைக்கிறார். எனவே தனது வழக்கமான அதிரடி உரைகளை தொடங்கிவிட்டார் என்ற கருத்து உள்ளது.

இன்னொரு விசயமும் இதில் கவனிக்கத்தக்கது. நாட்டில் இப்போது வேலை இல்லா திண்டாட்டம் பெருகியுள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையோ நஞ்சு போல ஏறிக்கொண்டுள்ளது, பல மாநிலங்கள் ஆற்று நீருக்காக சண்டை போடுகின்றன, வேளாண் பெருமக்கள் மழையின்றி தவிக்கிறார்கள், நடுத்தர வர்க்கத்தினர் வரவு-செலவில் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர், இதுபோன்ற முதன்மையான விசயங்களுக்கு பதிலளிக்காமல் காங்கிரஸ் பற்றியே பேசி, விசயத்தை திசை திருப்பியுள்ளார் மோடி என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,692

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.