26,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலகப் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய ரூ.40 கோடி செலுத்த வேண்டியுள்ளது. இதற்கு தற்போது வரை ரூ.36 கோடி ரொக்கமாக வசூலாகியுள்ளது. ரூ.2 கோடியே 82 லட்சத்துக்கு சிலர் உத்தரவாதம் அளித்துள்ளனர். திமுக சார்பில் ரூ.1 கோடி அளிக்கப்படும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டு நேற்று வழங்கப்பட்டது. இதையும் சேர்த்தால் இன்னும் ரூ.18 லட்சம் மட்டுமே தேவைப்படுகிறது. இந்நிலையில், தமிழக அரசு நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்திக் குறிப்பில், “தமிழக அரசின் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - ஹார்வர்டு தமிழ் இருக்கை (IITS – Harvard Tamil Chair) என்ற வங்கிக் கணக்கில் தமிழ் இருக்கைக்காக காசோலை, வரைவோலை, இணையம் வழியாக தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள், பெருமக்கள் தங்கள் நிதியை தாராளமாக வழங்கலாம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜனிடம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிஎச்.மனோஜ்பாண்டியன், தமிழ்நாடு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.எச். அரவிந்த் பாண்டியன் உள்ளிட்டோர் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை நேற்று வழங்கினர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,692
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.