29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தீபக் மிஸ்ரா என்று தமிழில் கூகுளில் தேடினால் 9,90,000 முடிவுகளும், Dipak Misra என்று ஆங்கிலத்தில் தேடினால் 5,22,000 முடிவுகளும் கிடைக்கின்றன. பொதுவாக தேசியம் தழுவிய செய்திகளில் அடிபடும் பெயரை கூகுளில் ஆங்கிலத்தில் தேடினால்தான் அதிக முடிவுகள் கிடைக்கும். ஆனால் இந்த தீபக் மிஸ்ரா பெயரில் தமிழுக்கு அப்படி என்ன ஈடுபாடு இருக்க முடியும்? வீட்டில் அடைத்து வைக்கப் பட்ட குழந்தைகள் வெளியில் அழைத்துச் செல்லப்படும் போது எவ்வளவு உற்சாகமாக ஓடித் திரிவார்கள்! அப்படித்தான் ஊடகங்கள் குறிப்பாக தமிழ் ஊடகங்கள்- எதெற்கெடுத்தாலும் அறங்கூற்று மன்ற அவமதிப்பு வழக்கு என்ற தலைப்பில் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர். இன்றைக்கு அறங்கூற்றுவர்களே இதழியலாளர்களை அழைத்து அறங்கூற்று மன்ற அவதூறு கிளப்பினால், ‘பலாச்சுளை கைநழுவி பாலில் விழுந்து, அது நழுவி தேனில் விழுந்து, அதுவும் நழுவி ஊடகங்களில் வாயில் விழுந்த கதைதான். மகிழ்ச்சிக்கு எல்லை ஏது! இதழ்களும், அறங்கூற்று மன்றங்களுக்கு இணையாக ஜனநாயகத் தூணாக வர்ணிக்கப் பட்டாலும், அறங்கூற்று மன்றங்களுக்கு ஆங்;;;கிலேயர் வழங்கி விட்டுப் போன அதிகாரத்தில் ஊடகங்களின் வருத்தம், இந்தச் சுழலில் பீறிக்கிளம்பி கொப்பளித்து வெளிப்படுகிறது. ஆங்கிலேயர்கள், அறங்கூற்றுமன்றங்களுக்கு வழங்கி விட்டுப் போன அதிகாரங்கள் சட்டத்தை சாதகமாக்கி கொண்டு சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த நடுவண் அரசில் ஆட்சிப் பொறுப்பேற்றிருந்த காங்கிரசுக்கும், இன்று ஆட்சிப் பொறுப்பில் இருக்கிற பாஜகவிற்கும், இது ஒரு மீள் பார்வையாக அமையும் என்பதில் ஐயம் இல்லை. ஊடகங்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன் படுத்திக் கொண்டு உண்மையான மக்களாட்சிக்கு வழிவகுத்திட வேண்டும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,666
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.