Show all

கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படும் காஷ்மீர் அவலம்! கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளே; என்று தெரிவிக்குமே தமிழ்ச் சொலவடை.

இரண்டு நிமிடம் மட்டுமே தொலைபேசியில் குடும்பத்தினருடன் பேச, இரண்டு மணி நேரம் கால் கடுக்க வரிசையில் காத்திருக்க வேண்டிய அவலம் காஷ்மீர் மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

29,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வெள்ளைக்காரன் நாயைக் கொல்வதென்றால் கூட காரணம் தெரிவிப்பான் என்கிற செய்தியை நமது முந்தைய தலைமுறையினர் தெரிவிப்பார்கள். மோடி ஆட்சியிலும், பிரமாண்டமான காரணங்களைத் தெரிவித்தே மக்களை நடுத்தெருவில் நிறுத்துவார்கள். கடந்த முறை காவிக்கொற்றக் குடையின் கீழ் அமர்ந்து ஆட்சி புரிந்த போது, பிரமாண்டமான காரணங்களைத் தெரிவித்தே பணமதிப்பிழப்பு செய்து ஒட்டு மொத்த நாட்டு மக்களையும் நடுத்தெருவில் நிறுத்தினார்கள்.

இந்த முறை மீண்டும் ஆட்சியேற்று காஷ்மீர் மக்கள் உடைமையும் உரிமையுமாக அனுபவித்து வருகிற தகுதியை பிடுங்கிக் கொள்ள, பிரமாண்டமான காரணங்களைத் தெரிவித்தே காஷ்மீர் மக்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளார்கள்.  

காஷ்மீரில் தகவல் தொடர்பு சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செல்பேசி சேவை, இணையதள சேவை கிடையாது. எங்கெங்கோ வாழ்ந்து கொண்டு இருக்கிற காஷ்மீர் மக்கள் சொந்த ஊருக்கு போக முடியாத பரிதாப நிலை நிலவுகிறது.

பக்ரீத் விழாக் கொண்டாட்டம் கூட காஷ்மீர் மக்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ, அங்கிருந்து கொண்டாடும் நிலை உருவானது. இருப்பினும் அவசர தொலைபேசி சேவையை அரசு ஏற்படுத்தி தந்திருக்கிறது. இந்தத் தொலைபேசி சேவையானது, சிறிநகரில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தொலைபேசியை பயன்படுத்தி, வெளியூர்களில் உள்ள குடும்பத்தினருடன் ஒருவர் பேச வேண்டுமென்றால் அவர் குறைந்தபட்சம் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் அவலநிலை உள்ளது. அப்படி 2 மணி நேரம் காத்திருந்தாலும், 2 நிமிடத்தில் உரையாடலை முடித்துக்கொள்ள வேண்டிய சூழலும் இருக்கிறது.

இப்படி இடுப்பில் தனது ஒரு அகவைக் குழந்தையை சுமந்து கொண்டு 2 மணி நேரம், காத்திருந்து டெல்லியில் உள்ள தனது சகோதரியுடன் மருபா பாத் என்ற பெண் பேசினார். தனது கண்ணீரை சமாளித்து, சூழ்நிலையை கடந்து வந்து வார்த்தைகளால் அவரால் தெளிவுபட பேசக்கூட முடியவில்லை.

இது பற்றி அவர் கூறியபோது, “என் அப்பாவுக்கு இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டு, டெல்லியில் அறுவை சிகிச்சை நடந்தது. அண்மையில் நாங்கள் இங்கு திரும்பி வந்து விட்டோம். அப்பாவின் மாத்திரை, மருந்துகள் காலியாகி விட்டன. இதை என் சகோதரியிடம் சொல்வதற்காகத்தான் வந்தேன்” என்று அவர் கூறி தேம்பி தேம்பி அழதார்.

இந்தத் தொலைதொடர்பு கட்டுப்பாடு, ஆட்கள் போக்குவரத்து கட்டுப்பாடு இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என்று டெல்லியில் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் காஷ்மீர் மாநில முதன்மை செயலாளர் ரோகித் கன்சால், “காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் விடுதலைநாள் விழா ஒத்திகை முடிந்ததும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என நம்புகிறோம்” என கூறினார்.

இதற்கிடையே 300 பொது தொலைபேசி சேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாநில நிர்வாகம் சொல்கிறது. ஆனால் இதுபற்றி அர்சலான் வானி என்பவர் கூறும்போது, “நான் எனது தேசிய தகுதி தேர்வு விண்ணப்பத்தை நிரப்புமாறு சண்டிகரில் உள்ள எனது சித்தப்பாவிடம் சொல்வதற்காக வந்துள்ளேன். 300 பொது தொலைபேசி பூத்துகள் அமைக்கப்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள். அவை எங்கே இருக்கின்றன?” என கேள்வி எழுப்பினார்.

மேலும், “எனது கைபேசி மணி ஒலிப்பதுபோல கனவு காண்கிறேன்” என்றும் கூறினார். காஷ்மீர் மக்கள் இயல்பு நிலை என்று திரும்பும் என கண்ணீரோடு காத்திருப்பது அரசு ஆட்கள் தெரிவிப்பது போல புனைவு அல்ல; உண்மைதான் என்கிற செய்திகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட்டு வருகிறது. மோடி அரசு, உண்மையிலேயே, மக்கள் வாக்களித்துதாம் வெல்கிறதா? என்கிற கேள்வி பல்வேறு தரப்பிலும் முன்வைக்கப் படுகிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,244.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.