Show all

குறிப்பிட்ட 7 நீதிஅரசர்களை நீதித்துறையின் தீவிரவாதிகள் என்று, நீதிஅரசர் கர்ணன் திறனாய்வு

நீதிஅரசர்களுக்கு எதிராக ஊழல் புகார் கூறியதற்காக உச்சநீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உள்ளாகியுள்ளவர் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிஅரசரான கர்ணன்.

     நீதிஅரசர்கள் குறித்த பேச்சு, நடவடிக்கையைத் தொடர்ந்து, கர்ணனுக்கு மனநல பரிசோதனை செய்ய கடந்த 1ம்தேதி, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

     மேலும், மன நல பரிசோதனை முடிவை வரும் 8ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

     இதற்கு பதிலடியாக கர்ணன் ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதில், உச்சநீதிமன்ற நீதிஅரசர்கள் 7 பேருக்குத்தான் மன நல பரிசோதனை செய்ய வேண்டும். எய்ம்ஸ் மன நல மருத்துவர்கள் கொண்ட குழு இந்தச் சோதனை நடத்த வேண்டும்.

     மேலும் வரும் 5 ம் தேதி எனது நீதிமன்றத்தில் அணியமாக வேண்டும் என உத்தரவில் கூறியிருந்தார்.

     மேலும் இந்த உத்தரவை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கிறேன் என்றும் நீதிஅரசர் கர்ணன் கூறியுள்ளார்.

     இதனிடையே உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று, மருத்துவர்கள் குழு இன்று கர்ணன் வீட்டுக்கு சென்றது. இதையடுத்து அங்கு பலத்த காவல்துறைப் பாதுகாப்பு போடப்பட்டது. மேற்கு வங்க மாநில டிஜிபி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உரிய வகையில் சோதனை நடத்தப்பட வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

     வந்திருந்த மருத்துவர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் குளம்பி, தேநீர் வழங்கி உபசரித்த கர்ணன், மனநல பரிசோதனைக்கு உட்பட முடியாது என கூறி அவர்களை திருப்பியனுப்பினார்.

     தான் சரியான மனநிலையில் இருப்பதாக மருத்துவ குழுவிடம் கர்ணன் தெரிவித்ததோடு, மனநல பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்து காவல்துறையினரிடம் கைப்பட கடிதம் அளித்தார்.

நிருபர்களிடம் கர்ணன் கூறுகையில், நீதித்துறையின் தீவிரவாதிகள் என்று, குறிப்பிட்ட 7 நீதிஅரசர்களைத் திறனாய்வு செய்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.