Show all

இந்தியாவில் மாற்றத்தை உருவாக்குவதற்கான பேராற்றல்தானா இராகுல்! ஆம் என்கிறது; மாற்றத்தின் உந்து சக்தியான தமிழகம்

02,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில் மாற்றத்தை உருவாக்குவதற்கான பேராற்றல்தானா இராகுல்! வேலைவாய்ப்பின்மை, ஊழல், தீவிரவாதம் என நிறைய பிரச்னைகளை இந்தியா சந்தித்துவரும் வேளையில், இப்போது இந்தியாவில் மாற்றத்தை உருவாக்குவதற்கான பேராற்றல் தம்மை எல்லாத் துறைகளிலும் இந்தியர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்தியாவில் மாற்றத்தை உருவாக்குவதற்கான பேராற்றல்தானா இராகுல்? 

என்னை ஐயா என்று அழைக்காதீர்கள். ராகுல் என்றே சொல்லுங்கள். இப்படி முதல் பந்திலேயே ஆறு வெற்றிப் புள்ளிகள் குவித்;து தமிழகத்தையே திரும்பிப் பார்க்கவைத்தார் ராகுல்.

எந்தக் கேள்வியை வேண்டுமென்றாலும் கேளுங்கள்; கொஞ்சம் சிரமமானதாகவே கேளுங்கள் என்று அடுத்தடுத்து சரவெடியாய்ப் பேசத் தொடங்கினார் ராகுல் காந்தி. நாடாளுமன்றத் தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டபிறகு, தேர்தல் கருத்துப் பரப்புதலுக்காக: 

நம் பழந்தமிழர்- தொங்கிக் கொண்டிருக்கிற கோள் என்ற அடிப்படையில் ஞாயிறு என்ற கோளுக்கு பெயரிட்டனர். அதை முதல் கிழமையாக்கினர். நில்லாமல் நகர்ந்து கொண்டேயிருக்கிற கோளை நிலா என்று பெயரிட்டனர். அதை இரண்டாம் கிழமையாக்கினர். மூன்றாவதாக நம் பழந்தமிழரை விண்ணில் கவர்ந்த கோள் செவ்வாய். சிவந்து காணப்பட்ட அந்தக் கோளுக்கு செவ்வாய் என்று பெயரிட்டனர் அதை மூன்றாவது கிழமை ஆக்கினர். வானத்தில் குட்டியான இன்னொரு கோளா? சரி புதியம் என்று பெயரிடுவோம் என்று புதியம் கோளை நான்காவது கிழமை ஆக்கினர். 

பின்னாளில் கைபர் போலன் கணவாய் வழியாக தமிழகம் வந்த ஆரியர் பழந்தமிழர் வானவியலில் சாதகம், சோதிடத்தை தமதாக்கிக் கொண்டு புதியம் கோளை புத்திக்கு அதிபதியாக்கி புதன் என்று கதை கட்டினர். அந்தக் கதைகளையே மீண்டும் தூக்கிப் பிடித்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக நோட்டா எதிரியோடு சண்டையிட்ட வண்ணம் தமிழகத்தை தாமரை முளைப்பதற்கான சகதியாக்க, சில பிற்போக்கு சக்திகள் முயன்று வரும் வேளையில், 

ஒட்டு மொத்த இந்தியாவில் தமிழகத்தை அடியொற்றி மாற்றத்தை உருவாக்க எங்களை வாழ்த்தி அனுப்புங்கள் என்று கடந்த புதியம் கிழமையன்று தமிழகம் வந்தார் ராகுல் காந்தி. 

சென்னை ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் மாற்றத்திற்கான பேராற்றல், என்ற தலைப்பில் மூவாயிரம் மாணவிகள் நடுவே அவர் கலந்துரையாடினார். தெளிவான பேச்சு, மாணவிகளுக்குப் விடை சொன்ன விதம் என ஒவ்வொரு கேள்வியின் பதிலுக்கும் மதிப்பெண்களை அள்ளினார் ராகுல். எப்போதும் குர்தா உடையிலேயே காணப்படும் ராகுல், மாற்றத்திற்கான பேராற்றல் கலந்துரையாடலில் ஜீன்ஸ் - டிஷர்ட்டில் வந்து அசத்தலாகக் காட்சியளித்தார்.  

வட இந்தியாவைவிட தமிழ்நாடு உட்பட தென் இந்தியாவில் பெண்களைச் சிறப்பாக நடத்துகிறார்கள். பெண்கள் இரண்டாம் நிலை என்று கருத வேண்டாம். சமநிலை என்றே கருத வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நடுவண் அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 33 விழுக்;காடு இட ஒதுக்கீடு வழங்கப்படும். எல்லோரிடத்திலும் சமமாகப் பழக வேண்டும். நான் மேலே நின்றுகொண்டு பதிலளிப்பதும், நீங்கள் கீழே நின்று கொண்டு கேள்வி கேட்பதும் எனக்குப் பிடிக்கவில்லை. கேள்வி கேட்கும் நீங்கள் மேலே இருக்க வேண்டும். பதில் சொல்லும் நான் கீழே இருக்க வேண்டும் என்று ராகுல் சொல்லி முடிக்கும் போதெல்லாம் மாணவிகளின் கரவொலியால் கல்லூரி வளாகமே அதிர்ந்தது.

தலைமைஅமைச்சராக இருந்தாலும் சரி; ராபர்ட் வதேராவாக இருந்தாலும் சரி, எல்லோருமே விசாரிக்கப்பட வேண்டும் என்று ராகுல் சொன்னதைக் கேட்டு மாணவிகள் ஆரவாரம் செய்தனர். கிட்டத்தட்ட ஒருமணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியில், சுமார் மூவாயிரம் மாணவிகள் கலந்து கொண்டனர். பத்து மாணவிகளுக்கு மேல் கலந்துரையாடினார்கள். இதற்காக கேள்விகளை மாணவிகள் முன்னரே கல்லூரி நிர்வாகத்திடம் அளித்திருந்தனர். அதில் சிறந்த கேள்விகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களை மட்டுமே கேள்வி கேட்க அனுமதித்தார்கள். 

ராகுல் காந்தியுடனான கலந்துரையாடல் சிறப்பாக இருந்தது. அவருடைய பேச்சு உத்வேகமளிக்கும் வகையில் இருந்தது. அவருடனான கலந்துரையாடலுக்குப் பிறகு, வாக்களிப்பதில் தெளிவு கிடைத்திருக்கிறது என்கிறார்கள் ஸ்டெல்லா மாரீஸ் மாணவிகள். இந்தியாவுக்கான மாற்றங்களை இந்த மாணவிகளிடமிருந்து தொடங்கியிருக்கிறார் ராகுல். 

ஸ்டெல்லா மாரீஸ் கலந்துரையாடலுக்குப் பிறகு, இதழியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். ஜீன்ஸ் டி-ஷர்ட்டிலிருந்து வெள்ளை குர்தாவுக்கு மாறியிருந்தார் ராகுல். சென்னை லீ-மெரிடியனில் நடந்த இந்தப் இதழியலாளர் சந்திப்பை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஊடகத்துறை ஏற்பாடு செய்திருந்தது. முன்னாள் நடுவண் அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், தேசிய செய்தி தொடர்பாளர்கள் குஷ்பு, கேசவன், ஊடகத் துறை தலைவர் கோபண்ணா ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். இதழியலாளர் சந்திப்பையே நடத்தாதவர் தலைமைஅமைச்சர் மோடி. நான் அப்படியல்ல. என்ன கேள்வி வேண்டுமாலும் கேளுங்கள் என்று தொடங்கினார் ராகுல். 45 ராணுவ வீரர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானியர்கள் தங்களுக்கு எப்போதெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அதைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று நாங்கள் புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால், இதில் கேள்வி என்னவென்றால், ராணுவ வீரர்களைப் பாதுகாக்க இப்போதைய அரசு என்ன செய்தது? புல்வாமா குண்டுவெடிப்புக்குப் பின்னணியில் இருக்கும் மசூர் அசாரை விடுதலை செய்தது பாஜகதான். இதனை பாஜக விளக்க வேண்டும் என்று புல்வாமா தாக்குதல் குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையில் குறிப்பிட்டார். 

மோடியைத் தலைமை அமைச்சர் வேட்பாளர் என்று பாஜக கூட்டணி அறிவித்து விட்டது. ஆனால், காங்கிரஸ் கூட்டணியில் தலைமை அமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படாதது குறித்த கேள்விக்கு, மொத்த எதிர்க் கட்சிகளும் பாஜக மோடி, ஆர்எஸ்எஸ்ஸூக்கு எதிராகச் சண்டையிட ஒற்றுமையாக உள்ளன. நாங்கள் பாஜகவைத் தோற்கடிக்க இருக்கிறோம். காங்கிரஸ் கூட்டணியின் தலைமை அமைச்சரை மக்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். எங்களின் பணி மோடியைத் தோற்கடிப்பதுதான் என்றார்.

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்களுக்குத் தொடர்ந்து பிரச்னைகள் வந்துகொண்டிருக்கின்றன. இதற்கு என்ன தீர்வு என்று கேட்டதற்கு, இது தொடர்பாக நாங்கள் தெளிவான தேர்தல் அறிக்கையைக் கொண்டுள்ளோம். மீனவர்கள் பிரச்னைகளைத் தீர்க்க அர்ப்பணிப்புடன் கூடிய தனியான மீன்வளத் துறை அமைச்சகத்தை உருவாக்க இருக்கிறோம் என்றார் ராகுல். 

எழுவர் விடுதலைக்காகத் தமிழகத்தின் முதன்மைக் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. தமிழக ஆளுநர் ஒருவர் கையொப்பம் மட்டுமே இன்னும் தேவை என்ற சூழ்நிலையில், எழுவர் விடுதலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பான எழுவர் விடுதலையில் நாங்கள் யார் மீதும் வெறுப்பு கொண்டிருக்கவில்லை. இது சட்டரீதியான பிரச்னை. சட்டப்படியாக எந்த முடிவு  வந்தாலும் நாங்கள் அதை ஏற்கத் தயாராக இருக்கிறோம். இதை அறங்கூற்றுமன்றம்தான் முடிவுசெய்ய வேண்டும் என்றார். 

கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவது குறித்த கேள்விக்கு ப.சிதம்பரத்திடம் ஆலோசனை செய்த பிறகு பதிலளித்த ராகுல் காந்தி, பள்ளிக் கல்வி மாநில அரசிடமும், உயர் கல்வியில் சில அதிகாரங்கள் மத்திய அரசிடமும் இருக்க வேண்டும் என்றார். 

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் நாங்கள் ஆட்சிக்கு வந்து பத்தே நாட்களில் வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்து அறிவித்தோம். உழவர்கள் இந்த தேசத்தின் முதன்மையமான அங்கம் என நினைக்கிறோம். அவர்கள் இல்லாமல் இந்த தேசம் வளராது. பாஜக அப்படி நினைக்கவில்லை. ஆகவே எந்த விதத்தில் அவர்களை ஆதரிக்க முடியுமோ, அந்த விதத்தில் ஆதரிக்கிறோம். டெல்லி ஜந்தர் மந்தரில், தமிழக உழவர்கள் நடத்திய போராட்டத்தை மோடி மறந்திருக்கலாம், நான் மறக்கவில்லை. உழவர்களின் நலம்தான் நாட்டின் நலன் என்று தெரிவித்தார். 

இலங்கைத் தமிழர் குறித்த கேள்விக்கு, இலங்கையில் நடைபெற்ற படுகொலை விசயத்திற்காக காங்கிரஸ் கட்சி மீது தமிழக மக்களுக்குக் கோபம் இல்லை. இதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் கருதவில்லை. தமிழக மக்கள் மீது காங்கிரஸ் மிகுந்த அன்பு கொண்டுள்ளது. என்று பதிலளித்தார். 

இதழியலாளர் சந்திப்பு முடிந்ததும் 'மோடி, ஒரு தவறு' என்று கோபண்ணா எழுதிய புத்தகத்தை ராகுல்காந்தி வெளியிட்டார்.

சென்னையில் நடந்த இந்த இரண்டு நிகழ்வுகளையும் முடித்துக்கொண்டு, நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். சென்னையிலிருந்து திருவனந்தபுரம்வரை விமானத்தில் சென்றவர், அங்கிருந்து நாகர்கோவிலுக்கு உலங்கு வானூர்தியில் சென்றார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உட்பட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் அங்கு நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார் ராகுல். 

கலைஞர் கருணாநிதி தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதால், அவர் ஒருபோதும் மரணிக்க மாட்டார். அவர் தமிழர்களின் மொழியை பிரதிபலிக்கிறார். தமிழர்களின் வரலாற்றைப் பிரதிநிதித்துவம் செய்தவர் என்று கருணாநிதி குறித்த நினைவுகளோடு பொதுக்கூட்டப் பேச்சை தொடங்கினார். உலகின் உற்பத்தி தலைநகரமாக மாறும் வாய்ப்பு தமிழகத்திற்கு உள்ளது. தமிழர்களின் உணர்வுகளை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. தமிழகம் எப்போதும் உண்மைக்காக நின்றிருக்கிறது. உங்களுடைய போராட்டம் எப்போதும் பொய்க்கு எதிரானதாகவும், உண்மைக்கானதாகவுமே இருந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் இதற்காக உயிரைக் கொடுத்திருக்கிறார்கள் என்று தமிழர்கள் குறித்து அதிகம் பகிர்ந்துகொண்டார். 

ராகுலின் இந்த அணுகுமுறை கூட்டணிக் கட்சித் தலைவர்களை வெகுவாகக் கவர்ந்தது. சமூக வலைதளங்களில் ராகுலின் இந்த அனுசரணையான பேச்சால் வணக்கம் ராகுல்காந்தி என்ற பதிவும் சீக்கிரமே தலைப்பானது. வேலைவாய்ப்பின்மை, ஊழல், தீவிரவாதம் என நிறைய பிரச்னைகளை இந்தியா சந்தித்துவரும் வேளையில், இப்போது எல்லாத் துறைகளிலும் இந்தியர்கள் மாற்றத்திற்கான பேரற்றலைத்தான் விரும்புகின்றனர். அந்த மாற்றத்திற்கான போராற்றலாக ராகுல் காந்தி இருப்பாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், அதற்கான வலுவான அடித்தளத்தைத் தமிழகத்தில் ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார் ராகுல். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,093.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.