இன்று 29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் வணிகர்கள் மத்தியில் அதிக அளவில் சில்லறைக் காசுகள் புழக்கத்தில் உள்ளது. அதேசமயம் வணிகர்கள் வசம் உள்ள சில்லரை காசுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ள மறுக்கின்றனர் இதன் காரணமாக வணிகர்கள் தங்களிடம் பணியாற்றும் தொழிலாளர்களுக்குச் சில்லரை காசுகளை சம்பளமாக கொடுக்க வேண்டியது உள்ளது. ஆனால் சில்லரை காசுக்களை வங்கிகள் மற்றும் கடைக்காரர்கள் வாங்க மறுப்பது காரணமாக அவர்களும் பயன்படுத்த முடியவில்லை. இந்த நிலை நீடித்தால் எங்களுடைய தொழிலை நாங்கள் விடவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று வணிகர்கள் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்படுகிறது. இதனைக் கண்டித்து வணிகர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக- ஒரு புறத்தில் வடகொரிய அதிபர் கிம்ஜோங்உன் படமும், மற்றொரு புறத்தில் மோடியின் படமும் இருப்பது போன்ற சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். அந்த சுவரொட்டிகளில், உலகத்தை அழிக்காமல் ஓய மாட்டேன் என கிம் சொல்வது போன்றும், வணிகத்தை அழிக்காமல் விடமாட்டேன் என்று இந்தியத் தலைமை அமைச்சர் மோடி சொல்வது போல் வாசகங்கள் இடம் பெற்று உள்ளன. இதற்காக- தீபாவளி விழாக்காலம் என்றும் பாராமல் மாநில காவல்துறையினர் 22 வணிகர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்கை பதிவு செய்து உள்ளனர். அத்துடன் அப்பகுதியை சேர்ந்த பிரவின் குமார் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். வணிகர்கள் தரப்பில் கைது நடவடிக்கையை அடுத்து இவ்வாண்டு தீபாவளியை கொண்டாடப்போவது இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.