Show all

நான் தலித்தாக இருப்பதால் என் மீது நடவடிக்கை - நீதிஅரசர் கர்ணன்

தலித் ஆக இருப்பதால் தன் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், தனக்கு நெருக்கடிகள் அளிக்கப்படுவதாகவும் நீதிஅரசர் கர்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

     சென்னை உயர்நீதிமன்ற நீதிஅரசராக இருந்தவர் சி.எஸ்.கர்ணன். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். தலைமை நீதிஅரசர் பிறப்பித்த உத்தரவை வழக்காக எடுத்து, அதற்கு தடை விதித்தார் கர்ணன்.

     இப்பிரச்சினை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதும், கர்ணன் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு, அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.

     இதனை எதிர்த்து அவர் பிரதமர் அலுவலகம், உச்சநீதிமன்ற தலைமை நீதிஅரசர் உள்ளிட்டோருக்கு புகார் மனுக்களை அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்.

     சென்னை உயர் நீதிமன்ற நீதிஅரசர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை எழுப்பிய நீதிஅரசர் கர்ணன், ஊழல் குற்றச்சாட்டு பற்றி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். தான் ஒரு தலித் என்பதால் நீதிஅரசர் சஞ்சய் கிஷண் கவுல் தன்னை அவமரியாதை செய்வதாகவும், ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.

     இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் ஏற்கனவே இரண்டு முறை ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் நீதிஅரசர் கர்ணன் ஆஜராகவில்லை. முன்னதாக நீதிஅரசர் சி.எஸ். கர்ணனுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கடந்த பிப்ரவரி 13ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து விசாரணையை மார்ச் மாதம் 10ஆம் தேதியான இன்றைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. இன்றும் நீதிஅரசர் கர்ணன் ஆஜராகவில்லை.

     அப்போது தலைமை நீதிஅரசர் ஜே.எஸ்.கவுர் தலைமையிலான 7 பேர் அமர்வு, நீதிஅரசர் கர்ணனுக்கு பிணையில் வெளிவரக் கூடிய பிடிஆணை பிறப்பிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

     இதனையடுத்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய நீதிஅரசர் கர்ணன், தனது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார். நீதிஅரசர்கள் பற்றி அளித்த புகாருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். இது தொடர்பாக குடியரசுத்தலைவருக்கு புகார் அளிக்கப் போவதாகவும் கூறினார். தான் தலித் என்பதால் தனக்கு நெருக்கடி அளிப்பதாக குற்றம் சாட்டிய கர்ணன், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடையாணை பிறப்பிப்பேன் என்றும் அதிரடியாக தெரிவித்தார்.     

நமது இந்திய நாட்டு சட்ட நிருவாகம் பிரிட்டீஸ் ஏகாதிபத்திய அரசால் தங்களுக்கு அடிமைப் பட்டிருந்த நாடுகளின் மக்களை நிருவாகப்படுத்துவதற்காக வடிவமைக்கப் பட்ட சட்ட நிருவாகம்.

     அவர்களிடம் இருந்து விடுதலை பெற்ற நாம்-

தமது மக்களுக்காக தமது மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட சட்ட, பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலம் புதியதாக சட்ட நிருவாகத்தை முழுமையாக வடிவமைத்துக் கொள்ளாமல், சிலபல மாற்றங்களோடு-

பிரிட்டீஸ் ஏகாதிபத்திய அரசால் தங்களுக்கு அடிமைப் பட்டிருந்த நாடுகளின் மக்களை நிருவாகப்படுத்துவதற்காக வடிவமைக்கப் பட்ட சட்ட நிருவாகங்களையே பயன் படுத்தி வருகிறோம்;.

எனவே, குற்றவாளி என்று ஒருவர் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு விட்டால், அவர் காலணி நாட்டு அடிமை.

குற்றம் சாட்டியவர், அதே காலணி நாட்டு அடிமையாக இருந்த போதும், அவர் பிரிட்டீஸ் அரசு சட்ட நிருவாகத்திடம் வழக்கை கொண்டு போனதாலேயே அவர் பிரிட்டீஸ் அரச சட்ட நிருவாகத்தை அங்கிகரிக்கிறவர் என்ற நிலையில், பிரிட்டீஸ் குடிமகனுக்கு இணையான அதிகாரம் பெற்றவராகிறார்.

     நீதிமன்ற சட்ட நிருவாகத்தின் அடிப்படையில் அவர் குற்றமற்றவராக நிருபிக்கப் பட்டாலன்றி அவருக்கு விடுதலையில்லை.

     குற்றம் சாட்டியவர் விரும்பினால், எப்போது வேண்டுமானாலும் குற்றச்சாட்டைத் திரும்பப் பெற்று  விடுவிக்கலாம்.

     மற்றபடிக்கு எந்த இந்திய தர்ம நியாயங்களும் எடுபடாது.

அந்த வகையாகவே கர்ணன் தரப்பு நியாயங்களைக் கூறி அவர் நீதி அரசர் என்ற போதும் கூட சமாளிக்க இயலாமல் விழி பிதுங்கி நிற்கிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.