07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: குஜராத் சட்டமன்றத்தின் பதவிக்காலம் இன்;னும் மூன்று மாதங்களில் நிறைவடைய உள்ளது. இதனால், தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ், பா.ஜ.க இடையே இங்கு நேரடி போட்டி உள்ளது. ஆட்சியைத் தக்கவைத்து கொள்ள பாஜகவும், ஆட்சியை எட்டிப்பிடிக்க காங்கிரஸ் கட்சியும் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றன. இம்மாநில தேர்தலில் சாதி ஓட்டுகள் முக்கிய பங்காற்றும் என்பதால் இரு கட்சிகளும் சாதி தலைவர்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. பட்டேல் சாதிக்கு முறையான இடஒதுக்கீடு, வேலை வாய்ப்புகளை ஆளும் பாஜக வழங்காத நிலையில், கடந்தாண்டு குஜராத்தில் பேரணி மற்றும் போராட்டம் நடத்தி நாட்டையே திரும்பி பார்க்க வைத்தவர் ஹர்திக் பட்டேல். பட்டேல் சமுதாய வாக்குகளை கைவசம் வைத்துள்ள இவரை தன்வசப்படுத்த பா.ஜ.க எவ்வளவோ முயன்றும் நிறைவேற வில்லை. பா.ஜ.க.வையும் தலைமை அமைச்சர் மோடியையும் ஹர்திக் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில், தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் கட்சியை ஆதரிப்போம் என கூறியுள்ளார். எனினும், காங்கிரஸை உடனடியாக ஆதரிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். ராகுல் காந்தியை இன்னும் நேரில் சந்திக்கவில்லை. ஆனால், நான் சந்தித்துள்ளதாக பா.ஜ.க.வினர் அவதூறு பரப்புகின்றனர். பாகிஸ்தான் முன்னாள் தலைமை அமைச்சர் நவாஸ் ஷெரீப்பை மோடி நள்ளிரவில் சென்று பார்த்தது போல, நான் ராகுலை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.