Show all

கர்நாடக தானி குண்டுவெடிப்பு தொடர்பில்! ஒன்றிய மற்றும் மாநிலக் காவல் துறைகள் முழுவீச்சில் களமிறக்கப்பட்டுள்ளன

கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த சனிக்கிழமை தானியில், அழுத்த சமைப்புப் பாத்திரத்தில் வைத்து எடுத்துச் செல்லப்பட்ட குண்டு வெடித்தது தொடர்பில் ஒன்றிய மற்றும் மாநிலக் காவல் துறைகள் முழுவீச்சில் களமிறங்கியுள்ளன விரிவான விசாரணைக்கு.

09,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த சனிக்கிழமை தானியில், அழுத்த சமைப்புப் பாத்திரத்தில் வைத்து எடுத்துச் செல்லப்பட்ட குண்டு வெடித்ததில், ஓட்டுநர் 37 அகவை புருசோத்தம் பூஜாரியும், அதில் பயணம் செய்த 24 அகவை முகமது சரீக்கும் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக 7 தனிப்படை காவல்துறையினர் விசாரித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. முகமது சரீக்குடன் தொடர்பில் இருந்த 20-க்கும் மேற்பட்டோரிடமும் விசாரணை நடைபெறுகிறதாம். இதுதவிர, ஒன்றியப் புலனாய்வு முகமை மற்றும் நடைமுறையாக்கத் துறை அதிகாரிகள், சரீக்கின் பன்னாட்டுத் தொடர்புகள் குறித்து விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது

இந்நிலையில், மங்களூரு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு ஒரு மர்ம கடிதம் வந்தது. அதில், தானி குண்டு வெடிப்புக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அதிகம் அறியப்படாத இந்த புதிய அமைப்பு இது என்று தெரிவித்து பின்னணி குறித்து, தனிப்படை காவலர்களும், ஒன்றியப் புலனாய்வு முகமை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து கர்நாடக சட்டம்-ஒழுங்கு காவல்துறை துணைத்தலைவர் அலோக் குமார் கூறியதாவது: இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் என்ற அமைப்பிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. முகமது சரீக் படத்துடன், ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், 'எங்கள் (முஸ்லிம்) மீது வெளிப்படையான போர் அறிவிக்கப்பட்டு, கும்பல் கும்பலாக கொலைகள் நடந்துவருகின்றன.

எங்கள் மதத்தில் தலையிடும் அடக்குமுறைச் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. எங்கள் மதத்தைச் சேர்ந்த அப்பாவிகள் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு, சிறைகளில் வாடுகிறார்கள். நாங்கள் உறுதியாக இவைகளுக்குப் பதிலடி கொடுப்போம்.

எங்கள் உடன்பிறப்பு முகமது சரீக், மங்களூரு அருகேயுள்ள கத்ரி ஹிந்து கோயில் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தார். அவர் நோக்கம் நிறைவேறவில்லை என்றாலும், ஒன்றிய, மாநில விசாரணை முகமைகள் எங்களைத் தேடுவதையே வெற்றியாகக் கருதுகிறோம்.

சரீக் தயாரித்த குண்டு முன்கூட்டியே வெடித்திருந்தாலும், எதிர்காலத்தில் இதைவிட தீவிரமான நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்பதை நினைவூட்டுகிறோம். முகமது சரீக் கைதாகியுள்ளதால் மகிழ்ச்சி அடைந்திருக்கிறீர்கள். இந்த மகிழ்ச்சி குறுகிய காலமே நீடிக்கும்' என்று எழுதப்பட்டுள்ளது.

கடிதத்தில் உள்ள அமைப்பின் பெயர் புதிதாக இருப்பதால், கடிதத்தின் உண்மைத் தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது. எனவே, கடிதம் குறித்தும், அந்த அமைப்பு குறித்தும் விசாரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, சரீக் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிற நிலையில், அவர் சிகிச்சை பெற்றுவரும் தனியார் மருத்துவமனை, 'அழுத்த சமையல் பாத்திரக்  குண்டு வெடித்தபோதும், அதிலிருந்த டெட்டனேட்டர் வெடிக்கவில்லை. அது வெடித்து இருந்தால், பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும்.

ஜெலட்டின் வெடிபொருள் வெடித்ததில், அழுத்த சமையல் பாத்திர மூடி சரீக்கின் தாடையையும், முகத்தையும் கடுமையாகத் தாக்கியது. இதில் அவரது வலது கண் பார்வைத் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

உடலில் 45 விழுக்காடு தீக்காயம் உள்ளது. குறிப்பாக, கை, கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. நச்சுப் புகை தாக்கியதால் நுரையீரலும் பாதிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து, 8 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். சரீக் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுவது தவறானது.

தொடர் சிகிச்சையால், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புகிறோம். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட 25 நாட்கள் வரை ஆகலாம். அதற்குப் பிறகே காவல்துறையினர் விசாரணையைத் தொடங்குவார்கள்' என்றனர்.

இந்நிலையில், கடந்த விடுதலை நாளன்று சிமோகாவில் குண்டு வெடிப்பு நடத்தி ஒத்திகை பார்த்ததாக அகவை 24 முகமது சரீக், அகவை 22 மாஸ் அஹமது, அகவை 22 சையத் யாசின் ஆகியோர் மீது ஒன்றியப் புலனாய்வு முகாமை வழக்கு பதிவு செய்துள்ளது.

இதுதவிர, இந்தியக் கொடியை எரித்த வழக்கிலும் இந்த 3 பேர் மீதும் சிமோகா காவல்துறை, பயங்கரவாத தடுப்புச் சட்டமான 'உபா' சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்தியக் கொடியை எரித்த வழக்கில் கைதாகி, சிமோகா சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாஸ் அஹமது, சையத் யாசின் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்கவும் ஒன்றியப் புலனாய்வு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,443.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.