Show all

'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' இலங்கைத் தமிழ்ப்பாடலுக்கு உலகளாவிய வரவேற்பு! இது முதல் முறை

தமிழ் மொழியில் வெளியாகியுள்ள 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்'  பாடலை, இசை அமைத்து, பாடியவர்கள், இலங்கையை சேர்ந்த சிங்களவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். தமிழ் மற்றும் சிங்களக் கலைஞர்கள் இணைந்து, இவ்வாறான சாதனையை படைத்தமை முதலாவது ஆகும்.

08,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: இலங்கையின் திரைத்துறை தமிழ்நாடு மாதிரி எளிமையானது அல்ல. பல்வேறு அறைகூவல்களை எதிர்நோக்கியது ஆகும். இந்த நிலையில் 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' என்கிற பாடல் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள பொத்துவில் பகுதியைச் சேர்ந்த அஸ்மினின் வரிகளில் உருவான இந்த பாடல், சமூக வலைத்தளங்கள் மற்றும் முதன்மை ஊடகங்களில் இன்று அதிகளவில் ஒளிபரப்பாகி, பகிரப்படும் ஒரு பாடலாக காணப்படுகின்றது.

வலையொளியில் தரவேற்றப்பட்ட இந்த பாடல், இரு கிழமைகளில் ஐப்பது இலட்சம் பார்வையாளர்களை எட்டியுள்ளது.

இலங்கையின் தமிழ் கலைத்துறைக்கு குறுகிய காலத்தில ஐப்பது இலட்சம் பார்வையாளர்கள் என்பது உன்னத சாதனையே ஆகும்.

தமிழ் மொழியில் வெளியாகியுள்ள இந்தப் பாடலை, இசை அமைத்து, பாடியவர்கள், இலங்கையை சேர்ந்த சிங்களவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். தமிழ் மற்றும் சிங்களக் கலைஞர்கள் இணைந்து, இவ்வாறான சாதனையை படைத்தமை முதலாவது ஆகும்.

சிங்கள இசைத்துறையில் புகழ்பெற்ற விண்டி குணதிலக்கவின் குரலில், சனுக்க விக்ரமசிங்கவின் இசையில் இந்த பாடல் உருவாகியுள்ளது.

இலங்கையின் தமிழ் பாடல் உலகளவில் முதல் முதலாக எல்லோரும் பாடுகின்ற பாடலாக கவனம் பெற்றிருக்கின்றது. இலங்கையில் இருக்கின்ற கலைஞர்களுக்கு ஒரு நம்பிக்கையை தரக்கூடிய விடையமாக நான் இதனை பார்க்கின்றேன். இனிவரும் காலங்களில் இலங்கை தமிழ் பாடலுக்கும் உலகளவில் வரவேற்பு கிடைக்கும் என்று நான் நம்புகின்றேன். இலங்கையில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கின்ற பல தமிழ் கலைஞர்களுக்கு, நம்பிக்கையை ஏற்படுத்தும் பாடலாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. எங்களைப் போன்று வளர்ந்து வரும் கலைஞர்களை ஆதரியுங்கள். எதிர்காலத்தில் நல்ல பாடல்களை தருவோம் என்று நம்புகிறோம். என்று அஸ்மின் தெரிவிக்கிறார்.

இலங்கையைச் சேர்ந்த பாடலாசிரியர் அஸ்மின் விஜய் அன்டனியின் நான் திரைப்படத்தில் இடம்பெற்ற, தப்பெல்லாம் தப்பே இல்லை என்ற பாடலின் ஊடாக அஸ்மின் பத்து ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்த்திரையுலகில் தடம் பதித்துள்ளவர்.

தென்னிந்தியாவில் உருவாகிய சுமார் 25 திரைப்படங்களுக்கு அஸ்மின் பாடலாசிரியராக கடமையாற்றியுள்ளார். தமிழ்த் திரையுலகிற்கு வெளியிலும், அஸ்மின் பல பாடல்களை எழுதி, மக்களின் வரவேற்புகளை பெற்றுக்கொண்டார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கான இரங்கல் பாடலை, பொத்துவில் அஸ்மின் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' என்ற பாடலை, பெண்களுடைய காதல் தோல்வியின் வலியை சொல்கின்ற பாடலாக தமிழில் எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அந்தப் பாடலை தமிழ்நாட்டில் இருந்து எழுதியுள்ளார் அஸ்மின்;. அந்தப் பாடல் இன்று மக்கள் இடையே பேரறிமுகப் பாடலாக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் கொண்டாடுகிறார் அஸ்மின்;.

இந்தப் பாடல் பெண்களுடைய மன உணர்வை, அவர்களுடைய வலியை, அவர்களுடைய கவலையை சொல்கின்ற பாடலாக இருக்கின்றமையினால், உலகளவில் வாழும் பெண்கள் இந்த பாடலை விரும்புகிறார்கள என நினைக்கின்றேன் என்று தெரிவிக்கிறார் அஸ்மின்

இந்த பாடல் தொடர்பில் பாடகி விண்டி குணதிலக்க, 'ஐயோ சாமி' பாடலுக்கு தற்போது நிறைய வரவேற்பு கிடைத்துள்ளது. அது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. இது எனது மூன்றாவது வெற்றிப் பாடல். எனது முதலாவது தமிழ் பாடல் இது. இது எனக்கு மிகுந்த அறைகூவலாக அமைந்தது. இதற்கான இசையை சனுக்க விக்ரமசிங்க அமைத்திருந்தார். பாடல் வரிகளை பொத்துவில் அஸ்மின் எழுதியிருந்தார். இந்த பாடலில் ஒலிப்பை சரியாக பாடுவதற்கு அஸ்மின் உரிய ஒத்துழைப்புக்களை எனக்கு வழங்கியிருந்தார். இந்தப் பாடலை எவ்வாறு பாட வேண்டும் என்பது தொடர்பில் குரல் பதிவுகளை அவர் குறுந்தகவல் மூலம் அனுப்பினார். அவரது குரல் பதிவுகளை கேட்டே, நான் வரிகளை படித்தேன். இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்புக்கு உண்மையாகவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது இலகுவான விடையம் இல்லை. அது என்னை மகிழ்வித்துள்ளது என்று குறிப்பிடுகின்றார்.

இசையமைப்பாளர் சனுக்க விக்ரமசிங்க, இந்த பாடல் தற்செயலாக உருவானது. விண்டிக்காக வேறொரு பாடலை தயாரித்துக் கொண்டிருந்த தருணத்தில், இசை பலகையில் திடீரென ஒரு இசையை கேட்க கூடியதாக இருந்தது. அதன் பின்னரே இந்தப் பாடலை தயாரிக்க நான் நினைத்தேன். இந்த இசைக்கு தமிழ்ப் பாடல் சரியாக இருக்கும் என நினைத்தேன். அதன்பின்னர் பொத்துவில் அஸ்மின் நினைவிற்கு வந்தார். அவர் எமக்கு தேவையான உதவிகளை வழங்கினார். குறிப்பாக ஒலிப்புக்களை சரி செய்வதற்கு உதவி செய்தார். பாடல் மிகவும் அழகாக வந்துள்ளது. நாம் நினைத்துப் பார்க்காத அளவுக்கு இந்தப் பாடல் வரவேற்பை பெற்றுக்கொண்டுள்ளது.

இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வேறொரு மொழியில் (தமிழில்) பாடலைத் தயாரித்தது இதுவே முதல் முறை. அதேபோன்று, வேறொரு கொண்டாடிகள் தளத்திற்கு இந்தப் பாடலை நாம் வழங்கியுள்ளோம். இந்தப் பாடலைப் பார்த்து, சிங்களம், தமிழ், முஸ்லிம், இந்தியர்கள், பங்களதேஷ் உள்ளிட்ட பல நாடுகள், பல மக்கள், பல இனத்தவர்கள் எமக்கு ஆதரவை வழங்கினார்கள். வலையொளியில் ஐம்பது இலட்சம் பார்வையாளர்களை இந்த பாடல் எட்டியுள்ளது. நான்கு பாடல் பட்டியல்களில் முதலிடத்தில் இந்த பாடல் உள்ளது. இலங்கையின் முதல் 100 பட்டியலில் ஆப்பிள் இசையில் முன்னிலையில் உள்ளது. மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவிக்கிறார். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,442.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.