Show all

வீழ்ச்சியில் காங்கிரஸ்! அதிருப்தி தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை

காங்கிரசில்- புதிய கட்சித் தலைமை, கட்சி கட்டமைப்பை அடியோடு மாற்றுவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்க அதிருப்தி தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

27,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ள நிலையில் கட்சி மேலிடத்துக்கு எதிரான கலகக் குரல்கள் வெடித்துள்ளன. இதனைத் தொடர்ந்து புதிய கட்சித் தலைமை, கட்சி கட்டமைப்பை அடியோடு மாற்றுவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்க அதிருப்தி தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி பேரளவான வெற்றி பெற்று காங்கிரசிடம் இருந்து ஆட்சியை பறித்திருக்கிறது. உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. 

உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 2 இடங்களில்தான் காங்கிரஸ் வெற்றி பெற முடிந்தது. அதன் வாக்கு விழுக்காடும் வெறுமனே 2.4 விழுக்காடாக மோசமான நிலையில் உள்ளது. இத்தனைக்கும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில்தான் உத்தரப்பிரதேசத்தில் தேர்தலை அந்தக் கட்சி எதிர்கொண்டது. எத்தனையோ போராட்டங்கள், கருத்துப்பரப்புதல்கள் என பிரியங்கா காந்தி தீவிரம் காட்டிய போதும் மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் கட்சியால் பெற முடியவில்லை. 

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்தது காங்கிரஸ். ஆனால் காங்கிரஸ் கட்சியில் நிலவிய அதி உச்ச குழுச்சண்டை இப்போது அக்கட்சியை படுகுழிக்குள் தள்ளிவிட்டது. குறிப்பாக நவ்ஜோத்சிங்கின் ஆட்டத்தை காங்கிரஸ் மேலிடம் கண்டும் காணாமல் அல்லது கட்டுப்படுத்தாமல் விட்டதால் அம்மாநிலத்தில் பேரழிவை சந்தித்துள்ளது காங்கிரஸ். 

இத்தனைக்கும் ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான வேளாண்பெரு மக்களின் போராட்டத்தின் மூலமான பேரளவான ஆதரவை காங்கிரஸ் தக்க வைக்கக் கூடிய வாய்ப்பு இருந்தது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக அகாலி தளம் பாஜகவுடனான உறவை முறித்து கொண்ட போது அதனுடன் கூட்டணி வைக்க கதவுகள் திறந்திருந்தன. ஆனால் அகம்பிடித்த காங்கிரஸ் தலைவர்களின் போக்குகளால் உள்ளதும் போச்சுடா என்ற நிலையில் உள்ளது காங்கிரஸ்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் பாஜக மீது மக்களுக்கு அதிருப்தி இருந்தது. அதனைத்தான் முதல்வர் புஷ்கர் தாமி படுதோல்வியும் காட்டுகிறது. ஆனால் மக்களின் அதிருப்தியை அறுவடை செய்து ஆட்சியை பிடிப்பதில் கவனம் செலுத்தவில்லை காங்கிரஸ் தலைவர்கள். குறிப்பாக ஹரீஷ் ராவத் போன்ற மூத்தவர்கள் முதல்வர் நாற்காலிக்காக அடித்துக் கொண்டதனை மக்கள் விரும்பவில்லை. அதனால்தான் ஹரீஷ் ராவத்தையும் தோற்கடித்திருக்கின்றனர் வாக்காளர்கள்.

மணிப்பூர், கோவா மாநிலங்களில் கடந்த தேர்தலின் போதே காங்கிரஸ் மேலிடம் கோட்டைவிட்டுவிட்டது. இந்த மாநிலங்களில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் கட்சியைவிட்டே வெளியேறிப் போயினர். பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் என தங்களுக்கு வாய்ப்பான கட்சிகளில் அந்த தலைவர்கள் ஐக்கியமாகினர். இதனால் மணிப்பூரிலும் கோவாவிலும் இருந்த இடம் தெரியாமல் காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டுவிட்டது.

இந்நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசிதரூர் தமது கீச்சுப் பக்கத்தில், காங்கிரஸ் கட்சியில் சீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டிய தருணம் இது. இப்போதாவது மக்கள் நம்பிக்கையைப் பெறக் கூடிய செயல்திட்டத்தை முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். 

அதேநேரத்தில் தேர்தல் தோல்வி குறித்து செயற்குழுவில் விவாதிக்க வேண்டும் என்கிற சடங்கு குரல்களும் காங்கிரசில் கேட்கிறது. இத்தகைய நடைமுறைகள் ஒருபோதும் காங்கிரசுக்கு உயிர்வளியைக் கொடுக்கப் போவது இல்லை. இதனிடையே காங்கிரசில் சீரமைப்பு தேவை. வலுவான தலைமை தேவை என வலியுறுத்தும் அதிருப்தி தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,184.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.