Show all

உத்தவ் தாக்கரே அதிரடி! மதச்சார்பின்மைக்கு அரசியலமைப்பு கொடுத்துள்ள வரையறை சிவசேனாவின் நிலைப்பாடு

மதச்சார்பின்மை (செக்யூலரிசம்) குறித்து எங்களிடம் கேள்வியெழுப்புவர்கள் அதன் பொருளை அரசியலமைப்புச் சட்டத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மகாராஷ்டிர மாநில முதல்வராக பொறுப்பேற்ற உத்தவ் தாக்கரேயின் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம், மும்பையில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் நேற்றிரவு நடைபெற்றது. உத்தவ் தாக்கரேவுடன் மாநில அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 6 அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இக்கூட்டத்துக்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்த உத்தவ் தாக்கரே, புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தின் முதல் முடிவாக, சத்ரபதி சிவாஜி ஆட்சிக் காலத்தில் மகாராஷ்டிராவின் தலைநகராக இருந்த ராய்காட் நகரை மேம்படுத்த 20 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

உழவர் பெருமக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் இந்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்த விவரங்களை இரண்டு நாட்களில் தரும்படி அரசு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளேன். அவர்கள் அளிக்கும் தகவலின்படி உழவர்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

சிவசேனா தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படும் என்பதை மாநில மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற முன்னுரிமை அளிக்கப்படும் என்று உத்தவ் தாக்கரே கூறினார்.

தற்போது மகாராஷ்டிராவில் ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துக்காக, மதச்சார்பற்ற கூட்டணியாக கருதப்படும் காங்கிரஸ் -தேசியவாத காங்கிரசுடன் கைக்கோர்த்திருப்பதை, பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. 

அந்த அடிப்படையில், ‘சிவசேனா தற்போது மதச்சார்பற்ற கட்சியாகிவிட்டதா’ என செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு, “மதச்சார்பின்மை (செக்யூலரிசம்) குறித்து எங்களிடம் கேள்வியெழுப்புவர்கள் அதன் பொருளை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதாவது, மதச்சார்பின்மைக்கு நம் அரசியலமைப்பில் என்ன விளக்கம், வரையறை கொடுக்கப்பட்டுள்ளதோ, அதுதான் மதச்சார்பின்மை பற்றிய சிவசேனாவின் நிலைப்பாடு" என உத்தவ் தாக்கரே அதிரடியாக பதிலளித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,352.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.