Show all

தமிழகத்தில் ஏற்பட்டது கடுமையான பாதிப்புகள்தாம் என நடுவண் அரசு அறிவிப்பு

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டது கடுமையான பாதிப்புகள் தாம் என்று நடுவண் அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கமாக அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் முடிய நீடிக்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை கால தாமதமாக 28.10.2015 அன்று துவங்கி பின்னர் ஒரு சில நாட்களில் மிக அதிக அளவு கனமழை பொழிந்தது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும், மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாகவும் தமிழகத்தில் நான்கு கட்டங்களாக கன மழைபெய்தது. பெரு மழையின் காரணமாக பல ஏரிகள் நிரம்பியதால், உபரிநீர் திறந்துவிடப்பட்டது. ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து திறந்து விடப்பட்டநீரினால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. கடலூர்மாவட்டத்தில், கெடிலம், பரவனாறு, செங்கால் ஓடை ஆறுகளில் கன மழை காரணமாகவௌ;ளப் பெருக்கு ஏற்பட்டது. பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக தமிழகத்தில் பலமாவட்டங்கள், அதிலும் குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும்கடலூர் மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின.

முதல் கட்ட மழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு 23.11.2015 அன்று நான் ஒரு கடிதம் எழுதினேன். அதில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தெரிவித்ததுடன், தமிழக வெள்ளச்சேதங்களை பார்வையிட மத்தியக் குழுவினை அனுப்பி வைக்க கேட்டுக் கொண்டதுடன் உடனடியாக நிதி உதவி அளிக்கும்படி கேட்டுக் கொண்டேன். மத்திய குழு வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டு சென்ற பின், 1.12.2015 முதல் பெய்த கன மழையின்காரணமாக வட கடலோர மாவட்டங்கள் மீண்டும் பாதிப்புக்குள்ளாயின. இதனைத் தொடர்ந்து, பாரதப் பிரதமர் 3.12.2015 அன்று வெள்ளப்பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு, பின்னர் தமிழக வெள்ளச் சேதங்கள்குறித்து என்னுடன் நேரில் விவாதித்தார்கள். அப்போது வெள்ளச் சேதங்கள் பற்றி நான்விரிவாக எடுத்துக் கூறியதுடன், தமிழகத்திற்கு ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தேசியபேரிடர் என அறிவிக்கும்படி பிரதமரை கேட்டுக் கொண்டேன்.

எனது கோரிக்கையினை ஏற்ற நடுவண் அரசு, தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளபாதிப்புகளை கடுமையான பாதிப்புகள் calamity of severe nature என அறிவித்துள்ளது. அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளுர் தொகுதி மேம்பாட்டுத்திட்ட நிதியிலிருந்து சீரமமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்காக ரூ.1 கோடி ரூபாய் வரையிலான பணிகளை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ள பரிந்துரைக்கலாம் என நாடாளுமன்றச் செயலகம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது குறித்து ஒப்புதல் கடிதங்களை மத்திய புள்ளியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கும்படி அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தேவைப்படும் சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகள் குறித்த விவரங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கும்படி நான் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்தச் சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்காக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதிமேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி ரூபாயை வழங்கும்படி நான் கேட்டுக் கொண்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.