Show all

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் ஆறு கிழமையாக இல்லாத திடீர் குழப்பம் கடைந்தெடுத்த மோசடியே! ச.இராமதாசு

15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி நீர் பங்கீட்டு வழக்கில், நடுவண் அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. அதற்கு ஆறு வார கால அவகாசமும் அளித்தது. ஆனால், இன்றுடன் காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், இதுவரை நடுவண் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

காவிரிப் பிரச்சினை தொடர்பான வழக்கில் உச்சஅறங்கூற்றுமன்றம் இறுதித்தீர்ப்பை செயல்படுத்துவதற்கான அமைப்பை அடுத்த ஆறு வாரங்களில் அமைக்க வேண்டும் என்று நடுவண் அரசுக்கு ஆணையிட்டிருந்தது. 

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் பல இடங்களில் 'திட்டம்' என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திட்டம் என்பதே காவிரி மேலாண்மை வாரியம் தான் என்பதை நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் 216 முதல் 236 வரை நீளும் எட்டாவது அத்தியாயத்தை முழுமையாகப் படித்தால் உணர்ந்து கொள்ள முடியும்.

இதற்கெல்லாம் மேலாக, நாற்பத்தியோரு நாட்களுக்கு முன்பு தீர்ப்பளித்த வழக்கில் தமிழகத்தின் கோரிக்கையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தான். அவ்வாறு இருக்கும் போது உச்சஅறங்கூற்றுமன்றம் குறிப்பிட்டுள்ள திட்டம் என்பது மேலாண்மை வாரியம் என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? ஒருவேளை இதில் நடுவண் அரசுக்கு ஏதேனும் ஐயம் இருந்தாலும் கூட தீர்ப்பு வெளியான சில நாட்களிலேயே உச்சஅறங்கூற்றுமன்றத்திடம் நடுவண் அரசு விளக்கம் கேட்டிருக்க முடியும். ஆனால், ஆறு வாரங்கள் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது உச்சஅறங்கூற்றுமன்றத்தை அணுகுவது நம்ப வைத்து கழுத்தை அறுக்கும் செயலாகத்தானே இருக்க முடியும்.

இந்த விசயத்தில் உச்சஅறங்கூற்றுமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாகிவிடக் கூடாது என்பதற்காகவே இப்போது விளக்கம் கேட்கும் மனுவை பதிகை செய்ய நடுவண் அரசு தீர்மானித்துள்ளது. உச்சஅறங்கூற்றுமன்றத் தீர்ப்பின்படி அமைக்கப்பட வேண்டியது காவிரி மேலாண்மை வாரியமா? குழுவா என்பது தொடர்பாக நடுவண் அரசுக்கு எந்தக் குழப்பமும் இல்லை; இவ்விசயத்தில் நடுவண் அரசு கடைபிடிப்பது காலம் கடத்தும் அணுகுமுறை தான் என்பதற்கு ஆயிரம் எடுத்துக் காட்டுகளைக் கூற முடியும்.

காவிரி மேலாண்மை வாரியம் குறித்த விசயத்தில் நடுவண் அரசு முதன் முதலில் கருத்துக் கூறியது ஆங்கில நாளிதழில் வெளியாகியிருந்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் சிறப்பு நேர்காணலில். ஒரு இடத்தில் கூட திட்டம் என்று குறிப்பிடவில்லை; காவிரி மேலாண்மை வாரியம் என்று தான் குறிப்பிட்டிருந்தார். அதன்பின் டெல்லியில் நடைபெற்ற மாநில தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி உச்சஅறங்கூற்றுமன்றத் தீர்ப்பில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று கர்நாடகம் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் கூட, 'இந்தப் பிரச்சினைக்கு மற்ற 3 மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்டு முடிவெடுக்கப்படும். இதற்காக உச்சஅறங்கூற்றுமன்றத்தை அணுகும் எண்ணம் நடுவண் அரசுக்கு இல்லை' என்று தான் மத்திய நீர்வளத் துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் விளக்கமளித்திருந்தார்.

கடைசியாக நேற்று முன்நாள் ஒரு செய்தி தொலைக்காட்சிக்கு சிறப்பு நேர்காணல் அளித்த அவர், 'காவிரி திட்டம் என்பதும், காவிரி மேலாண்மை வாரியம் என்பதும் வேறு வேறல்ல. இரண்டும் ஒன்று தான்' என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தார். ஆனால், அடுத்த 2 நாட்களுக்குள் எல்லா தெளிவும் விலகி, குழப்பம் சூழ்ந்து விட்டதைப் போல உச்சஅறங்கூற்றுமன்றத்திடம் விளக்கம் கேட்கப் போவதாக நடுவண் அரசு கூறுவதைப் பார்க்கும் போது, 'நல்ல நாடகம் நடக்குது' என்பதை உணர்ந்து நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

காவிரிப் பிரச்சினையில் நடுவண் அரசின் துரோகத்திற்கு சற்றும் குறையாதது மாநில அரசின் துரோகம். தமிழகத்தை நடுவண் அரசு ஏமாற்றுகிறது என்பதும், துரோகம் செய்கிறது என்பதும் நன்றாகத் தெரிந்தும் அதற்கு எதிராக வாயைத் திறப்பதற்குக்கூட தமிழக ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. 

மாறாக சொல்லிக் கொடுக்கப்பட்ட கிளிப் பிள்ளையைப் போல, 'உச்சஅறங்கூற்றுமன்றம் கொடுத்த அவகாசம் முடியும் வரை காத்திருப்போம்' என்பதையே மீண்டும், மீண்டும் கூறி வந்தனர். உச்சஅறங்கூற்றுமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த வலியுறுத்தி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி நடுவண் அரசுக்கு அழுத்தம் தரலாம் என்ற யோசனை அவர்களின் காதுகளில் விழவில்லை.

உச்சஅறங்கூற்றுமன்றம் விதித்தக் கெடு இன்றுடன் முடிவடைந்து விட்ட நிலையில் நாளைக்கு ஆட்சியாளர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? அறங்கூற்றுமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து விட்டு அமைதியாக ஊழல் செய்வதைத் தவிர வேறு எதுவும் செய்யமாட்டார்கள். இவர்கள் தான் தமிழகத்தின் சாபம். காவிரிப் பிரச்சினையில் நடுவண், மாநில அரசுகள் கூட்டணி அமைத்துக் கொண்டு இழைத்த துரோகத்தை தமிழக மக்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். எனவே, உச்சஅறங்கூற்றுமன்றத்தில் விளக்க மனு பதிகை செய்து மக்களை ஏமாற்றுவதை விடுத்து உச்சஅறங்கூற்றுமன்றம் விதித்த கெடு இன்று இரவுடன் முடிவடைவதற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடுவண் அரசு முன்வர வேண்டும் என்று ராமதாஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,741.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.