ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ப்பிணியை டிராக்டர் ஏற்றி கொலை செய்துவிட்டு, தப்பியோடிய நிதி நிறுவன ஊழியர்கள் நான்கு பேர்களை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. 32,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5124: ஜார்க்கண்ட் மாநிலம் ஹசரிபாத் மாவட்டம் பரியநாத் கிராமத்தை சேர்ந்த உழவர் மிதிலேஷ் மேதா. மாற்று திறனாளியான மிதிலேஷ் தனியார் நிதி நிறுவனத்தில் 3 லட்ச ரூபாய் கடன்பெற்று டிராக்டர் வாங்கியுள்ளார். கடனில் இன்னும் 1.30 லட்சம் பாக்கி இருந்துள்ளது. இதனிடையே, பாக்கி தொகையை உடனடியாக செலுத்தும்படி நிதி நிறுவன ஊழியர்கள் மிதிலேசுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில், பாக்கி 1.30 லட்ச ரூபாயை உடனடியாக செலுத்தும்படியும், இல்லையென்றால் டிராக்டரை திருப்பி எடுத்துக்கொள்வோம் என்றும் மிதிலேசுக்கு முந்தாநாள் நிதி நிறுவனத்தில் இருந்து செல்பேசிக்குச் சேதி வந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மிதிலேஷ் தனது கிராமத்தில் பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தி இருந்த தனது டிராக்டரை பார்க்க சென்றார். அவருக்கு உதவியாக மிதிலேசின் 27 அகவை மகளும் உடன் சென்றார். மிதிலேசின் மகள் 3 மாதம் கர்ப்பிணி ஆவார். மிதிலேஷ் பெட்ரோல் பங்க் அருகே செல்ல அங்கு ஏற்கனவே வந்திருந்த நிதி நிறுவன ஊழியர்கள் டிராக்டரை எடுத்து செல்ல முற்பட்டனர். அவர்களை தடுக்க மிதிலேஷின் மகள் முயற்சித்தார். ஆனால், நிதி நிறுவன ஊழியர்கள் டிராக்டரை வேகமாக இயக்கி மிதிலேஷின் மகள் மீது மோதி அவர் மீது ஏற்றியுள்ளனர். டிராக்டர் மோதியதில் அதன் டயரில் சிக்கிய கர்ப்பிணியான மிதிலேஷின் மகள் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். கர்ப்பிணியை டிராக்டர் ஏற்றி கொலை செய்த நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இந்தக் கொலை குறித்து தகவலறிந்த காவல்துறையினர், அடாவடி நிகழ்வு இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கர்ப்பிணி பெண்ணை டிராக்டர் ஏற்றி கொலை செய்துவிட்டு தப்பியோடிய நிதி நிறுவன ஊழியர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,374.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.