05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசு 6 கிழமைக்;குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நடுவர் மன்ற வழக்கில் உச்சஅறங்கூற்றுமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி காவிரி ஆற்றை தனிப்பட்ட ஒரு மாநிலம் மட்டும் உரிமை கொண்டாட முடியாது என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது. அதாவது 6 கிழமைகளுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என நடுவண் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழ்தொடர்ஆண்டுகள் 4993 மற்றும் 5025களில் (1892, 1924) போடப்பட்ட ஒப்பந்தங்கள் செல்லுபடியாகும் என்றும் உச்ச அறங்கூற்றுமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா புதிய அணை கட்ட முடியாது என ஒப்பந்தத்தில் உள்ளது என்றும் உச்சஅறங்கூற்று மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாகவும் அறிவித்துள்ளது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி வரும் 15 ஆண்டுகளுக்கு எந்த முரண்பாடுகளும் எழாமல் காக்க வேண்டியது காவிரி மேலாண்மை வாரியத்தின் கடமை; காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது நடுவண் அரசின் உடனடி கடமை. இலாப நட்டங்களோடு முரண்டு செய்யாமல் தமிழகம் இதை ஏற்றுக் கொள்ளும். கருநாடக அரசியல் குசும்பர்கள் சிலர் தங்கள் சொந்த ஆதாயங்களுக்காக கருநாடக மக்களை தவறாக வழிநடத்தாமல் அமைதி காத்தால் 15 ஆண்டுகள் நல்ல முறையில் போகும். காவிரி மணல் திருட்டை மட்டும் தமிழக அரசு பாதுகாக்குமேயானால், தமிழகத்திற்கு நல்லது. பாலாறிலிருந்து பவானி வரை நிலத்தடி நீரைப் பாதுகாக்க தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,701
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.