Show all

ஆணாதிக்கம்! சபரிமலையில் 2பெண்கள் போராட்டம்; அந்தப் பெண்கள் வீடுகள் முன், பாஜக ஹிந்துத்துவா அமைப்பினர் போராட்டம்

09,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளாவைச் சேர்ந்த இரு பெண்கள் சபரிமலையில் தரிசனத்திற்கு அனுமதிக்கும் வரை திரும்பிச் செல்ல போவதில்லை என நடுவழியில் அமர்ந்து முழக்கப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

சபரிமலைக்கு அனைத்து அகவை பெண்களும் செல்லலாம் என்ற உச்ச அறங்கூற்றுமன்ற உத்தரவை தொடர்ந்து, சென்னையின் மனிதி அமைப்பைச் சேர்ந்த 11 பெண்கள் நேற்றுச் சபரிமலைக்கு சென்றனர். ஆனால் அவர்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் பாஜக ஹிந்துத்துவா அமைப்பினர் தடுத்தி நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் கேட்டுக்கொண்டதன் பேரில் 11 பெண்களும் கோயிலுக்கு செல்லும் தங்கள் முடிவை கைவிட்டனர். பின்னர் காவல்துறையினர் அவர்களை வாகனத்தில் ஏற்றி தமிழக எல்லை வரை கொண்டு வந்து பாதுகாப்பாக விட்டுவிட்டு திரும்பிச் சென்றனர். 

இந்நிலையில் கேரளாவின் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து மற்றும் மலப்புரத்தை சேர்ந்த கனக துர்கா என்ற 2 பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்று சன்னிதானம் செல்ல ஒரு கி.மீட்டர் தூரம் உள்ள நிலையில், அப்பாச்சிமேடு மற்றும் மரக்குட்டம் பகுதிகளில் இருந்த பாஜக ஹிந்துத்துவா அமைப்பினர் அவர்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், தங்களை தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கும் வரை திரும்பிச் செல்ல போவதில்லை எனக்கூறி, அப்பெண்களும் நடுவழியில் அமர்ந்து முழக்கப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதுகுறித்து அப்பெண்கள் கூறுகையில், தரிசனத்திற்காக நாங்கள் இயங்கலை மூலம் விண்ணப்பித்தோம். நாங்கள் எங்களின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலேயே வந்துள்ளோம். தரிசனத்திற்கு அனுமதிக்கும் வரை நாங்கள் திரும்பிச் செல்ல மாட்டோம் என்று உறுதிபட தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையே கேரள தேவசம் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், கோயிலில் தற்போது ஒரு லட்சம் பக்தர்கள் இருப்பதால் அசம்பாவிதங்கள் நேராமல் இருக்க 2 பெண்களையும் திருப்பி அனுப்பும்படி காவல்துறையினரை அறிவுறுத்தி உள்ளார். 

இதற்கிடையில் சபரிமலை கோயிலுக்கு செல்ல முயலும் கனக துர்கா மற்றும் பிந்து ஆகியோரின் வீடுகள் முன் பாஜக ஹிந்துத்துவா அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சபரிமலை பகுதியில் பரபரப்பு மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,011.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.