Show all

ஏன் இந்த இரண்டாம் பாக மோகம்! விஜய் சேதுபதியை இரண்டாம் பாகம் ஒன்றில் நடிக்கவைக்க முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன

01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் அண்மைக் காலமாக அதிக அளவில் வெளியாகிவருகின்றன. முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் பாகம் வெற்றி பெறுகின்றனவா என்றால் இல்லை என்றே பதில் வருகிறது. ஆனாலும் இரண்டாம் பாகங்களின் அறிவிப்பு குறையவில்லை. 

தற்போது முதன்முறையாக விஜய் சேதுபதியை இரண்டாம் பாகம் ஒன்றில் நடிக்கவைக்க முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.

விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் இணைந்து நடித்த படம் சேதுபதி. காவல் துறை அதிகாரியாக விஜய் சேதுபதி நடித்திருந்த அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. படத்தை அருண்குமார் இயக்கியிருந்தார். இவர் ஏற்கெனவே பண்ணையாரும் பத்மினியும் படத்தை விஜய் சேதுபதியைக் கதைத்தலைவனாகக் கொண்டு இயக்கியிருந்தார். தற்போது இந்தக் கூட்டணி சிந்துபாத் திரைப்படத்தை உருவாக்கிவருகிறது. இந்தப் படத்தை வான்ஸன் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிறுவனம் சேதுபதி படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க ஆர்வம்காட்டி வருகிறது. இது தொடர்பாக விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படம் வெளியாவது உறுதியானால் விஜய் சேதுபதியைக் கதைத்தலைவனாகக் கொண்டு அருண்குமார் இயக்கும் நான்காவது படமாக அமையும்.

விஜய் சேதுபதி நடிப்பில் தொடர்ந்து மாமனிதன், சிந்துபாத், கடைசி விவசாயி ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. விஜய் சந்தர், எஸ்.பி.ஜனநாதன், வெங்கடகிருஷ்ண ரோகன், பிரசாத் தீனதயாள் உள்ளிட்டோர் இயக்கும் படங்களில் நடிக்கவுள்ளார். 

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் ஓடவில்லையென்றாலும் நிருவாக அடிப்டையாக சில ஆதாயங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆதாயம் இல்லாமல் தயாரிப்பாளர்கள் ஆற்றில் இறங்குவார்களா என்ன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,092.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.